Thursday, August 25, 2011

பொல்லாப்பிள்ளையார் எங்கிருக்கிறார்?


குறும்பு செய்யும் குழந்தைகளை "பொல்லாப் பயல்' என்று திட்டுவதுண்டு. பிள்ளைக்கடவுளான விநாயகரும் பொல்லாப்பிள்ளையார் என்று பெயர் பெற்றிருக்கிறார். அவர் வரலாற்றைத் தெரிந்து கொண்டால் அவர் பொல் லாதவரா நல்லவரா என்ற உண்மையை அறிந்து கொள்வீர்கள்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் சிவத்தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். ஒருமுறை, தந்தை வெளியூர் சென்று விட்டதால், நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின், அவரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி, பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார்.
உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலை திருப்தியாகச் சாப்பிட்டார். அன்று கோயிலுக்கு வந்தவர்களுக்கு பிரசாதம் கிடைக்கவில்லை. பிள்ளையாரே சாப்பிட்டு விட்டதாக நம்பி சொல்ல, மற்றவர்கள் அதை நம்பவில்லை.
இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழனும் இதை நம்பவில்லை. இருப்பினும், நம்பியின் பேச்சை ஏற்று, பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான். பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பியும் பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே "இரட்டை மணிமாலை' ஆகும். மனமிரங்கிய பிள்ளையார், தன் பக்தன் கேலிப்பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இந்த பிள்ளையார் சிலை உளியால் செதுக்கப்படாத சுயம்பு விநாயகர் என்பதால் "பொள்ளாப் பிள்ளையார்' எனப்பட்டார். "பொள்ளா' என்றால் "செதுக்கப்படாத' என்பது பொருள். காலப்போக்கில் இது பொல்லாப்பிள்ளையார் ஆகி விட்டது. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில், திருநாரையூர் உள்ளது.

இந்தப் புன்னகை என்ன விலை?


விநாயகப்பெருமான் புன்னகையிலேயே பூத்த மலர் என்கிறது பிரமாண்ட புõரணம். இந்த புராணத்தில் லலிதோபாக்யானம் என்ற பகுதி வருகிறது. அதில் விநாயகரின் பிறப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது.
பண்டாசுரன் என்பவன் தேவர்களை மிகவும் கடுமையாகக் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என தேவர்கள், பார்வதிதேவியிடம் முறையிட்டனர். பார்வதி தனது பெண் சேனைகளுடன் லலிதாம்பிகை என்னும் பெயர் தாங்கி புறப்பட்டாள். சிவனும் காமேஸ்வரர் என்ற பெயர் தாங்கிவந்தார். அதனால், அம்பாளுக்கு "காமாட்சி' என்ற பெயரும் வந்தது.(புராணகாலத்திலேயே ராணுவத்தில் பெண்கள் இருந்துள்ளனர் என்பதற்கு இது சாட்சி). அக்னிகோட்டை ஒன்றை எழுப்பி, அதனுள் தங்கிவிட்டாள்.
இதையறிந்த பண்டாசுரன், தனது உதவியாளரான விசுக்ரன் என்பவனை அனுப்பி, ""தேவியின் படைகளைச் செயல்பட விடாமல் செய்து விடு,'' என்று உத்தரவிட்டான். விசுக்ரன் ஆரவாரத்துடன் தேவி தங்கியிருந்த இடத்துக்கு வந்தான். ஆனால், சுற்றிலும் அக்னி எரிந்ததால் அவனால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. உடனே அவன் ஒரு யந்திரத்தை தயாரித்தான். அதற்கு "விக்ன யந்திரம்' என்று பெயர். அதை நெருப்பைத்தாண்டி கோட்டையின் மேல் கூரையில் விழும்படி வீசி எறிந்தான். அதுவும் கூரையில் விழுந்தது.
அந்த யந்திரம் யாருடைய உயிரையும் வாங்காது. ஆனால், மனதை மாற்றிவிடும் சக்தியுடையது. அங்கு தங்கியிருந்த தேவியின் படைகளின் மனதை அது மாற்றியது.
""இந்த தேவிக்கு கட்டுப்பட்டு நாம் ஏன் வீணே போரிட வேண்டும்? நம்மால் கொல்லப்படுபவர்கள் அசுரர்களே ஆயினும், பிரம்மஹத்தி தோஷம் ஏற்படத்தானே செய்யும்! மேலும், நாம் கஷ்டப்பட்டு போரிட, இந்த தேவி "பெரிய வீராங்கனை' என்ற பெயரைத் தட்டிக்கொண்டு போய்விடுவாள். எனவே, இவளுடன் போருக்குச் செல்லக்கூடாது. எல்லாரும் நிம்மதியாக உறங்கி விடலாம்,'' என படுத்து விட்டனர்.
இந்த மாயைகளை எல்லாம் புரிபவளே அம்பிகை தானே! அவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். இந்த நேரத்தில், சிவன் அங்கு வர, அவரைப் பார்த்து மயக்கும் புன்னகையைச் சிந்தினாள். அந்த புன்னகைக்கு விலை மதிப்பே கிடையாது என்பதைப் புரிந்து கொண்ட சிவனும் புன்னகையை உதிர்க்க, அவர்களது புன்னகையிலேயே உதயமானார் விநாயகர்.
விநாயகர் தன் தும்பிக்கையை மேலே உயர்த்தி யந்திரத்தை எடுத்தார். சுற்றிலும் எரிந்த அக்னிக்குள் வீசி சாம்பலாக்கி விட்டார். விக்னயந்திரம் எரிந்து போன அடுத்த கணமே, தேவியின் படைகள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் போரிட்டு பண்டாசுரனை அழித்தனர். விக்னம் என்றால் "தடை'. தடையை வேரறுத்து, தன் தாய் வெற்றிவாகை சூட காரணமாக இருந்த விநாயகருக்கு "விக்னேஷ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.

