Thursday, August 25, 2011

பொல்லாப்பிள்ளையார் எங்கிருக்கிறார்?


குறும்பு செய்யும் குழந்தைகளை "பொல்லாப் பயல்' என்று திட்டுவதுண்டு. பிள்ளைக்கடவுளான விநாயகரும் பொல்லாப்பிள்ளையார் என்று பெயர் பெற்றிருக்கிறார். அவர் வரலாற்றைத் தெரிந்து கொண்டால் அவர் பொல் லாதவரா நல்லவரா என்ற உண்மையை அறிந்து கொள்வீர்கள்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் சிவத்தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். ஒருமுறை, தந்தை வெளியூர் சென்று விட்டதால், நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின், அவரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி, பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார்.
உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலை திருப்தியாகச் சாப்பிட்டார். அன்று கோயிலுக்கு வந்தவர்களுக்கு பிரசாதம் கிடைக்கவில்லை. பிள்ளையாரே சாப்பிட்டு விட்டதாக நம்பி சொல்ல, மற்றவர்கள் அதை நம்பவில்லை.
இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழனும் இதை நம்பவில்லை. இருப்பினும், நம்பியின் பேச்சை ஏற்று, பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான். பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பியும் பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே "இரட்டை மணிமாலை' ஆகும். மனமிரங்கிய பிள்ளையார், தன் பக்தன் கேலிப்பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இந்த பிள்ளையார் சிலை உளியால் செதுக்கப்படாத சுயம்பு விநாயகர் என்பதால் "பொள்ளாப் பிள்ளையார்' எனப்பட்டார். "பொள்ளா' என்றால் "செதுக்கப்படாத' என்பது பொருள். காலப்போக்கில் இது பொல்லாப்பிள்ளையார் ஆகி விட்டது. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில், திருநாரையூர் உள்ளது.

இந்தப் புன்னகை என்ன விலை?


விநாயகப்பெருமான் புன்னகையிலேயே பூத்த மலர் என்கிறது பிரமாண்ட புõரணம். இந்த புராணத்தில் லலிதோபாக்யானம் என்ற பகுதி வருகிறது. அதில் விநாயகரின் பிறப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது.
பண்டாசுரன் என்பவன் தேவர்களை மிகவும் கடுமையாகக் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என தேவர்கள், பார்வதிதேவியிடம் முறையிட்டனர். பார்வதி தனது பெண் சேனைகளுடன் லலிதாம்பிகை என்னும் பெயர் தாங்கி புறப்பட்டாள். சிவனும் காமேஸ்வரர் என்ற பெயர் தாங்கிவந்தார். அதனால், அம்பாளுக்கு "காமாட்சி' என்ற பெயரும் வந்தது.(புராணகாலத்திலேயே ராணுவத்தில் பெண்கள் இருந்துள்ளனர் என்பதற்கு இது சாட்சி). அக்னிகோட்டை ஒன்றை எழுப்பி, அதனுள் தங்கிவிட்டாள்.
இதையறிந்த பண்டாசுரன், தனது உதவியாளரான விசுக்ரன் என்பவனை அனுப்பி, ""தேவியின் படைகளைச் செயல்பட விடாமல் செய்து விடு,'' என்று உத்தரவிட்டான். விசுக்ரன் ஆரவாரத்துடன் தேவி தங்கியிருந்த இடத்துக்கு வந்தான். ஆனால், சுற்றிலும் அக்னி எரிந்ததால் அவனால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. உடனே அவன் ஒரு யந்திரத்தை தயாரித்தான். அதற்கு "விக்ன யந்திரம்' என்று பெயர். அதை நெருப்பைத்தாண்டி கோட்டையின் மேல் கூரையில் விழும்படி வீசி எறிந்தான். அதுவும் கூரையில் விழுந்தது.
அந்த யந்திரம் யாருடைய உயிரையும் வாங்காது. ஆனால், மனதை மாற்றிவிடும் சக்தியுடையது. அங்கு தங்கியிருந்த தேவியின் படைகளின் மனதை அது மாற்றியது.
""இந்த தேவிக்கு கட்டுப்பட்டு நாம் ஏன் வீணே போரிட வேண்டும்? நம்மால் கொல்லப்படுபவர்கள் அசுரர்களே ஆயினும், பிரம்மஹத்தி தோஷம் ஏற்படத்தானே செய்யும்! மேலும், நாம் கஷ்டப்பட்டு போரிட, இந்த தேவி "பெரிய வீராங்கனை' என்ற பெயரைத் தட்டிக்கொண்டு போய்விடுவாள். எனவே, இவளுடன் போருக்குச் செல்லக்கூடாது. எல்லாரும் நிம்மதியாக உறங்கி விடலாம்,'' என படுத்து விட்டனர்.
இந்த மாயைகளை எல்லாம் புரிபவளே அம்பிகை தானே! அவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். இந்த நேரத்தில், சிவன் அங்கு வர, அவரைப் பார்த்து மயக்கும் புன்னகையைச் சிந்தினாள். அந்த புன்னகைக்கு விலை மதிப்பே கிடையாது என்பதைப் புரிந்து கொண்ட சிவனும் புன்னகையை உதிர்க்க, அவர்களது புன்னகையிலேயே உதயமானார் விநாயகர்.
விநாயகர் தன் தும்பிக்கையை மேலே உயர்த்தி யந்திரத்தை எடுத்தார். சுற்றிலும் எரிந்த அக்னிக்குள் வீசி சாம்பலாக்கி விட்டார். விக்னயந்திரம் எரிந்து போன அடுத்த கணமே, தேவியின் படைகள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் போரிட்டு பண்டாசுரனை அழித்தனர். விக்னம் என்றால் "தடை'. தடையை வேரறுத்து, தன் தாய் வெற்றிவாகை சூட காரணமாக இருந்த விநாயகருக்கு "விக்னேஷ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.

விநாயகர் சதுர்த்தி வழிபாடு


விநாயகர் அவதரித்த சதுர்த்தி நன்னாளில் விநாயகர் முன் அமர்ந்து சொல்ல வேண்டிய வழிபாடு இதுவாகும். இதனால், செய்யும் செயல்களில் தடைகள் நீங்கும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளம் உண்டாகும். நல்ல குழந்தைகள் வாய்ப்பர். சாதிக்கும் ஆற்றலும், மனோதிடமும் ஏற்படும்

* கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனைக் கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே! என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம்.
* இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வ வளத்தை அருள்பவனே! எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப்பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.
* உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங் களைக் கூட மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத்தன்மை,பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.
* திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்துவைப்பாயாக.
* தூய்மையான உள்ளத்தை கொடு. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம் பாருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.
* பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே!
* காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானை முக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகப்பெருமானே சரணம்.

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை! - கீதையில் கண்ணன்



* அநீதி பூமியில் தலை தூக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் யுகம்தோறும் அவதரிக்கிறேன்.

* கண்மூடி மனதை அடக்குவது மட்டும் தியானமல்ல. மகிழ்வோடு இருத்தல், சாந்தமான போக்கு, மவுனம், மனதை அடக்கி ஆளுதல், உள்ளத்தூய்மை ஆகிய இவையெல்லாம் கூட தவம் தான்.

* மனம் தன் சஞ்சலத்தைக் காட்டும் போதெல்லாம், உடனுக்குடன் அடக்கி நம் வசப்படுத்திக் கொள்ள முற்பட வேண்டும்.

* விரும்பியதை அடைந்து வரம்பின்றி மகிழ்வதும் கூடாது. துன்பம் வரும் போது மனம் சிதையவும் கூடாது. மனஉறுதியுடன் தயக்கத்திற்கு இடம் கொடாமல் மெய்ப்பொருளை உணர்ந்து பிரம்மநிலையில் நிற்க வேண்டும்.

* மனதை ஒருமுகப்படுத்த முடியாதவனுக்கு அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் கிடையாது. ஆழ்ந்த சிந்தனையற்றவன் சாந்தியும், இன்பமும் பெறமுடியாது.

* மனதை அடக்கி இருந்தாலும், சில சமயங்களில் ஐம்பொறிகள் வழியாக ஆசைப்புயல் எழுந்து, மனிதனுடைய அடக்கசக்தியை வேரோடு பறிக்க முயல்வதுண்டு. அவன் தன்னுடைய மனதிடத்தை அந்த புயலுக்கு பறிகொடுத்துவிடாமல், என்னை உறுதியாக பற்றிக் கொள்வானாக.

* பட்டினி கிடக்கும் மனிதனிடம் பலவித இச்சைகளும் அடங்கிப் போகின்றன. ஆனால், அவற்றை அடைய வேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்குவதில்லை. கடவுளை நேரில் தரிசித்தாலன்றி அவற்றில் உள்ள ஆசை நீங்குவதில்லை.

* கோபத்தால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாறுகையில் குழப்பம் உண்டாகிறது. குழப்பத்தால் புத்தி கெடுகிறது.

* பொருட்களைப் பற்றி சிந்தித்தால் அவற்றின் மீது பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து அடங்கா மோகம் உண்டாகிறது. மோகத்தால் சிந்தை கெடுகிறது; நினைவு அழிகிறது. உயரிய லட்சியம் மறைந்து போகிறது. அப்போது மனிதனே அழிந்து விடுகிறான்.

* தானம் செய்வது நமது கடமை என்னும் உணர்வோடு, இடம், தகுதி, காலம் ஆகியவற்றையும் கவனித்து, திரும்பத்தர இயலாதவனுக்கு அளிக்கும் தானமே சாத்வீக தானம் எனப்படும்.

* மரியாதை இல்லாமலும், அலட்சிய புத்தியுடனும், தகாத இடத்திலும், தானம் பெறுவதற்கு தகுதியில்லாதவனுக்கும் தரப்படுவது தாமஸ தானம் ஆகும்.

* பசுவிடம் உள்ள பால், உண்மையில் அதன் சரீரம் முழுவதும் ரத்தத்தில் சத்தோடு சாரமாக கலந்து பரவி உள்ளது என்றாலும், மடியிலேயே சுரக்கிறது. அதுபோல் ஈஸ்வரன் உலகில் எங்கும் விரவியிருக்கிறான் எனினும், தியானத்தால் தான் நம் மனதில் எழுந்தருளுகிறான்.

Saturday, May 7, 2011

ராமானுஜர் ஜெயந்தி


வைணவம் வளர மிகவும் பாடுபட்டவர் ஸ்ரீராமானுஜர். அதில் அவருக்கு எவ்வளவோ சங்கடங்கள் ஏற்பட்டன. இருந்தாலும், அதையெல்லாம் எதிர்கொண்டு பல புரட்சிகளைச் செய்தார். ஆரம்ப காலத்தில் அவர் குருகுல வாசம் செய்யும்போதே அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அவர் கஞ்சியை அடுத்த திருப்புட்குழியில் யாதவப் பிரகாசர் என்ற அத்வைதியிடம் வேதாந்தக் கருத்துக்களைக் கற்று வந்தார். அப்போதே அவருக்கும் யாதவப் பிரகாசருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. அதன் காரணமாக ராமானுஜரின் பெருமை வளர்ந்தது. அதைக் கண்டு ராமானுஜர்மேல் வெறுப்படைந்த யாதவப் பிரகாசர் ராமானுஜரை கொலை செய்யவும் துணிந்து திட்டமிட்டார். அந்த சதியிலிருந்து ராமானுஜரின் சிற்றன்னை மகனான கோவிந்த பட்டரால் ராமானுஜர் காப்பாற்றப்பட்டார். எம்பார் என்ற கோவிந்த பட்டரின் முயற்சியாலேயே நாம் ராமானுஜரின் அருளைப் பெறுகிற பேறைப் பெற்றோம். பிற்காலத்தில் யாதவப் பிரகாசரே இராமானுஜரைச் சரணடைந்து அவரின் சீடராக மாறினார். அதுபோல மற்றுமொரு அத்வைதியான யக்ஞமூர்த்தி என்பவர் ஸ்ரீரங்கத்தில் ராமானுஜரிடம் 18 நாட்கள் வாதிட்டார். ராமானுஜர் வாதில் தோற்றுவிடுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. 18-ஆம் நாள் இரவு, வாதில் தாம் தோற்று தம்மால் வைணவத்திற்குக் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று மனங்கலங்கிய ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனைப் பிரார்த்தனை செய்து கொண்டே நித்திரையில் ஆழ்ந்தார். காஞ்சி வரதன் அவர் கனவில் தோன்றி, ஆளவந்தாரின் மாயாவாத கண்டனத்தை துணைகொண்டு யக்ஞமூர்த்தியிடம் வாதாடுக ! நீரே வெற்றி பெறுவீர்; கவலை வேண்டாம் என்று தெரிவித்தார்.

