Monday, December 20, 2010

பெண்ணைப் பெற்றவர்களே பெருமாளை தரிசியுங்கள்!


பெண்ணைப் பெற்று திருமணம் செய்து கொடுக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர் நாகப்பட்டினம் சவுந்தரராஜப் பெருமாளை தரிசித்து பலனடையலாம்.

தல வரலாறு: உத்தானமகாபாத மகாராஜாவின் மகன் துருவன். பெருமாள் பக்தரான இவர், சிற்றன்னையால் ராஜ்யம் தரப்படாமல் அவமானப்படுத்தப்பட்டார். இதனால், ராஜ்யப் பதவியை விட உயர்ந்த பதவி தனக்கு வேண்டுமென கோரி, சவுந்தர்ய ஆரண்யம் என்னும் காட்டில் பெருமாளை வேண்டி கடும் தவம் செய்தார். சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் கருடாழ்வார் மீது, பேரழகு பொருந்தியவராக பெருமாள் காட்சி அளித்தார். அவர் துருவன் வேண்டிய வரத்தை அளித்து வானமண்டலத்தில் துருவ நட்சத்திரம் ஆக்கினார். அழகாகத் தோன்றிய பெருமாளுக்கு "சவுந்தரராஜப் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது.

பெருமாளின் திவ்யதரிசனம் கண்ட துருவன், ""என் வாழ்க்கையில் எப்போதும் உன்னுடைய ஞாபகம், உன்னுடைய சிந்தனையாக இருக்க வரம் வழங்க வேண்டும், இந்த இடத்தில் எனக்கு அனுக்கிரஹம் செய்தது போல், உன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களுக்கும் இதே இடத்தில் தங்கி அனுக்கிரஹகம் செய்ய வேண்டும்', என்று வேண்டினார். பெருமாளும் அங்கேயே சிலை வடிவில் தங்கினார். பிற்காலத்தில் மன்னர்கள் பெருமாளுக்கு கோயில் எழுப்பினர். புராணச் சிறப்பும், பாடற்சிறப்பும் பெற்ற இந்தக் கோயிலில் நாகர், சோழர், பல்லவர்களைத் தொடர்ந்து தஞ்சையை ஆண்ட நாயக்க மராட்டிய மன்னர்களும் திருப்பணி செய்து விரிவுபடுத்தினர்.

கன்னிகா தான பிரார்த்தனை: சாலீசுக மகாராஜன் என்பவனுக்கு, நாக கன்னிகை என்னும் பெண்ணை, பெருமாளே தந்தையாக இருந்து கன்னிகாதானம் செய்து கொடுத்த தலம் இது. இதனால் பெண்ணைப் பெற்று திருமணம் செய்து கொடுக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர், இந்தப் பெருமாளையும், சவுந்தரவல்லி தாயாரையும் பிரார்த்தித்து பலனடையலாம். தங்கள் பெண்களை கோயிலுக்கு அழைத்து சென்று பால், தயிர், நெய் அபிஷேகம் செய்து மனமுருகி வணங்கி பிரார்த்தித்தால் பலன் கிடைக்கிறது.

நாகதோஷம் நீங்கும் தலம்: "ஸாரம்' என்றால் பாம்பு. பாம்பாகிய நாகராஜனால் உருவாக்கப்பட்டது இந்தக் கோயில் என்கிறது ஒரு புராணத்தகவல். இங்குள்ள தீர்த்தம் "ஸார புஷ்கரணி' எனப்படுகிறது. ராகு, கேது ஆகிய நாகதோஷம் உள்ளவர்கள், ஸொர தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டால், தோஷ நிவர்த்தி கிடைப்பதாக நம்பிக்கையுள்ளது. இங்குள்ள பெருமாள் விஷ்ணு சகஸ்ரநாம மாலையை அணிந்திருக்கிறார். எனவே ஒரு முறை விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் பத்துமடங்கு பலன் கிடைக்கிறது. மேலும், மார்பில் மகாலட்சுமியையும் தாங்கியுள்ளார்.

கோயில் சிறப்பு: திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலம். 108 திவ்யதேசங்களில் 19வது தலம். மூலவர் சவுந்தரராஜப் பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். அருகில் சவுந்தரவல்லி தாயார், ஸ்ரீதேவி, பூமிதேவி, சந்தான கண்ணன் உள்ளனர். ரங்கநாதர் சயனநிலையிலும், லட்சுமி நரசிம்மர் அனுக்கிரக நிலையிலும் சேவை சாதிக்கின்றனர். "என் திருவடியை பற்றினால் அனைத்து காரியமும் பூர்த்தியாகும்' என்ற பொருளுடன் கீதை உபதேச மந்திரமான "மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்று வாசகம் பக்தர்களின் பார்வையில் தெரியும் வகையில் பெருமாளின் வலது கையில் எழுதப்பட்டுள்ளது. ஆதிசேஷன் பெருமாளைக் குறித்து தவமிருந்து, பெருமாளின் சயனமாகும் தகுதியைப் பெற்றார். அவர் பெருமாளை ஆராதித்ததால், "நாகன் பட்டினம்' என்றாகி காலப்போக்கில் நாகப்பட்டினமாகியது. துவாரபாலகர்களாக காட்சிதரும் ஜெயன், விஜயன் சுதை சிற்பங்கள் மிக அழகானவை.

திருவிழா: ஐப்பசியில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் விழா, வைகுண்ட ஏகாதசி விழா, பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆனி உத்திரம் பத்து நாள் திருவிழா, புரட்டாசி சனிக்கிழமைகளில் பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரங்களோடு சேவை. நவராத்திரி விழா, கார்த்திகையில் திருப்பவித்திர விழா, அனுமன் ஜெயந்தி விழா, ராமநவமி விழாக்கள் நடக்கிறது.

இருப்பிடம்: நாகப்பட்டினம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள தெருவில் கோயில் உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டில் இறங்குபவர்கள், பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல பஸ் உள்ளது.

திறக்கும் நேரம்: காலை 7.30- பகல் 12 மணி, மாலை 7 - இரவு 9 மணி.
போன்: 94422- 13741, 04365- 221 374.

No comments:

Post a Comment