விநாயகர் சதுர்த்தி வழிபாடு


விநாயகர் அவதரித்த சதுர்த்தி நன்னாளில் விநாயகர் முன் அமர்ந்து சொல்ல வேண்டிய வழிபாடு இதுவாகும். இதனால், செய்யும் செயல்களில் தடைகள் நீங்கும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளம் உண்டாகும். நல்ல குழந்தைகள் வாய்ப்பர். சாதிக்கும் ஆற்றலும், மனோதிடமும் ஏற்படும்

* கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனைக் கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே! என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம்.
* இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வ வளத்தை அருள்பவனே! எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப்பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.
* உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங் களைக் கூட மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத்தன்மை,பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.
* திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்துவைப்பாயாக.
* தூய்மையான உள்ளத்தை கொடு. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம் பாருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.
* பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே!
* காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானை முக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகப்பெருமானே சரணம்.

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை! - கீதையில் கண்ணன்



* அநீதி பூமியில் தலை தூக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் யுகம்தோறும் அவதரிக்கிறேன்.

* கண்மூடி மனதை அடக்குவது மட்டும் தியானமல்ல. மகிழ்வோடு இருத்தல், சாந்தமான போக்கு, மவுனம், மனதை அடக்கி ஆளுதல், உள்ளத்தூய்மை ஆகிய இவையெல்லாம் கூட தவம் தான்.

* மனம் தன் சஞ்சலத்தைக் காட்டும் போதெல்லாம், உடனுக்குடன் அடக்கி நம் வசப்படுத்திக் கொள்ள முற்பட வேண்டும்.

* விரும்பியதை அடைந்து வரம்பின்றி மகிழ்வதும் கூடாது. துன்பம் வரும் போது மனம் சிதையவும் கூடாது. மனஉறுதியுடன் தயக்கத்திற்கு இடம் கொடாமல் மெய்ப்பொருளை உணர்ந்து பிரம்மநிலையில் நிற்க வேண்டும்.

* மனதை ஒருமுகப்படுத்த முடியாதவனுக்கு அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் கிடையாது. ஆழ்ந்த சிந்தனையற்றவன் சாந்தியும், இன்பமும் பெறமுடியாது.

* மனதை அடக்கி இருந்தாலும், சில சமயங்களில் ஐம்பொறிகள் வழியாக ஆசைப்புயல் எழுந்து, மனிதனுடைய அடக்கசக்தியை வேரோடு பறிக்க முயல்வதுண்டு. அவன் தன்னுடைய மனதிடத்தை அந்த புயலுக்கு பறிகொடுத்துவிடாமல், என்னை உறுதியாக பற்றிக் கொள்வானாக.

* பட்டினி கிடக்கும் மனிதனிடம் பலவித இச்சைகளும் அடங்கிப் போகின்றன. ஆனால், அவற்றை அடைய வேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்குவதில்லை. கடவுளை நேரில் தரிசித்தாலன்றி அவற்றில் உள்ள ஆசை நீங்குவதில்லை.

* கோபத்தால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாறுகையில் குழப்பம் உண்டாகிறது. குழப்பத்தால் புத்தி கெடுகிறது.

* பொருட்களைப் பற்றி சிந்தித்தால் அவற்றின் மீது பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து அடங்கா மோகம் உண்டாகிறது. மோகத்தால் சிந்தை கெடுகிறது; நினைவு அழிகிறது. உயரிய லட்சியம் மறைந்து போகிறது. அப்போது மனிதனே அழிந்து விடுகிறான்.

* தானம் செய்வது நமது கடமை என்னும் உணர்வோடு, இடம், தகுதி, காலம் ஆகியவற்றையும் கவனித்து, திரும்பத்தர இயலாதவனுக்கு அளிக்கும் தானமே சாத்வீக தானம் எனப்படும்.

* மரியாதை இல்லாமலும், அலட்சிய புத்தியுடனும், தகாத இடத்திலும், தானம் பெறுவதற்கு தகுதியில்லாதவனுக்கும் தரப்படுவது தாமஸ தானம் ஆகும்.

* பசுவிடம் உள்ள பால், உண்மையில் அதன் சரீரம் முழுவதும் ரத்தத்தில் சத்தோடு சாரமாக கலந்து பரவி உள்ளது என்றாலும், மடியிலேயே சுரக்கிறது. அதுபோல் ஈஸ்வரன் உலகில் எங்கும் விரவியிருக்கிறான் எனினும், தியானத்தால் தான் நம் மனதில் எழுந்தருளுகிறான்.