அடுத்த நாள் வாதாடச் சென்ற ராமானுஜரைப் பார்த்த யக்ஞமூர்த்தி, அவரின் தேஜஸைக் கண்டு ராமானுஜரின் காலடியில் விழுந்து, உமது பெருமை தெரியாமல் வாதாடிவிட்டேன். எனது வாதங்களைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் என் மேல் பரிவு கொண்டு உமது சீடராக ஏற்று அருள்புரிய வேண்டும் என்று வேண்டிட, அவரை சீடராக ஏற்ற ராமானுஜர் யக்ஞமூர்த்திக்கு, அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு தம்முடனே வைத்துக்கொண்டார். மேலும் வைணவ சித்தாந்தங்களை அவருக்கு உபதேசித்து, அவருக்கென்று ஒரு மடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்து, அவரை பலர் குருவாக ஏற்றுக்கொள்ள வழிவகுத்தார். இவரின் குரு பக்தியைப் பலரும் போற்றும்படி ராமானுஜரின் ஆணைப்படி நடந்து வந்தார். அதற்கேற்றாற்போல் ஒரு சம்பவமும் நடந்தது. ராமானுஜர் மடமும் யக்ஞமூர்த்தியின் மடமும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் இருந்தது. இரண்டுமே ராமானுஜர் மடம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. ஒருசமயம் ஸ்ரீரங்கத்திற்கு வந்த யாத்ரிகர்கள், ராமானுஜர் மடம் எங்கேயுள்ளது? என்று விசாரிக்க, வழி சொன்னவர்கள், இங்கு ராமானுஜர் மடங்கள் இரண்டு உள்ளன. எங்கு செல்ல வேண்டும்? என்று கேட்க, அவர்கள் விஷயங்களைத் தெரிந்துகொண்டு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (யக்ஞமூர்த்தி) மடத்திற்குச் சென்றனர். இந்த விவரத்தை அறிந்த அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திகைப்படைந்து , பகவத் ராமானுஜருக்கு ஒப்பாக இருக்க எனக்குத் தகுதியில்லை. எனவே எனக்கென்று தனி மடம் வேண்டாம். நானும் பகவத் ராமானுஜரின் மடத்திலேயே தங்கி அவருக்கே சேவை செய்ய விரும்புகிறேன் என்று சொல்லி, தமது மடத்தை இடித்துத் தள்ளிவிட்டு ராமானுஜர் மடத்திற்கே வந்துவிட்டார். இவரின் ஞானசாரம், பிரமேய சாரம் என்ற படைப்புகள் வைணவ உலகில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ராமானுஜருக்கு உபதேசம்: திருக்கோஷ்டியூரில் வசித்த திருக்கச்சி நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, யார்? என்று கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன், என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, நான் செத்து வா! என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் அடியேன் வந்திருக்கிறேன் என்றார். அவரை அழைத்த நம்பி, ஓம் நமோநாராயணாய என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார். கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். மகிழ்ந்த நம்பி நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார் என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு கல்திருமாளிகை என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.

ஆதிசங்கரர் அவதாரம்!


கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இந்து மதத்துக்கு புத்தெழுச்சி யூட்டி, அனைத்து மக்களும் நலம்பெற பல ஆன்மிக வழிகளைக் கூறியவர் ஆதிசங்கரர். பூவுலக மக்களுக்கு ஞானத்தை உணர்த்தவும், தர்மத்தை வலியுறுத்தவும், யக்ஞங்கள் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் பக்தி ஒன்றினாலேயே உயர்வதற்கும் எண்ணற்ற பாடல்களை அருளிச் செய்தார் அன்பே உருவான சங்கரர். ஆதிசங்கரருக்கு பகவத் பாதர் என்ற திருநாமமும் உண்டு. கேரள மாநிலம் எர்ணாகுளம் காலடி என்ற கிராமத்தில் சிவகுரு - ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்கு திருச்சூர் வடக்கு நாதர் அருளால் அவதரித்தவர் சங்கரர். சங்கரரின் உபநயனத்திற்கு முன்பே தந்தை சிவகுரு இறைவனடி சேர்ந்தார். பெற்றோர் செய்ய வேண்டிய உபநயனம் உறவினர்களால் செய்யப்பட்டது. ஆதிசங்கரர் குருகுலம் சென்று படிக்கும்போது, அன்றாடம் உஞ்சவிருத்தி செய்து (பிஜை) உணவு கொண்டு வருவார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த அவர், தன் விரதத்தை முடிக்க அயாசகன் என்பவர் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷõம் தேஹி என அழைத்தார்.

அயாசகனின் மனைவி, தானம் கொடுக்க எதுவும் இல்லாததால், தன்னிடமிருந்த ஒரு காய்ந்த நெல்லிக்கனியை பிøக்ஷ இட்டாள். இந்தக் கருணைச் செயல், சங்கரரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. அக்குடும்பத்தின் வறுமை நீங்க, லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். 19வது ஸ்லோகம் சொன்னவுடன், அந்த ஏழை பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது. இது சங்கரர் செய்த அற்புதம். அறத்தை நிலை நிறுத்தவே சங்கரரின் அவதாரம் என்றாலும், அன்பின் சக்தியால் நிகழ்த்திய ஆச்சரியம் இது ! அற்புதங்களை விட அன்பே முக்கியம். சங்கரர் இயற்றிய முதல் கிரந்தம் கனகதாரா ஸ்தோத்திரம் தான். எட்டு வயது பாலகனான சங்கரர் அன்னை ஆர்யாம்பாளிடமிருந்து சந்நியாசம் பெறுவதற்கு சூர்ணா நதிக்கரையில் பட்டபாடு- அன்னையின் அன்புப் பிடியிலிருந்து அவிழ்த்துக் கொள்ள தவித்த தவிப்பு- படிக்கும்போதே கல்லும் கரையும். அன்புமயமான சங்கரர் அன்னையிடம், தாயே, கல்யாணம், குடும்பம், குழந்தை என்று நான் ஆகிவிட்டால் இந்த உலகத்திற்காக யார் கவலைப்படுவது? என்று தாயிடம் கேட்கும்போது, அகிலத்திற்கே அன்பைப் பொழிய வேண்டும் என்ற கருணாமூர்த்தியாக திகழ்கிறார். அந்திம காலத்தின் போது வந்து உங்கள் ஈமக்கிரியைகளைச் செய்வேன் என்று தாயிடம் வாக்களித்துச் செல்லும்போது- அன்புமிக்க ஒரு மகனாக விளங்குகிறார்.

நர்மதை நதிக்கரையில் குரு கோவிந்த பகவத்பாதரைக் கண்டவுடன் குருவையும் கோவிந்தனையும் இணைத்து பஜகோவிந்தம் என்ற துதியைப்பாடி, நமக்கெல்லாம கோவிந்தனின் அருளைப் பெறும்படி செய்த அன்பை எப்படிச் சொல்வது ! காசிமா நகரத்தில், சநந்தனர் என்ற சீடனை மற்ற சீடர்கள் தவறாக நினைக்க, அவர்களுக்கு சநந்தனரின் குரு பக்தியை விளக்க கங்கை நதியில் தாமரையை மலரச் செய்து உணர்த்திய அன்பு- சநந்தனரை பத்மபாதராக்கிய பிரிவு... கங்கா நதி தீரத்தில் சண்டாளனாக வந்த பரமேஸ்வரனைக் குறித்து மனீஷா பஞ்சகம் என்ற அற்புதமான பாடலைப் பாடி நம்முடைய மன மாசுகளை எல்லாம் மாற்றிய மனித நேயம்... பிரயாகையில், மீமாஸ்சக கொள்கையில் இருந்த குமரிலபட்டருக்கு அத்வைதத்தை உபதேசித்து ஆட்கொண்ட அன்பிற்கு ஈடு இணையே இல்லை. மீமாஸ்சகர்களின் முதல் எதிரி கர்மாக்களை எல்லாம் நீத்த துறவிகள்தான். நர்மதை நதிக்கரையில் உள்ள மாகீஷ்மதி நகரிலுள்ள தீவிர மீமாஸ்சகரான மண்டன மிஸ்ரரை வாதத்தில் வென்று, அவருக்கு சுரேஸ்வரர் என்ற தீக்ஷõநாமம் சூட்டி அன்பு சீடராக்கிக் கொண்டார். மண்டன மிஸ்ரரின் மனைவியான சரஸவாணியின் சிக்கலான கேள்விகளுக்கு அழகாக விடை சொல்லி, சரஸவாணியை சாரதாம்பிகையாக சிருங்கேரியில் ஸ்தாபித்து வழிபாடு செய்தார்.

ஸ்ரீசைல ÷க்ஷத்ரத்தில் கோயில்கொண்டுள்ள மல்லிகார்ஜுனரைக் கண்ட மாத்திரத்தில் அன்பு பொங்க- பக்தி வெள்ளம் கரை புரண்டோட நூறு பாடல்களைப் பாடி மகிழ்ந்தார். மனம் மகேஸ்வரனின் திருவடிகளை நாடி அங்கேயே நிலை பெற்று விடுவதே பக்தி என்று நமக்கெல்லாம் அன்பில் செய்த உபதேசமே அது ! தன்னை வெட்ட வந்த காபாலிகனிடமும், அன்புடனே உரையாற்றிய அற்புதத்தையும் காண்கிறோம். அறிவினால் மட்டுமே மக்களின் சமய உணர்ச்சிகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று உணர்ச்சிகளில் பிறப்பிடமாகிய இதயத்தில் பக்தியையும் அன்பையும் ஊன்றினார். அவர் தனது அதிநுட்பமான அறிவினால் மட்டுமே இதர மதங்களை எல்லாம் வென்று விட்டதாகச் சொல்ல முடியாது. அவர் எந்த தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ அத்தனைக்கும் அவரே நடமாடும் சான்றாக இருந்தார். உலகிலுள்ள சகல ஜீவராசிகளையும் தம்மில் கண்டு, தம்மை சகல ஜீவராசிகளிடமும் கண்டு பேரன்பின் உருவமாகவே திகழ்ந்தார். பயங்கரமான வழிபாடுகளையும், இந்திரிய வேகத்தையும் மக்கள் மனதிலிருந்து அகற்றி, அன்புருவான ஆண்டவனை அன்பாலே போற்றி, அனைவருடனும் அன்பு பூணும் பாங்கினை உணர்த்தி, ஈசன், அம்பிகை, நாராயணன், விநாயகர், முருகன், ஆதித்யன் மீதான ஆறுவித சாத்வீக ஷண்மத வழிபாட்டு முறைகளை வகுத்தார்.

தொழு நோயால் பீடிக்கப்பட்டு உயிரைவிட எண்ணிய வாலிபன் ஒருவனை அன்பின் மிகுதியால் அவனுடைய நோயைத் தீர்த்து சீடனாக்கிக் கொண்ட கருணையை என்ன சொல்வது? சௌசாம்பிகா நகரில் தங்களது ஒரே புதல்வனை இழந்து அவன் சடலத்தின்மீது விழுந்து இதயம் பிளக்க கதறிய பெற்றோர்களைக் கண்டு பரிதவித்த வள்ளலல்லவா சங்கரர் ! கருணை காட்ட வேண்டும் என்று ஈசனிடம் துதித்து அவனை மீட்டுக் கொடுத்த அற்புதத்தை என்னென்பது ! ஸ்ரீ வலி ÷க்ஷத்ரத்தில் ஊமைப் பிள்ளையை அழைத்து வந்து தன்னைச் சரணடைந்த பெற்றோர் மகிழ, அத்வைதம் பேச அருள்புரிந்த கருணை வள்ளலல்லவா சங்கரர் ! அவனைத் தன் சீடனாக்கிக் கொண்டு ஹஸ்தா மலகர் என்று பெயரிட்டு மகிழ்ந்த அன்பை வர்ணிக்க முடியாது. சிருங்கேரியில் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த சமயம், அறிவு குறைந்த ஆனந்த கிரி என்ற சீடனை மற்ற சீடர்கள் அலட்சியப்படுத்தியதைக் கண்டு, ஆனந்த கிரியை அறிவுக்களஞ்சியமாக்கி அனுக்ரஹம் செய்து , கடல் மடை திறந்தாற் போன்று தோடகாஷ்டகம் பாட வைத்த அன்பு சிலிர்க்க வைக்கிறது. கிரியை தோடகாச்சார்யார் என்ற தீக்ஷõ நாமம் சூட்டி மகிழ்ந்தார். சங்கரர்.

அனைத்தையும் துறந்த அற்புதத் துறவி அன்பின் உருவமாகவே இருந்தார். அந்திமக் காலத்தில் வருவதாக அன்னைக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது. அன்னை ஆர்யாம்பாளின் ஆயுள் முடியும் தருணத்தை ஞான திருஷ்டியினால் அறிந்த சங்கரர் காலடி சென்று தாயின் அருகில் அமர்ந்து அன்னையை மடியில் கிடத்திக்கொண்டு, மாத்ருகா பஞ்சகம் பாடினார். தாயின் வயிற்றில் பிள்ளை கருவாகி, பிறந்து வளரும் எல்லா நிலைகளிலும் தாயின் ஒவ்வொரு தியாகத்தையும், அனுபவித்த ஒவ்வொரு இன்னல்களையும் சொல்லிப் பாடுகிறார். அன்பின் மொழியிலேயே பாடுகிறார். ஒவ்வொரு தாயின் வயிற்றில் பிறந்த மகனும் ஆச்சார்யாளின் அடி பற்றி, அன்னைக்கு அன்பைக் கொடுத்து அருளையும் ஆசியையும் பெற வேண்டும். உலகத்திற்கே குருவாக இருந்தாலும் தாய்க்கு மகன்தானே ! தாய் அன்பிற்கு இணையே இல்லை. வயிற்றில் சுமந்த தெய்வத்தைத் தன் தோளில் சுமந்து ஈமச் சடங்குகளை செய்தார் சங்கரர் ! திசங்கரர் அகிலம் எங்கும் அத்வைதத்தை நிலை நாட்டினார். ஆறு சமய வழிபாடுகளையும் நம் போன்றவர்களுக்காவே செய்தார். ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனைப் பாமாலைகளால் அர்ச்சித்தார். அறிவால் சிலரையும், அன்பினால் பலரையும் ஆட்கொண்டார். அம்பிகையின் சௌந்தர்யத்தை அழகின் அலைகளாகப் பாடி ஆனந்தம் அடைந்தார். அனைத்து தெய்வங்கள்மீதும் பேதம் இல்லாமல் பாடி அருளினார். அத்தனை உபநிஷதங்களுக்கும் உரை எழுதினார். வருங்கால மக்கள்மீது உள்ள அன்பினால் பக்தி, கர்மம், ஞானம் என்ற எல்லா மார்க்கங்களையும் உணர்த்தினார். ஞான சிம்மமாக, அன்பின் வடிவமாக அருள் அரசு செலுத்தினார் ஸ்ரீ ஆதிசங்கரர். எல்லா மதங்களும் அன்பை ஏற்றுக் கொள்ளும். அன்பிற்கு அழிவே இல்லை. ரக்தாக்ஷி ஆண்டு வைகாசி மாதம் சுக்கில பட்ச ஏகாதசி அன்று அன்பே உருவான ஆதிசங்கரர் இறைவனோடு ஐக்கியமானார் !

Monday, April 11, 2011

சித்ரா பவுர்ணமி


சித்ரபுத்திரன்: இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார்.

சித்ரா பவுர்ணமி: இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.

பூஜை: சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து

சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

பூஜையின் பலன்: சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.

கோயில்: இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. இதே போல் தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டியிலும் ஒரு கோயில் உள்ளது. எமன் தென்திசைக்கு அதிபதி என்பதால் சித்ரா பவுர்ணமி அன்று போடப்படும் கோலங்கள் தென்புற வாசலை அடைப்பது போல் கோலம் போடும் வழக்கம் இன்றும் உள்ளது. சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமியைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது. இறைவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல் இந்திரன் பழி தீர்த்த படலம் என்பது தான். இந்த திருவிளையாடல் நடந்தது சித்ரா பவுர்ணமி தினத்தன்று தான். இத்தினத்தில் தான் இந்திரன் தன் பாவம் போக்க கடம்பவனத்தை அடைந்து அங்கிருந்த சுயம்பு மூர்த்திக்கு இந்திரவிமானம் அமைத்து வழிபட்டு தன் பாவத்தை போக்கிக் கொண்டான். இன்றும் கூட சித்ராபவுர்ணமி இரவில் தேவேந்திரனே வந்து மதுரை சுந்தரேஸ்வரருக்கு பூஜை செய்வதாக ஐதீகம். அத்துடன் சித்ரா பவுர்ணமி தினத்தில் தான் மதுரையில் சித்திரை திருவிழா நடக்கிறது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளும் இந்த விழா நாயகனான கள்ளழகர் இத்தினத்தில் தான் சிவன் உருவாக்கிய வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.

சித்திரை வருடப்பிறப்பு


சூரியன் மீண்டும் ஒருமுறை 12 ராசிகளிலும் சுற்றித்துவங்கும் நாளே சித்திரை வருடப்பிறப்பு. விஷு புண்யகாலம் எனப்படும். ஆனால் சந்திரனின் சுற்றை அடிப்படையாகக் கொள்பவர்க்கு - அதாவது தெலுங்கு மக்களுக்கு - பங்குனி மாதம் அமாவாசையன்று புது வருடம் (யுகாதி) ஆரம்பிக்கும். இந்த புனித நன்னாளில் புத்தாடை அணிந்து பெரியோர்களின் ஆசிர்வாதம் பெற்று, கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். மேலும் தான, தர்மங்கள் செய்வதுடன், உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்து கூறி அனைவரையும் மகிழ்விக்க வேண்டும். இந்த நாளில் சூரிய வழிபாடு மிகவும் சிறப்பானது ஆகும். ஆசையின்றி சாதனை இல்லை. சாதனைக்காக திட்டங்களைத் தீட்டச் செய்யும் நன்னாளே வருடப்பிறப்பு. புது வருடத்தில் செய்யப்படும் அனைத்து செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அன்றைய தினத்தில் நாம் அனைவரும் பஞ்சாங்கம் படித்து இந்த புத்தாண்டின் கால நேரங்களை அறிந்து அதன்படி செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.

கர வருட வெண்பா பலன்

கர வருடத்திற்காக எழுதப்பட்ட பாடல், பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

கரவருடம் மாரி பெய்யும் காசினியும் உய்யும் மிகுந்து வெள்ளமெங்கும் ஓடும் திரைமிகுந்த நாலுகால் ஜீவன்மலியு நோயால் மடியும் பாலும் நெய்யும்மே சுருங்கும்பார் கர புத்தாண்டில் நல்ல மழை பெய்யும். உலகத்தில் செழிப்பு ஏற்படும். ஆனாலும், வெள்ளப்பாதிப்பு இருக்கும். அதிக மழையால் கால்நடைகள் பாதிக்கும். பால் வளமும் நெய் உற்பத்தியும் குறையும் என்று இந்த பாடல் நமக்கு எடுத்து சொல்கிறது.

இங்கே 26 , அங்கே 37

தமிழ் ஆண்டுகள் 60. தற்போது பிறக்கும் கர தமிழ் புத்தாண்டு 26வது ஆண்டாகும். தென்னிந்தியாவில் கரஆண்டாக நாம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் வடமாநிலங்களில் சோமகிருது ஆண்டு பிறந்துள்ளது. அம்மாநிலங்களில் அது 37வது ஆண்டாகும்.

கர வருடத்திற்கு ஈடான பிற வருடங்கள்

ஆங்கிலம் ........................... 2011- 2012
கொல்லம் ........................... 1186- 1187
பசலி .................................. 1420- 1421
சாலிவாகனம் (தெலுங்கு) ...... 1933- 1934
திருவள்ளுவர் ....................... 2042- 2043
ஜகத்குரு ஸ்ரீசங்கராச்சாரியார் ... 2082
ஸ்ரீமகாவீரர் (ஜைனர்) ............. 2538
ஸ்ரீபுத்தர் சகாப்தம் ................. 2554- 2555
கலியப்தம் .......................... 5112

தமிழகத்தில் என்ன நடக்கும்?

* காற்றும் மழையும் அதிகமாக இருக்கும். எங்கும் வெள்ளப்பாதிப்பு ஏற்படும்.
* கால்நடைகளுக்கு நோய் வந்து பால், நெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.
* வாகன விலை குறைய வாய்ப்பு உள்ளது.
* முக்கிய நதிகள் பாதிப்புக்குள்ளாகும்.
* அயல்நாடு வாணிபம் பெருகும்.
* கருப்பு பணம், கடத்தல் பொருட்கள் பிடிபடும்.
* கல்வித்துறையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
* முக்கியஸ்தர்கள் பயம் காரணமாக பாதுகாப்பு தேடி அலைவார்கள்.

புத்தாண்டு கிரகங்கள்

கரஆண்டுக்குரிய ராஜா சந்திரன். மந்திரி குரு. சேனாதிபதி புதன். மக்களுக்கும், கிரகங்களுக்கும் அதிபதி சூரியன். உணவு பொருள்களுக்கு அதிபதி சுக்கிரன். இந்த கிரகங்களை வணங்குவதன் மூலம் நமக்கு நற்பலன் கிடைக்கும். இந்த ஆண்டில் பெருமாளை வழிபடுவதன் மூலம், வர இருக்கும் சிரமங்கள் தூளாய் பறக்கும். நமது வெற்றியை நாளை சரித்திரம் வெல்லும். -சிவானந்தரின் தமிழ் புத்தாண்டு முழக்கம்

நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் முன்னேறுவதற்காகவே பிறந்திருக்கிறீர்கள். நம் வாழ்நாள் ஒவ்வொன்றும் மகத்தானது. அதை நன்கு பயன்படுத்திக் கொள்வதில் தான் வெற்றி அடங்கி இருக்கிறது. இந்த வெற்றி நமது செயல்களின் சரித்திரத்தை என்றென்றும் பறைசாற்றும்.செய்யும் பணி எதுவாக இருந்தாலும் அதில் மனதை ஒருமுகப்படுத்தி செயல்படுங்கள். சிறு குழந்தையைப் போல அடிப்படைத்தேவைக்குக் கூட அடுத்தவரை நம்பி இருப்பதால் பயனில்லை. உற்சாகத்தோடு ஆர்வமாகப் பணியாற்றுங்கள். நம் தேவைகளை எல்லாம் நிறைவேற்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அனைத்தும் நம்மிடம் முழுமையாகவே இருக்கிறது.செய்யும் கடமையை மனப்பூர்வமாக அணுகினால் உங்கள் காலிலேயே நிற்கும் வலிமையும், செயல்திறமையும் பெறுவீர்கள். சிறுபணி தானே என்று எதையும் புறக்கணித்துவிடாதீர்கள். குளிப்பது, துணி துவைப்பது, உணவு சமைப்பது போன்ற அன்றாடப்பணிகளையும் அக்கறையோடு செய்யுங்கள்.

பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பி ஓட நினைக்காதீர்கள். மகிழ்ச்சியுடன் பொறுப்புகளை ஏற்று வெற்றி நடைபோடுங்கள். நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முயலும்போது, உங்களுக்கான நல்ல சூழ்நிலையும் ஒத்தவளர்ச்சி பெற்று துணைநிற்கும்.தியானம் அன்றாடப்பணிகளில் மிகவும் அடிப்படையானது. இதனால் நம் மனம் அமைதியில் நிலைத்திருக்கும். கடமைகளைக் குறைந்தநேரத்தில் திறம்படச் செய்வதற்கான ஆற்றலைத் தரும். சோம்பலைப் போக்கி புத்துணர்ச்சி உண்டாக்கும். உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் சுறுசுறுப்பாய் ஈடுபடுங்கள். அப்போது மன அமைதி காண்பீர்கள். ஆனால், நமக்குப் பிடித்தமான வேலை நமக்கும் பிறருக்கும் நன்மை தருவதாய் இருப்பது மிகவும் அவசியம். அன்புணர்வு, தன்னம்பிக்கை, பக்தி, தன்னலமின்மை, தர்மசிந்தனை இவை போன்ற நல்ல எண்ணங்கள் எல்லாம் ஒருநாளில் ஒருமனிதனிடம் உண்டாவதில்லை. நம் இயற்கையான சுபாவமாகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்வதாலும் பயனில்லை. விடாமுயற்சி உங்களிடம் இருக்குமானால் நிச்சயம் ஒருநாள் நல்ல குணங்கள் அனைத்தும் உங்களின் அங்கமாகிவிடும்.

மனம் எப்போதும் ஒருநிலையில் இருப்பதில்லை. அவ்வப்போது தளர்ச்சி அடையக்கூடும். அப்போது நல்ல உயர்ந்த மனப்பான்மையை உருவாக்கும் நல்ல நூல்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். இதனால் மனம் சீர்பட்டு புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் மனதில் மீண்டும் தழைக்கும்.மேலான ஒரு லட்சியத்தை உங்கள் மனக்கண் முன் நிறுத்துங்கள். அதன்பின் அதைநோக்கிய பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே உண்மையானவராக மாறிவிடுவீர்கள். உங்கள் சிந்தனை, சொல், செயல் மூன்றும் உயர்ந்த லட்சியத்தை வட்டமிட்டுக் கொண்டே இருக்கட்டும். இம்மூன்றும் ஒன்றுபடும் போது மனிதனால் சாதிக்கமுடியாதது எதுவுமில்லை என்பதை உணர்வீர்கள்.

கர ஆண்டில் கிரகண நாட்கள்

கர ஆண்டில் இரண்டு சூரிய கிரகணங்களும், மூன்று சந்திர கிரகணங்களும் ஏற்படுகின்றன. ஆனால் இரண்டு சந்திர கிரகணம் மட்டுமே இந்தியாவில் தெரியும் என்பதால் அந்நாட்களில் மட்டும் தோஷ பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

* ஜூன் 15 புதன்கிழமை இரவு 11.52 மணிக்கு சந்திரகிரகணம் ஏற்படுகிறது. நள்ளிரவு 1.38 மணிக்கு உச்சமாகி 3.32 மணிக்கு விடுகிறது. 3 மணி 40 நிமிடங்களுக்கு இந்த கிரகணம் நீடிக்கிறது. இது முழுசந்திரகிரகணமாக இருக்கும். சந்திரனின் பிம்பம் மங்கலாகிவிடும். புதன்கிழமை பிறந்தவர்களும் ஆயில்யம், அனுஷம், கேட்டை, மூலம், ரேவதி மற்றும் விருச்சிக ராசியில் பிறந்தவர்களும் சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கிரகணம் விட்டபின் சந்திர தரிசனம் செய்ய வேண்டும். இந்த நாளில் சூன்ய திதி என்பதால் தர்ப்பணம் செய்யக்கூடாது. கர்ப்பிணிகள் கிரகண நேரத்தில் சந்திரனை பார்க்க கூடாது.

* டிசம்பர் 10 சனிக்கிழமை மாலை 6.14 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இரவு 7.58 மணிக்கு உச்சமாகி 9.47 மணிக்கு விடுகிறது. 3 மணி 37 நிமிடங்களுக்கு இந்த கிரகணம் நீடிக்கிறது. சனிக்கிழமை பிறந்தவர்களும் கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களும் சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கிரகணம் விட்ட பின்பு சனிக்கிழமை இரவே தர்ப்பணம் செய்து கொள்ளலாம். இரவு 10 மணிக்கு சந்திர தரிசனம் செய்ய வேண்டும். அன்று பவுர்ணமி திதி என்பதால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சிரார்த்தம் செய்ய வேண்டும்.

கர ஆண்டில் சிறந்த கிழமை

கரதமிழ் புத்தாண்டில் நீங்கள் முக்கிய வேலை துவங்க இருந்தால் வியாழக்கிழமையை தேர்ந்தெடுங்கள். கிரக நிலைகளின் படி இந்த ஆண்டு வியாழக்கிழமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நாளில் நவக்கிரக மண்டபத்திலுள்ள குருபகவானையும், சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தியையும் வழிப்பட்டு பணிகளை துவக்கினால் அது வெற்றிவாகை சூடும்.

நல்ல மாதங்களும், கவன மாதங்களும்

கரபுத்தாண்டில் நட்சத்திர வாரியாக சிறந்த மாதங்கள் மற்றும் சோதனையான மாதங்கள் பற்றிய விபரம் கீழே தரப்படுகிறது அசுவினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், சுவாதி, விசாகம், மூலம், திருவோணம், சதயம், பூரட்டாதி, ரேவதி ஆகிய 14 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ஆண்டு முழுவதும் சோதனை குறைவாகவே இருக்கும். பரணி, பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆவணி முதல் கார்த்திகை வரை சோதனை ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை முதல் ஆடி வரை சோதனையான காலகட்டம். கார்த்திகை, கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மார்கழி முதல் பங்குனி வரை சோதனை ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை முதல் கார்த்திகை முடிய எட்டு மாதங்கள் சோதனையான காலமாகும். பூசம், அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆவணி முதல் பங்குனி வரையிலான எட்டு மாதங்கள் சோதனை ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை முதல் ஆடி வரையும், மார்கழி முதல் பங்குனி வரையும் சோதனையான மாதங்கள். இந்த சமயங்களில் தேவையற்ற அலைச்சல், நிம்மதி குறைவு, பணப்பிரச்னை ஏற்படலாம். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்பவும், தெய்வ வழிப்பாட்டிற்கு ஏற்பவும் சோதனைகள் குறையும்.

ஒரே மாதத்தில் மூன்று கிரக பெயர்ச்சிகள்

புத்தாண்டில் குரு, ராகு, கேது கிரகங்கள் மே மாதத்தில் பெயர்ச்சியாகின்றனர். அதுவும் ஒரு வார இடைவெளிக்குள் இந்த பெயர்ச்சிகள் நடக்கிறது. எனவே ஒரு கிரகம் தரும் நற்பலனை மற்றொரு கிரகம் பறிக்கலாம் அல்லது ஒரு கிரகம் தரும் கெடுபலனை மற்ற கிரகங்கள் மாற்றியமைக்கலாம்.

* குருபகவான் மே9, திங்கள், அதிகாலை 1.09 மணிக்கு மீனராசியில் இருந்து மேஷராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

* ராகு, கேது கிரகங்கள் மே 16, திங்கள் காலை 9.55 மணிக்கு தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும், மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும் பெயர்ச்சியாகின்றன.

* சனிபகவான் டிசம்பர் 21, புதன் காலை 7.24 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

சித்திரையில் எத்தனை பண்டிகைகள்!

சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் செய்தார். ஆகவே, அன்று மத்ஸ்ய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத சுக்லபட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

வருடத்திற்கு ஆறுமுறை அபிஷேகம் காணும் தில்லை நடராஜருக்கு வசந்த காலமான சித்திரை மாத திருவோண நட்சத்திர தினத்தன்று அந்த ஆண்டிற்குரிய அபிஷேகம் நடத்தப்படுகின்றது. திருவையாற்றில் உமையம்மையின் தரிசனம் பெற்ற திருநாவுக்கரசர், சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் இறைவனடி சேர்ந்தார். சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு, சுக்லபட்ச பஞ்சமியன்று ஆதிசங்கரர் ஜெயந்தியும், ராமானுஜர் திருநட்சத்திர சேர்ந்து கொண்டாடப்படுகிறது. ரமண மகரிஷியின் ஆராதனையும் சித்திரைத் திங்களில் நடைபெறுகிறது.

எமதர்மனின் கணக்கரான சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பௌர்ணமி நாளில் தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றம் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது. அன்னை மீனாட்சி, மதுரையில் சொக்கநாதரை மணந்ததும், சித்திரை மாத பவுர்ணமி தினத்தில் தான். கள்ளழகர் மதுரை வைகையாற்றில் சித்திரை மாத பவுர்ணமியில் விழா காண்கிறார். சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்லபட்ச திருதியை அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. அன்று தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும். எந்தப்பொருள் வாங்கினாலும், எந்த செயல் செய்தாலும் அது மூன்று மடங்காக பெருகும் என நம்பப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா சித்திரை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ராமநவமி


மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.

வழிபடும் முறை: ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.

பலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.

விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்ன பலன் கிடைக்க

ஸ்ரீராமராமராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம்ராமநாம வரானனே

இந்த மந்திரத்தை மூன்று தடவை கூறினால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும்.

3 தடவை சொன்னா ஆயிரம் தடவை சொன்ன மாதிரி

ராமநாமத்தை மூன்று முறை சொன்னால் ஆயிரம் முறை சொன்னதாக அர்த்தம். இதற்கு காரணம் உண்டு. ராம என்ற சொல்லில் ரகர வரிசையில் ரா இரண்டாவது எழுத்து. ம என்பது ப, ப, ப,ப, ம என்ற ஸ்வர வரிசையில் ஐந்தாவது எழுத்து. இரண்டையும் பெருக்கினால் பத்து வரும். இதை மும்முறை சொன்னால் 10*10*10 = 1000 முறை சொன்னதாக பொருள் கொள்ளலாம்.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஒரு ராம பாடல்

கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க அருணாசல கவிராயர் பாடிய ராமநாடக கீர்த்தனையை ராகத்துடன் பாடுங்கள்.

கண்டேன், கண்டேன், கண்டேன்
சீதையை கண்டேன் ராகவா!
அண்டருங் காணாத அரவிந்த வேதாவை
லங்காபுரத்திலேயே தரவந்த மாதாவை(கண்)
காவி விழிகளில் உன் உருவெளி மின்ன
கனிவாய்தனிலே உன் திருநாமமே பன்ன
ஆவித்துணையைப் பிரிந்த மடஅன்னமானால்
நான் சொல்லுவதென்ன
பூவை திரிதடை நித்தம் நித்தம் சொன்ன
புத்தி வழியே தன்புத்தி நிலைமை என்ன
பாவி அரக்கியர் காவல்சிறை துன்ன
பஞ்சுபடிந்த பழம்சித்திரம் என்ன (கண்)

ராமனுக்கு பிடித்த 13

பொதுவாக 13 என்ற எண்ணை கண்டாலே அலறியடித்து ஓடுவார்கள். ஆனால் ராமபக்தர்களை பொறுத்தவரையில் இது ஒரு அருமையான எண். ராமமந்திரம் 13 அட்சரங்கள் கொண்டது. ஸ்ரீராம ஜயராம ஜய ஜயராம என்பதே ராமமந்திரம். இதில் 13 எழுத்துக்கள் உள்ளன. வடமாநிலங்களில் இந்த மந்திரத்தை தேரா அக்ஷர் என்று சொல்கிறார்கள். சைவத்திலும் ஸ்ரீ ருத்ரம் மந்திரம் ஓதும்போது சங்கர என்ற வார்த்தை 13 முறை வரும்.

தாய்லாந்தில் வித்தியாசமான ராமாயணம்

கம்பராமாயணத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ராமதூதன் அனுமானை பிரம்மச்சாரியாக பார்த்திருக்கிறோம். ஆனால், தாய்லாந்து நாட்டில் அவரைத் திருமணமானவராக கூறுகிறார்கள். அந்நாட்டை ஆண்ட நான்காம் ராமன் ராமகியான்என்ற பெயரில் ராமாயணம் எழுதியுள்ளார். அதில் சொல்லப்பட்டுள்ள இந்த தகவல் புதுமையாக இருக்கிறது.சிவலோகத்தில் வாழ்ந்த புஸ்மலி என்பவள், ஒரு சாபத்தால் லவா என்ற நாடாண்ட மன்னன் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு சுவர்ணமாலி என்ற தங்கை இருந்தாள். பெண்ணாசை கொண்ட ராவணன் அவர்களைக் கடத்தினான். அவன் உறங்கும் சமயத்தில், அவனிடமிருந்த சுரங்கப்பாதை சாவியைத் திருடிய சகோதரிகள், அந்தப் பாதைவழியே தப்பி தங்கள் நாட்டுக்கு சென்றனர். அவர்களை கற்பிழந்தவர்கள் என சந்தேகித்த தந்தை, ராமதூதன் ஒருவன் வருவான். அவனால் மட்டுமே உங்களுக்கு விமோசனம் தர முடியும், என சொல்லி விரட்டிவிட்டார். அவர்கள் வெவ்வேறு இடங்களில் தங்கினர். அனுமன் சீதையை தேடி சென்ற போது, ஒரு வீட்டில் புஸ்மலியைப் பார்த்தார். அவளது அழகால் கவரப்பட்ட அவர், தன் காதலை வெளிப்படுத்தினார். அவள் ஏற்க மறுத்தாள், தான் கண்ணியத்துக்குரிய ராமபிரானின் தூதர் என்பதையும், அவர் சீதாவுக்காக தன்னிடம் தந்திருந்த மோதிரத்தையும் அவளிடம் காட்டியதும், அவள் மகிழ்ந்தாள். ராமதூதனே தனக்கு விமோசனம் தர முடியும் என்பதை அறிந்த அவள் அவரைத் திருமணம் செய்து கொண்டாள். தன் தங்கையைத் தேடிப்பிடித்து அவளையும் திருமணம் செய்ய வேண்டினாள். அனுமன் அவளைக் கண்டு பிடித்து திருமணம் செய்து கொண்டார். அவளிடம் இருந்த சுரங்கச்சாவியைக் கொண்டே அனுமன் ராவணனின் கோட்டைக்குள் எளிதாக புகுந்தார்.

குழந்தை பாக்கியத்துக்கு ராமனிடம் வேண்டுதல்

நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் ராமபிரானை மனதில் நினைத்து இந்த பிரார்த்தனையை செய்தால் ராம சகோதரர்களைப்போல் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள் என்பது ஐதீகம். நாராயணீயம் எழுதிய நாராயணபட்டத்திரி என்ற பிரார்த்தனையை எழுதியுள்ளார். இறைவா! தங்களிடம் ராவணவதத்தைக் குறித்து தேவர்கள் வேண்டிக் கொண்டார்கள். கோசலநாட்டில் ரிஷ்யசிருங்க முனிவர் புத்திரபேறுக்கான வேள்வியை செய்தார். தசரத மன்னரிடம் பாயாசம் கொடுக்கப்பட்டது. அதை அருந்தியதால் ஒரே சமயத்தில் தசரத மன்னரின் மூன்று மனைவியரும் கருத்தரித்தனர். பரதனோடும், லட்சுமணனோடும், சத்ருக்கனனோடும் தாங்களே ராமனாக அவதரித்தீர். இறைவா! ராமனாக அவதாரம் செய்த குருவாயூரப்பனாகிய தாங்கள் இந்திரனால் அனுப்பப்பட்ட ரதத்தையும், கவசத்தையும் ஏற்றுக்கொண்டீர்கள். ராவணனோடு சண்டை செய்து அவனுடைய எல்லா தலைகளையும் பிரம்மாஸ்திரத்தால் வெட்டி தள்ளினீர்கள். தீயில் குளித்த தூயவளான சீதையை திரும்பவும் ஏற்றுக் கொண்டீர்கள். வானர கூட்டங்கள் காயம்படாமல் இருந்தன. இறந்த வானரங்களை தேவர்கள் கூட்டம் பிழைக்க வைத்தது. இலங்கையின் மன்னனான விபீஷணனுடனும், பிரிய மனைவியான சீதாதேவியுடனும், அன்புக்குரிய லட்சுமணனுடனும் புஷ்பக விமானத்தில் உங்கள் சொந்த நகரமான அயோத்திக்கு சென்றீர்கள்.(இந்த பிரார்த்தனையை சொன்னால் குழந்தை பேறு மட்டுமின்றி, பால் வளம் பெருகும் என்பதும் ஐதீகம்).

இப்படி பிரார்த்தித்தால் வீட்டுக்கே வருவார் ராமர்

ராமபிரானை பற்றி சதாசிவ பிரம்மேந்திராள் சமஸ்கிருது பாடல் ஒன்று எழுதியுள்ளார். அந்த பாடலின் விளக்கத்தை ராமநவமி அன்று படித்தால், ஸ்ரீராமபிரான் நம் இல்லத்திற்கே எழுந்தருளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த பிரார்த்தனையை மனஉருக்கத்துடன் செய்யுங்கள்.ஏ நாக்கே! ராம என்னும் அமுதத்தை பருகுவாய். ராமன் என்னும் சுவையை பற்றுவாய். பாவங்களின் தொடர்பை அது போக்கும். பலவிதமான பழரசத்தால் அது நிரம்பியது. பிறப்பு, இறப்பு, அச்சம், துன்பம் இவற்றை அது போக்கும். நியமம், ஆகமம் என்னும் எல்லா சாஸ்திரங்களின் சாரமாக இருப்பது ராமநாமமே. ராமனின் நாமமே இந்த உலகை பாதுகாக்கிறது. வெளிவேஷக்காரர்களையும் நல்லவர்களாக மாற்றுகிறது. சுகர், சவுனகர், கவுசிகர் ஆகியோர் தம் வாயால் ராம அமுதத்தை பருகினார்கள். தூயவர்களாகி பரமஹம்சர்களின் ஆஸ்ரமங்களிலேயே அவர்கள் பாடினார்கள். அத்தகைய ராம அமுதத்தை நாங்களும் பருகுகிறோம்.

ராமனுக்குள் அடங்கிய ரமா

சிலர் ஸ்ரீராம ஜெயத்தை வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற வேண்டுதல்களுக்காக எழுதுகின்றனர். இவை நிறைவேறுவது மட்டுமின்றி, அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியை இந்த மந்திரம் தரும்.ராம என்ற மந்திரத்துக்கு பல பொருள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ரா என்றால் இல்லை, மன் என்றால் தலைவன். இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது ராமனின் பொருள்.

ஜெகம் புகழும் ஸ்ரீராமன் !

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

அறுபதினாயிரம் ஆண்டுகள் பிள்ளை இல்லாமல் தவித்த தசரத மன்னவன், கௌஸல்யா தேவியாரிடத்து ராமனைப் பெற்றார். சாட்சாத் நாராயணனே ராமனாகப் பிறந்தான் என்பது வரலாறு. வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே...(வேதத்தால் அறியப்படும் பரம்பொருளே ராமனாகத் தோன்றினான்) எனும் வரியே இவ்விஷயத்தில் சான்றாகும்.

ஸ்ரீராமன் எதற்காக அவதரித்தான் என்பது குறித்து அழகான விளக்கம் தருகிறார்கள் வைணவப் பெரியோர்கள்; பித்ரு வாக்ய பரிபாலனம்- இதுவே ஸ்ரீராம அவதாரத்தின் முக்கிய காரணம் என்கிறார்கள். அதாவது, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உலகில் நிலைநாட்டுவதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாம். இல்லையென்றால்... ஒரு தவறும் செய்யாதிருந்தும், 14 ஆண்டுகள் பூழி வெங்கானம் (காடு) நடந்திருப்பானா ?!

தந்தை வரட்டும்; கல்யாணம் முடிக்கலாம்....

இன்னொரு சுவையான நிகழ்ச்சியையும் பார்ப்போம். தாடகை வதத்தின் பொருட்டு ராமனையும், இலக்குவனையும் அழைத்துச் செல்கிறார் ஸ்ரீவிஸ்வாமித்ர முனிவர். அவர்கள் மிதிலா தேசத்தை அடைந்தபோது, சீதைக்கு சுயம்வர ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறார் ஜனகர். பெரிய சபையில் சிவ தனுசு வைக்கப்பட்டிருந்தது. அதை நாணேற்றி முறிப்பவருக்கே தன்னுடைய மகள் சீதையை கொடுக்க இருப்பதாக அறிவிக்கிறார் ஜனகர். சிலர் முயற்சி செய்து தோற்ற பிறகு, வில்லை சற்றுப் பார்ததுவிட்டு வரும்படி ராமனிடம் சொல்கிறார் விஸ்வாமித்திரர். வில்லை நன்கு பார் என்று முனிவன் சொன்னதற்கான உட்கருத்தை அறிந்த ராமன், நாணேற்றி சிவதனுசை முறிக்கவும் செய்தான். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சீதை, மண மாலையோடு ராமனை நெருங்குகிறாள். அப்போது, ராமன் உரைக்கிறான்... வில்லைப் பார் என்றார் விஸ்வாமித்திரர். நான் பார்த்தேன்... அவ்வளவுதான். மற்றபடி இந்த கல்யாணமெல்லாம் என் தகப்பனார் வந்து தீர்மானிக்கவேண்டிய விஷயங்கள். அப்பா வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றான். சீதையை மணக்கும் காலத்திலும் தசரதனது முடிவையே ஸ்ரீராமன் எதிர்நோக்கி இருந்தான் என்றால், அவன் தன் தந்தையின் மீது எவ்வளவு மரியாதை கொண்டிருந்தான் என்பதை நாம் உணரலாம்.

அவ்வளவு ஏன்... ராவண வதம் முடித்து, புஷ்பக விமானத்தில் அமர்ந்து அயோத்தியை நெருங்கும்போது, தனது தந்தையின் ராஜ்ஜிய பூமி வந்துவிட்டது என்றே சீதையிடம் கூறுகிறான்; தன்னுடைய ஊர் என்று சொல்லிக் கொள்ளவில்லை! மனிதனை, விலங்கினத்தில் இருந்து பிரித்துக் காட்டுவது அவனது பண்புகளே. நற்பண்புகளே மனிதனை செதுக்குகின்றன. ஸ்ரீராமனிடம் எதிரிகளும் போற்றும் குணநலன்கள் உண்டு.

தர்மமே வடிவெடுத்து வந்தது!

சீதையை அபகரிக்கத் திட்டம் தீட்டுகிறான் ராவணன். அதற்காக மாயாவியான மாரீசனது உதவியை நாடுகிறான். தனக்கு உதவாவிட்டால் மாரீசனை தீர்த்துவிடுவதாகவும் மிரட்டுகிறான் ராவணன். ஏற்கெனவே, தாடகை வதம் நிகழ்ந்தபோது, ஸ்ரீராமனால் அடித்து விரட்டப்பட்டவனே இந்த மாரீசன். எனவே, சீதையை அபகரிக்கும் திட்டத்தைக் கைவிடும்படி, ராவணனிடம் மன்றாடுகிறான். அப்போது முன்பு ஸ்ரீராமனிடம் அடிபட்டதை நினைவு கூர்ந்தான். ?அவனது உடல் நடுங்கியது. ஆனால் வார்த்தைகள் தெளிவாய் வந்து விழுந்தன. முன்பு ராமன் என்னை அடித்தபோது பிரம்மச்சாரி பிள்ளையாக இருந்தான். அப்போதே அவன், நெருங்க முடியாத திறன் உடையவனாக, தேஜஸ் உடையவனாக இருந்தான். இப்போது ஜனகன் மகளை. சாட்சாத் ஸ்ரீமகாலட்சுமியைக் கைப்பிடித்திருக்கிறான். எனவே, இன்னும் ஒளிமிக்கவனாக; நெருங்க ஒண்ணாத வடிவுடையவனாகத் திகழ்வான் என்றான். அப்ரமேயம் ஹி தத் தேஜா யஸ்யஸா ஜநகாத்மஜா என்பது மாரீசன் வாக்கு. மேலும், தர்மமே வடிவெடுத்தவன் ஸ்ரீராமன் என்பதையும் ராவணனுக்கு உணர்த்தத் தவறவில்லை மாரீசன். ராமோ விக்ரஹவாந் தர்ம; எவ்வளவு உயர்ந்த வாக்கு இது. நம்முடைய நண்பர்களே நம்மைப் பாராட்டத் தயங்குவர். ஆனால், எதிரியான மாரீசனும் ராமனை தர்மமே வடிவெடுத்தான் என்று கொண்டாடுகிறான் என்றால், ஸ்ரீராமன் எத்தகைய பண்பாளன் என்பதை நீங்கள் உணரலாம்.

குணத்தில் தோற்ற விபீஷணன்; வீரத்தில் தோற்ற ராவணன்!

யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: என்று போற்றுகிறான். அதாவது, தனது பராக்கிரமத்தைக் காட்டி எதிரியை வியக்கச் செய்பவன் என்று ஸ்ரீராமனைக் கொண்டாடுகிறான். ராமனின் வீரத்தில் தோற்றான் ராவணன், ராமனின் அழகில் தோற்றாள் சூர்ப்பணகை. ராமனின் குணத்தில் தோற்றான் விபீஷணன். இது, ஸ்ரீராமனின் தனிப் பெருமை அல்லவா ? குகனோடும் ஐவரானோம் என்று படகோட்டி குகனையும் தன்னுடைய சகோதரனாக ஏற்றுக்கொண்ட தன்மை... இன்றளவும் நாம் போற்றும் ஸ்ரீராமனின் சிறப்பல்லவா?

திருப்புட்குழி விஜயராகவன்

பெற்றெடுத்த தந்தைக்கே ஈமச்சடங்குகளைச் செய்ய பலபேர் இன்று தயங்கிறபோது, பறவையான ஜடாயுவை தன் தந்தையாகவே பாவித்து, அந்திம க்ரியைகளைச் செய்தான் ராமன். இன்றைக்கும் காஞ்சிபுரம் அருகில், திருப்புட்குழி தலத்தில், ஜடாயு மகாராஜாவுக்கு ஈமச்சடங்குகள் செய்தவனாக, ஸ்ரீவிஜயராகவனாக தரிசனம் தந்தருள்கிறான் ஸ்ரீராமன். எண்ணிறந்த குணநலன்கள் ஸ்ரீராமனிடம் இருந்தாலும், அடுத்தவரது துன்பத்தை, தனது கஷ்டமாகக் கருதி, அவற்றைத் தீர்க்க முற்படுவது, ஸ்ரீராமனின் தலையாய பண்பாகும். வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி து:க்கித: என்ற பிரமாணத்தின் மூலம் இதை நாம் அறியலாம். அடுத்தவர் நலனை கருத்தில்கொண்டு, அத்தனை துன்பங்களையும் தானே எவனொருவன் ஏற்றுக் கொள்கிறானோ, அவனையே உத்தமன் எனப் போற்றுகிறோம். எனவேதான் ஸ்ரீராமன் தான் முடிசூட்டிக் கொள்ளாமல், கொடிய கானகம் சென்றான். தன் உடன்பிறவாத் தம்பிகளான சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் முடிசூட்டிய பிறகே, தனது முடிசூட்டு விழா நடைபெற வேண்டும் என்பது ராமனின் அபிப்பிராயமாம். ஆகவேதான், முதல் தடவை பட்டாபிஷேகம் தடைப்பட்டது. விபீஷணனுக்கு முடிசூட்டிய பிறகு, தான் செய்யவேண்டியதை செய்து முடித்ததாக திருப்தி கொண்டானாம். சீதையைப் பிரிந்து துன்பக் கடலில் மூழ்கியிருந்தபோதிலும், விபீஷணன் முடிசூட்டிக் கொண்டதும், மகிழ்ச்சியில் திளைத்தானாம் !

புல் - பூண்டுக்கும் மோட்சம் தந்தவன்

அதேபோல், தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுந்தம் புறப்படும்போது, அயோத்தி வாழ் மக்கள் அனைவரையும் தன்னுடன் மேலுலகத்துக்கு அழைத்துச் சென்றான். அதோடு நில்லாமல் அயோத்தியில் இருந்த செடி, கொடி, புல், பூண்டு முதலியவற்றுக்கும் முக்தியை நல்கினான் எனில், ஸ்ரீராமனின் பெருமையை என்னவென்பது?! பரமசிவனாரும் எப்போதும் தியானித்துக் கொண்டிருப்பது ஸ்ரீராமனைத்தானே! பார்வதிதேவிக்கு அவர் உபதேசித்தது ஸ்ரீராம நாமத்தைத்தானே !

இன்றைக்கும் காசியில் ஒரு நம்பிக்கை உண்டு. எவர் ஒருவர் காசியில் மரித்தாலும், அவர் நற்கதி அடையும் பொருட்டு, அவருடைய செவியில் ஸ்ரீராம தாரக மந்திரத்தை பரம சிவனே உபதேசிக்கிறார் என்பர். எனவேதான் ஸ்ரீநம்மாழ்வாரும் கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ - என்று போற்றுகிறார். எனவே, நாமும் ஸ்ரீராமநவமி தினத்தில் ஸ்ரீராமனைத் துதித்து இவ்வுலக இன்பங்களை குறைவில்லாமல் பெறுவதோடு மறுமைக்கும் நன்மையைச் சேர்த்துக் கொள்வோம்.

ஜடாயு குண்டம்

வைதீஸ்வரன் கோயிலில் ஜடாயு குண்டம் எனும் பகுதி உள்ளது. இங்குதான் ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் தகனக் கிரியை செய்தார் என்பது நம்பிக்கை. புல் என்றால், ஜடாயு; ரிக்- வேதம்; வேள் - முருகன் இந்த மூவரும் வழிபட்டதால் இந்தத் தலத்தை புள்ளிருக்கு வேளூர் என்றும் போற்றுவர். ஜடாயு குண்டத்துக்கு எதிரில் ஸ்ரீராமன், லட்சுமணன் முதலானோரின் திருவுருவங்களையும் தரிசிக்கலாம். இந்தக் குண்டத்தில் இருக்கும் சாம்பலைச் சேகரித்து நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள் பக்தர்கள்.

வினைகள் தீர்க்கும் வீரராகவர்

சென்னையில் இருந்து சுமார் 47 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவள்ளூர். இங்கே கோயில் கொண்டிருக்கும் பெருமாள் ஸ்ரீவீரராகவர் எனும் திருநாமத்துடன், பாம்பணையில் பள்ளி கொண்ட கோலத்தில் சேவை சாதிக்கிறார். நாபிக்கமல பிரம்மனுக்கு இடக்கையால் பிரணவ தத்துவத்தை உபதேசித்தவாறும், வலக் கரத்தை சாலிஹோத்ர முனிவரின் சிரசில் வைத்து அபயப் பிரதானம் செய்தவாறும் காட்சி தருவது விசேஷம்.

தசரதன் அருள்பெற்ற திருப்புல்லாணி

பூரி ஜெகந்நாதருக்கும் முற்பட்டவர் திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர்; இவர், 72 சதுர் யுகங்களுக்கு முன் தோன்றியவராம் ! திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தத் தலம், ராமேஸ்வரத்துக்கு அருகில், சேதுக்கரையிலிருந்து வடக்கே, சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே, ஆதிஜெகந்நாதர் நித்யவாசம் செய்த அரசமரத்தைத் தரிசிக்கலாம். புல்லவர், கண்ணுவர், காலவர் ஆகிய முனிவர்களுக்குத் தங்கமயமான அச்வத்த மரமாகக் காட்சி தந்தாராம் பெருமாள். இவர்கள் வேண்டுகோளை ஏற்று, இங்கேயே கோயில் கொண்டாராம். அதுமட்டுமா? நான்கு வேதங்களும் உனக்கு நான்கு பிள்ளைகளாகப் பிறக்கும் என்று தசரதன் அருள்பெற்றதும், சீதையைத் தேடிவந்த ஸ்ரீராமருக்குவில் அருளப்பெற்றதும் இந்தத் தலத்தில்தான்!

வில் ஊன்றிய தலம்

ராமேஸ்வரத்துக்கு அருகில் வில்லூண்டி எனும் தலம் உண்டு. சீதாதேவியின் தாகம் தணிக்க, ஸ்ரீராமன் தரையில் தனது வில்லை ஊன்றி, நன்னீர் பெற்ற திருத்தலம் இது. வில் ஊன்றி என்பதே நாளடைவில் வில்லூண்டி என மருவியதாகச் சொல்கிறார்கள். அருகில் கடல் இருக்க, இந்த இடத்தில் மட்டும் நன்னீர் கிடைப்பது அற்புதமே !

ஸ்ரீராம தீர்த்தம்

ஆந்திர மாநிலம் - விஜய நகரத்திலிருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது ராம தீர்த்தம் எனும் தலம். இங்கு கருவறையில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் காட்சி தருகிறார் ஸ்ரீராமன். ஆனால் அனுமன் இல்லை. ஸ்ரீராமன் அனுமனைச் சந்திப்பதற்கு முந்தைய நிலை இது என்கிறார்கள்.

சங்கு சக்கரத்துடன் ஸ்ரீராமன்

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற கோயில்களில், பத்ராசலம் ஸ்ரீராமன் ஆலயமும் ஒன்று. தண்டகாரண்யத்தில், மகாமேரு முனிவரின் மகளான பத்ரா என்பவள், தவம் செய்து அருள் பெற்ற தலம் இது. அரசு பணத்தைச் செலவழித்துக் கோயில் கட்டினார் என்பதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார் பத்ராசலம் ராமதாஸர். அவரைக் காப்பாற்றும்பொருட்டு, தப்பி லட்சுமணனுடன் வந்து, அந்த தேசத்தை ஆண்ட நவாப்பிடம் கோயில் கட்டியதற்கான தொகையை ஒப்படைத்து ஸ்ரீராமன் அருளாடல் புரிந்த தலம்! நான்கு கரங்களுடன் சங்கு - சக்கரம் ஏந்தி, பத்ராசலம் ஸ்ரீராமர், திகழ்வது அற்புதம்!

ஸ்ரீ ராமருக்கு விருந்து

பரத்வாஜர் ராமனுக்கு விருந்து படைத்த கட்டத்தைப் பாட்டிகள் பாடும் விதமே அலாதியானது.

வைகுண்டவாசருக்கு வாழை இலை போட்டு
வாழை இலைதன்னை வடக்கே நுனி போட்டு
காட்டுச் சிறு கிழங்கும் கந்த மூலம் பழமும்
தூது விளங்காயுடனே சுண்டைக்காய் பச்சடியும்
அஞ்சு வகைப் பச்சடியும் ஆன நல்ல தாளிதமும்
பத்துவகைப் பச்சடியும் பால் குழம்பும் சர்க்கரையும்
பொறிச்ச பொறி கறியும் பொன்போல் சிறு பருப்பும்
புத்துருக்கு நெய்யும் புனுகு சம்பாப் பாயசமும்
தேங்காயும் சர்க்கரையும், தித்திக்க மோதகமும்
பச்சுன்னு கீரையும் பால் வடியும் மாவடுவும்
வேர்புறத்திலே வெடித்த வேண பலாச்சுளையும்
தார் பழுத்துச் செறிந்த தேனான கதலிகளும்
கொத்தோடு மாம்பழமும் கொம்பிலுள்ள நல்தேனும்
கொய்யாப் பழங்களும் கொடி முந்திரிப் பழமும்
கிச்சிலிப் பழங்களும் கிளுகிளுத்த மாதுளையும்
வெள்ளைக் கடுக்காயும் வெடுக்குன்னு இஞ்சியும்
பச்சை மிளகும் பால் வழியும் களாக்காயும்
நேர்த்தியாய் நெல்லிக்காய் மணமுள்ள மாகாளி
நார்த்தை கடநார்த்தை நறுமண எலுமிச்சை
கடுகு மாங்காயும் கார மிளகாயும்

இப்படி முற்றிலும் அடுக்களைப் பெண்களாகப் பாட்டுச் செய்தவர்கள், போஜனம் முடித்த ராமன், காலும் அலம்பி கனிவாயும் கொப்புளிச்சு ஆசமனம் பண்ணி அவருமங்கே வீற்றிருந்தார் எனும் போது கவிகளாகவும், சாஸ்திர ஆசார சீலைகளாகவும் ஆகி விடுகின்றனர். கையலம்பி வந்ததும் ஜீர்ணம் ஆவதற்காக, ஏலமுடன் சுக்கு எல்லார்க்கும் தாம் கொடுத்தார் என்று மறக்காமல் சொல்வதை, பாட்டிமார் பாஷையிலேயே, பொகு அழகு என்று சிலாகிக்கலாம்.

அப்படி என்ன பேரழகி அவள்?

ராமர் ராவணனைப் போரில் வென்றார். இலங்கை அரசனாக விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் சூட்டினார். விழா முடிந்ததும் சீதை, லக்ஷ்மணன் இவர்களுடன் வானரங்களையும் அழைத்துக் கொண்டு, இலங்கையை விட்டு புஷ்பக விமானத்தில் புறப்பட்டார். விமானம் கிஷ்கிந்தையை அடைந்தது. விமானத்திலிருந்து ராமர் கீழே இறங்கினார். கிஷ்கிந்தைப் பெண் குரங்குகள் அங்கு ஓடோடி வந்தன. விமானத்தில் தாவி ஏறின. அவற்றுக்குத் தங்கள் கணவரைப் பார்ப்பதற்கும் முன்னால் சீதையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். அப்படி என்ன பேரழகி அவள்? அவளை மீட்பதற்காக எத்தனை பெரிய போர்? என்ற சிந்தனையோடு பார்த்தன. சீதையைச் சுற்றிச் சுற்றி வந்த பெண் குரங்குகள் தங்களுக்குள் பேசிக் கொண்டன; இது என்ன பிரமாத அழகோ? நம்மைப் போல் இவளுக்கு ஒரு வால்கூட இல்லையே!

Wednesday, February 23, 2011

மனிதர்களின் அற்ப ஆயுள்!




மனிதர்களின் அற்ப ஆயுள்!

ஒரு முறை தேவ சிற்பியான விஸ்வகர்மாவிடம் இந்திரன், பதினான்கு உலகங்களிலும் இப்படி ஒரு மாளிகை இல்லை என்று சொல்லும்படியாக மிகச்சிறந்ததும் மிகப் பெரியதுமாக ஒரு மாளிகை கட்ட வேண்டும் என உத்தரவிட்டான் விஸ்கர்மாவும் தன் உதவியாளர்களுடன் மாளிகை கட்ட தயாரானார். இந்திரனின் விருப்பப்படி மாளிகை கட்ட வேண்டியிருந்ததால், பல தேவ வருடங்கள் ஆகியும் விஸ்வகர்மாவால் அப்படி ஒரு மாளிகையை கட்டி முடிக்க முடியவில்லை. விஸ்வகர்மாவும் அவரது உதவியாளர்களும் களைத்து போயினர். நொந்து போன இந்திரன் என்ன செய்வது என சிந்தித்து கொண்டிருக்கும். வேளையில், சாகா வரம் பெற்ற லோமசர் என்ற மகரிஷி அங்கு வந்தார். அவருக்கு உடம்பெல்லாம் ரோமங்கள் இருந்ததால் லோமசர் என்று பெயர். இவருக்கு இடுப்பில் சிறு துணியும் தலையில் ஒரு பாய் மட்டுமே சொத்து. அவரைப் பார்த்து இந்திரன், மகரிஷி ! பாயை எதற்கு தலைக்கு மேலே விரித்தாற் போல் வைத்திருக்கிறீர்கள் ? எனக் கேட்டான். அதற்கு லோமசர், இந்த உடலோ வீணானது. இதைக் காப்பாற்றுவதற்கு ஒரு வீடு கட்ட வேண்டுமா என்ன ? இந்த உடலை வெப்பத்திலிருந்தும், மழையிலிருந்தும் காப்பதற்காக தலையின் மேல் பாயை வைத்துள்ளேன், என்றார். எதிர்பார்க்காத இந்த பதிலை கேட்டு அதிர்ந்த இந்திரன், சிரஞ்சீவியான தாங்களா தங்கள் உடலை வீண் என்கிறீர்கள் ?

அதற்கு மகரிஷி, சிரஞ்சீவியாக இருந்தாலும் என் உடலும் ஒரு நாள் போக வேண்டியது தானே ? என் உடம்பிலுள்ள அத்தனை ரோமங்களும் உதிர்ந்ததும் இந்த உடல் அழிந்து விடும். என் மார்பு பகுதியை பார்... அதில் காசு அளவுக்கு ரோமம் உதிர்ந்து விட்டது. இத்தனைக்கும் என் ரோமம் உதிர்வதற்கு அதிக காலம் ஆகும் என நினைக்க வேண்டாம். ஒவ்வொரு பிரம்மா மறையும் போதும் உன் உடலிலிருந்து ஒரு ரோமம் உதிர்ந்து விடுகிறது. பிரம்மாவின் ஆயுட்காலம் என்பது பதினாறு இந்திரர்களின் ஆயுட் காலம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு நாள். அப்படி 365 நாளானால், பிரம்மாவுக்கு ஓராண்டு. அப்படி நூறு ஆண்டுகள் சேர்ந்தது பிரம்மாவின் ஆயுள். இப்படியே ஒவ்வொரு ரோமமாக என் உடலிலிருந்து அனைத்து ரோமங்களும் உதிர்ந்ததும் என் ஆயுள் முடிந்துவிடும். இந்த அற்ப ஆயுளுக்காகவா என்னை வீடு கட்டி கொள்ள சொல்கிறாய் ? என்றார் மிகச் சாதரணமாக. மீண்டும் அதிர்ந்தான் இந்திரன். மகரிஷி லோமசரின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும் போது தன் ஆயுட்காலமானது மிகவும் அறபத்தனமானது என்பதை இந்திரன் எண்ணிப்பார்த்தான். உடனே அந்த பெரிய மாளிகை கட்டும் திட்டத்தை அப்படியே விட்டுவிட்டான். நாம் வாழ்வதோ கொஞ்ச காலம் தான் அதில் பணம், பொருள் என சேர்க்காமல் புண்ணியத்தை மட்டும் சேர்ப்போம்

Friday, February 11, 2011

துன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு!




சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர்.

1. பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கும் பைரவர் என்பது பெயராயிற்று.

2.பைரவருக்கு ÷க்ஷத்திர பாலகமூர்த்தி என்றும் ஒரு பெயருண்டு. ÷க்ஷத்திரம் என்றால் கோயில். பாலகர் என்றால் காப்பவர். கோயிலைக் காப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

3. பொதுவாக பைரவர் நீலமேனி கொண்டவராய், சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய், பாம்புகள் பொருந்திய திருவரையும் மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், பாசம், உடுக்கை, மழு முதலியன தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் அஷ்டபைரவர் வடிவங்களாகக் கூறும்போது அவரின் வண்ணம் ஆயுதம், வாகனம் இவை மாறுபட்டுக் காணப்படும்.

4. காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு இடங்களிலும் பைரவர் கோயில்கள் காணப்படுகின்றன.

5. தாராசுரம் மற்றும் திருப்போரூரில் பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

6. பைரவரின் பொதுவான வாகனம் நாய் ஆகும். ஒற்றை நாய் வாகனம் காணப்பட்டாலும் நகரத்தார் கோயில்களில் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. ஆனால் திருவான்மியூர், போரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.

7. அஷ்ட பைரவ வடிவங்களில் அன்னம், ரிஷபம், மயில், கருடன், குதிரை, யானை, சிம்மம், நாய் ஆகியவை வாகனங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

8. பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ விரதம் இருந்து வழிபட்டால் எந்தத் துன்பமும் நம்மை அணுகாது.

பொங்கல் திருநாள், மகர சங்கராந்தி, ரதசப்தமி, உத்தராயன புண்ணியகாலத் துவக்கம் என எண்ணற்ற வைபவங்களுடன் திகழும் தை மாதத்துக்கு இன்னொரு விசேஷமும் உண்டு. ஆமாம் காவல் தெய்வம் பைரவர் வழிபாட்டுக்கும் உகந்த மாதம். தை மாதம் முதல் செவ்வாயில் துவங்கி, அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் பைரவரை வழிபடுவது சிறப்பு. அதிலும் பைரவரின் மகாத்மியத்தை அறிந்து வழிபடுவதால், பலன்கள் பன்மடங்கு அதிகம் கிடைக்கும். சிவாலயங்களில், விநாயகர் தரிசனத்துடன் ஆரம்பிக்கும் வழிபாடு, பைரவ தரிசனத்துடன் நிறைவடையும். அகில உலகங்களையும் காத்து ரட்சிக்கும் சிவனாரின் கோயில்களுக்கு பைரவரே காவல் தெய்வம். உலகையும் அதில் அமைந்த திருத்தலங்கள் மற்றும் தீர்த்தங்களையும் காவல் புரியும் தெய்வம் ஆதலால், ÷க்ஷத்ரபாலகன் என்றும், தீர்த்தபாலகன் என்றும் பைரவரை பலவாறு போற்றுகின்றன புராணங்கள். தன்னுடைய அன்பர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயோர்களுக்கு பயங்கரமானவராகத் திகழ்வதால் பைரவர் என்றும், வஜ்ஜிரகோட்டையாகத் திகழ்ந்து, தன்னை சரணடையும் பக்தர்களைக் காப்பவர் ஆதலால் வயிரவ மூர்த்தி என்றும் இவருக்கு திருப்பெயர் ஏற்பட்டது. ஞானிகளிடம் அறிவை வளர்க்கும் ஞான பைரவராகவும், யோகிகளுக்குக் காவலாக இருப்பதுடன், தாமே பெரிய யோகியாக விளங்கி யோக பைரவராகவும், வீரர்களிடம் உக்கிர பைரவராகவும், பஞ்சபூதங்களின் சீற்றங்களில் இருந்து பூமியைக் காப்பதால் பூத பைரவராகவும் அருள்புரிகிறார்.

உலகையும் உயிர்களையும் காக்கும் தன்மை சிவபெருமானுக்கே உரியது என்பதால், அவருடைய ஒருகூறே பைரவமூர்த்தியாக எழுந்தருளி, அன்பர்களுக்கு அருள்கிறது என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மன், ஆதிகாலத்தில் சிவனாரைப் போன்றே ஐந்து தலைகளுடன் திகழ்ந்தார். ஒருமுறை, அவர் அகந்தையால் அறிவு மயங்கிச் சிவ நிந்தனை செய்தபோது, சிவபெருமான் பைரவரைத் தோற்றுவித்தார். பைரவர், பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுத்து கபாலமாக்கிக் கொண்டார். அடி-முடி தேடியபோது திருமுடி கண்டேன் எனப் பொய்யுரைத்ததால் பிரம்மனின் ஐந்தாவது தலையை பைரவர் மூலம் கொய்ததாகவும் ஒரு புராண தகவல் உண்டு. பிரம்மனின் சிரம் கொய்யப்பட்ட திருவிடம் திருக்கண்டியூர் ஆகும். தஞ்சாவூர்-திருவையாறு பாதையில் உள்ள இந்த ஊர், சிவனாரின் அட்ட வீரட்ட திருத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு அருள்பாலிக்கும் திருக்கண்டீஸ்வரரையும், பிரம்மனின் சிரம் கொய்த பைரவரையும் தரிசிப்பது சிறப்பு.

அந்தகாசுரன் என்பவன் தேவர்களைத் துன்புறுத்தியதுடன், அவர்களைப் பெண் வேடத்துடன் திரியும்படிச் செய்து அவமானப்படுத்தினான். தேவர்கள், சிவபெருமானை சரணடைந்தனர். அவர் மகாபைரவரைத் தோற்றுவித்து அந்தகனை அழிக்கும்படி ஆணையிட்டார். அதிஉக்கிரத்துடன் அந்தகன் மீது போர் தொடுத்த பைரவர், அவனைத் தனது சூலத்தில் குத்தித் தூக்கியவாறு மூன்று உலகங்களிலும் திரிந்தார். அவனுடைய உடலிருந்து வழிந்த ரத்தத்தைக் குடித்தார். அஞ்சி நடுங்கிய அந்தகாசுரன், பைரவரைத் துதித்தான். அதனால் மகிழ்ந்த பைரவர், அவனை சூலத்தில் இருந்து விடுவித்தார். அதேபோல் முண்டகன் முதலிய இன்னும்பல அசுரர்களையும் அழித்து, பைரவர் தேவர்களைக் காத்து பரிபாலித்த கதைகளும் புராணங்களில் உண்டு. வானவர்களுக்கு மட்டுமல்ல தூய பக்தியுடன் தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் வேண்டிய வரம் தந்து அருள்பாலிக்கும் கண்கண்ட தெய்வம் பைரவர். கடன் தொல்லை நீங்கவும், சத்ருபயம் அகலவும், பில்லி-சூனியம் போன்ற தீவினைகளின் பாதிப்புகள் இல்லாமல் இருக்கவும் பைரவரை பலவாறு போற்றி வழிபடுகின்றனர்.

தேய்பிறை அஷ்டமி திருநாள் பைரவரை வழிபடுவதற்கு உகந்த தினம். குழந்தை இல்லாமல் வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி திருநாட்களில்... செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பர். அதே போல், தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ ஹோமம் செய்வதுடன், பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் கலச தீர்த்தத்தைப் பருகுவதால் தீராத பிணிகளும் தீரும் என்பர். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று, அங்கு அரள்பாலிக்கும் பைரவமூர்த்திக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி, தயிர் அன்னம், தேன் மற்றும் தேங்காய் சமர்ப்பித்து வழிபடுவதால் பில்லிசூனியம் போன்ற தீவினைகள் நீங்கும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். வீட்டிலேயே நேரம் கிடைக்கும் போது பைரவ சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வதாலும் மிகுந்த பலன் உண்டு.

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், பைரவருக்கு விபூதி அபிஷேகத்துடன், வடைமாலை அணிவித்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால், திருமணத் தடை அகலும் என்பார்கள். வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் அல்லது வெள்ளிக்கிழமை மாலை வேளையில் , வில்வம் மற்றும் வாசனை மலர்களை சமர்ப்பித்து பைரவருக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வறுமைகள் நீங்கும். செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் சகலவிதமான தோஷங்களும் விலகும். மகாபைரவரை திரிபுர பைரவராகவும் வழிபடும் வழக்கம் உண்டு. கரைசேர முடியாத பெருந்துன்பங்களையும் நீக்கி அருள்புரிவாராம் திரிபுர பைரவர். கோயில்களில் நடைபெறும் பிரமோற்ஸவத்துக்கு முன்பாகவும், விழா முடிந்த பின்னரும் பைரவரை வழிபட வேண்டும் என்கின்றன ஆகம நூல்கள். முன்பெல்லாம், சிவாலயங்களில் இரவில் பைரவரை பூஜித்து வழிபட்டு, ஆலயக் கதவுகளை மூடி சாவியை அவரது சன்னதியில் சமர்ப்பிப்பது வழக்கம். இப்போது, கைமணியையும் கலசத்தையும் அவர்முன் வைத்துச் செல்கின்றனர்.

அஷ்ட பைரவ தரிசனம்!

பைரவரை முழுமுதலாகக் கொண்ட சமயம் பைரவம். காபாலிகர்களும் பாசுபதர்களும் கூட பைரவரை சிறப்பாக வழிபடுகின்றனர். பைரவரை சூரிய சமயத்தவர் (கௌமாரம்) மார்த்தாண்ட பைரவராகவும், முருகன் ஆலயத்தில் குமார பைரவராகவும், விநாயகர் கோயிலில் பிரமோத பைரவராகவும் வழிபடுவர். சிவனாரின் வீரச்செயல்கள் எட்டாகும். அதேபோல், அவரது வீரவெளிப்பாடாக விளங்கும் பைரவரும்... அஜிதாங்கன், ருரு, சண்டன், உன்மத்தன், கபாலன், பீஷ்ணன், க்ரோதன் மற்றும் சம்ஹார பைரவர் என எட்டு திருவடிவங்களுடன் அருள்கிறார். இவர்கள் எண்மருக்கும் தேவியராகத் திகழும்... பிராம்மஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகியோர் அஷ்டமாதர்களாகப் போற்றப்படுகின்றனர்.

புண்ணியமிகு காசியில் அனுமன் காட்டில் ருரு பைரவரும், துர்காமந்திரில் சண்ட பைரவரும், விருத்தகாளேசுவரர் ஆலயத்தில் அமிர்த குண்டத்தின் முன்புறம் அஜிதாங்க பைரவரும், லட் பைரவர் கோயிலில் கபால பைரவரும், காமாச்சா எனும் இடத்தில் வடுக பைரவர் எனும் பெயரில் குரோதன பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும், திரிலோசன கஞ்ச் (பாட்டன் தர்வாஜாவுக்கு அருகில்) சம்ஹார பைரவரும், காசிபுரா எனும் இடத்தில் பீஷண பைரவரும் அருள்பாலிக்கின்றனர். சீர்காழி, பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் (தெற்கு) வெளிப்பிரகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் சுதந்திரர், சுயேச்சர், லோகர், காலர், உக்ரர், பிரச்யர், நிர்மாணர், பீஷ்ணர் ஆகிய அஷ்ட பைரவர்களை தரிசிக்கலாம். குற்றாலம் சித்திர சபையில் அஷ்டபைரவரின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. நகரத்தார் சீமையிலுள்ள திருப்பத்தூர், பிள்ளையார்பட்டியை அடுத்துள்ள வைரவன்பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம் வைரவன்பட்டி, காரையூர், நெடுமரம், இலுப்பைகுடி என்ற எட்டும் அஷ்ட பைரவ தலங்களாகப் போற்றப்படுகின்றன.

சொர்ணாகர்ஷண பைரவர்

ஸ்ரீதத்துவநிதி எனும் நூல் சொர்ணாகர்ஷண பைரவரைப் பற்றி விவரிக்கிறது. ஸ்ரீஸ்வர்ண பைரவியை தன் மடிமீது அமர்த்தியவாறு காட்சி தரும். இந்த மூர்த்தியை மனமுருகி வழிபட, பொன் பொருள் சேரும். ஐஸ்வரியம் பெருகும் என்பர். சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஒரு பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். திகம்பரராக டமருகம், சூலம், பாசம் மற்றும் கபாலம் ஏந்தியவராக நின்ற கோலத்தில் அருள்கிறார். அருகில், நாய் வாகனமும் உள்ளது. முற்காலத்தில் தில்லை கோயிலில் சேவை செய்யும் அந்தணர்கள், பூஜை முடிந்ததும் செம்பினால் ஆன தாமரையை பைரவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்வார்களாம். மறுநாள், சுவாமியைப் பணிந்து அந்த மலரை எடுத்துக் கொள்வர். அது, அவர்களுடைய பணிகளுக்கேற்ப, பொன்னாக மாறியிருக்கும் என்றொரு தகவல் உண்டு. இன்றும் தன்னை வணங்கும் அன்பர்களின் மனப்பூர்வமான கோரிக்கைகளை ஏற்று, அருள் வழங்கி வருகிறார் பைரவமூர்த்தி.

லவகுசா பகுதி-6




சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. திடீரென எழுவாள். தன் இரு கைகளாலும் வயிற்றில் ஓங்கி ஓங்கி அடிப்பாள். ஐயோ! இதென்ன கொடுமை என்றபடியே மயங்கிச் சாய்வாள். ஒரு கட்டத்தில், அவள் அசைவற்றுக் கிடந்தாள். இந்த துயரத்தை விண்ணுலகில் இருந்து கண்ட தேவர்கள், அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டி கண் கலங்கினார்கள். அண்ணியார் இப்படி துவண்டு விழுந்தது கண்டு, லட்சுமணன் அலறினான். அவனும் கீழே புரண்டு புலம்பினான். சிறிதுநேரத்தில் சீதாதேவி கண் விழித்தாள். அம்மா, அப்பா, என் உயிர் போன்ற சிநேகிதிகளே! கேட்டீர்களா கதையை! தனக்கு தானே நிகர் என்ற பெருமையுடைய தசரத சக்கரவர்த்தியின் குமாரர் ராமபிரான், எனக்கு செய்த இந்தக் கொடுமையை நீங்கள் கேள்விப்பட்டால் துவண்டு போவீர்களே! என்ன செய்வேன்! ராமனின் ஆட்சி என்றாலே நல்லாட்சி என்று தான் பொருள். அந்த நல்லாட்சி நடத்துபவரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் இந்த வனவாசத் தண்டனை? எதற்காக எனக்கு இந்தத் துன்பங்கள் வந்தன? என் மாமியார்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால், அவர்கள் கணமும் உயிர் வாழ மாட்டார்களே! என வருந்தி அழுதாள். மாமியார்- மருமகள் உறவுக்கு உதாரணம் நம் சீதாதேவி தான். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இல்லை. நம்மூர் பெண்கள் ஒரு மாமியாரை வைத்துக் கொண்டே, சமாளிக்க கஷ்டப்படுவார்கள். ஆனால், நம் சீதாதேவி மூன்று மாமியார்களை சமாளித்தவள். மூவரையும், அனுசரித்து நற்பெயர் பெற்றவள். மாமியார் இல்லாவிட்டால் மருமகள் சந்தோஷப்படுவாள். ஆனால், மருமகள் இல்லாவிட்டால் மாமியார்கள் உயிர் துறந்து விடுவார் என்றால், அது நம் சீதாதேவி இல்லத்தில் மட்டுமே நடக்கிற ஒரு விஷயம். இந்த நிகழ்வின் மூலம், மாமியார்- மருமகள்கள் வீட்டில் சண்டை போடாமல் ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ வேண்டுமென்பதை பெண்களுக்கு சீதாதேவி உணர்த்துகிறாள். இப்படி தவித்த அண்ணியாருக்கு லட்சுமணன் ஆறுதல் சொன்னான்.

தாயே! நீங்கள் முற்பிறவியில் செய்த நல்வினையால் என் சகோதரனை கணவனாக அடைந்தீர்கள். இப்பிறப்பில் என்ன தீவினை செய்தீர்களோ அவரைப் பிரிந்து விட்டீர்கள். நல்வினை, தீவினை இரண்டுமே ஏதோ ஒரு பலனைத் தருகிறது. நல்வினையால் நல்லதும், தீவினையால் தீயதும் என்று நடக்காமல் இருக்கிறதோ, அந்நாளே மனித வாழ்வில் பொன்னாள். அப்படி ஏதும் நடக்காத ஒரு நிலையை மனிதகுலம் அடைய வேண்டுமானால், அதற்கு தவமே கண்கண்ட மருந்து. ஆம்...நீங்கள் இறை வழிபாட்டில் ஆழ்ந்து விடுங்கள். தவக்கோலம் பூணுங்கள். பெருந்தவ முனிவர்கள் பலர் இந்தக் காட்டில் வாழ்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் சேவை செய்ய வேண்டும். உன் கணவனை மனதில் நினைத்து உயர்ந்த தவமிருக்க வேண்டும், என்றான். சீதை அவனிடம், லட்சுமணா! ஒரு பெண்ணின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் பேசாதே. இதற்கு முன் உன் அண்ணனுடன் நான் காட்டில் இருந்த போது, எத்தனையோ முனிவர்களைத் தரிசித்து ஆசி பெற்றோம். இப்போது, அவர்களை நான் தனித்துப் பார்த்தால், ஏனடி உன் கணவன் உன்னைப் பிரிந்தான்? என்று கேட்டால், நான் அவர்களிடம் என்ன பதில் சொல்வேனேடா? சரி போகட்டும். நீ நாடு திரும்பு. உன் அண்ணனிடம், என்னைச் (சீதா) சொல்லிக் குற்றமில்லை, உங்களைச் சொல்லியும் குற்றமில்லை, எல்லாம் என் விதி. அது மட்டுமல்ல! உலகம் ஒரு பழியைச் சொன்னது என்பதற்காக, அதையும் ஏற்று என்னைப் பிரிந்தாரே உன் அண்ணன்! இப்படி பழிக்கு அஞ்சுகிற உன் அண்ணனுடன் வாழ்வதை விட அவரை பிரிந்திருப்பதே மேல் என நான் சொன்னதாகச் சொல் என்று கோபத்தோடு சொன்னாள். ஒரு பெண் பொறுமையாக இருக்கலாம். பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அவளது கற்பின் மீது களங்கம் சுமத்தப்படுகிறது என்றால் அவள் கொதித்து எழுந்து விட வேண்டும் என்பதற்கு சான்றாக, பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் புத்திரி சீதாதேவி இவ்விடத்தில் பெண்ணினத்துக்கு தகுந்த புத்திமதி சொல்கிறாள்.

அத்துடன் அவள் நிறுத்தவில்லை. லட்சுமணன் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு வார்த்தையை உதிர்த்தாள். ராமாயணத்தின் உத்தர காண்டத்திலேயே உணர்ச்சி மிக்க கட்டம் இதுதான். ஏ லட்சுமணா! நான் எப்படிப்பட்டவள் என உனக்குத் தெரியும். நான் கர்ப்பமாகி நான்கு மாதங்கள் தான் ஆகின்றன. எங்கே என்னைப் பார். கர்ப்பவதியான என் மேனி வருந்தாத வகையில் அந்தப் பார்வை இருக்கட்டும், என்றாள் ஆவேசமாக. அண்ணியாரின் திருவடியை மட்டுமே லட்சுமணன் அறிவான். அவள் முகத்தை அவன் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு மரியாதை. உலகில் எந்த ஒரு அண்ணிக்கும், எந்த ஒரு கொழுந்தனும் கொடுக்காத ஒரு பாக்கியம். அப்படிப்பட்ட சௌபாக்கியவதியான சீதாதேவி, தன் கொழுந்தனிடம் இப்படி கேட்கிறாள். ஏன் கேட்டாள் தெரியுமா? இந்த களங்கற்ற முகமா இப்படி ஒரு தவறைச் செய்திருக்கும் என்று அவனாவது தெரிந்து கொள்ளட்டும். அதற்காக வருந்தட்டும் என்று தான். இதைக் கேட்டானோ இல்லையோ, லட்சுமணன் கண்ணீர் வடித்தான். தரையில் விழுந்து தலையில் அடித்துக் கொண்டு புலம்பினான். தாயே! இப்படி ஒரு கொடிய சொல்லை உங்கள் வாயால் கேட்க, நான் என்ன பாவம் செய்தேனோ? இதுவரை இப்படிப்பட்ட வார்த்தைகள் உங்கள் வாயில் இருந்து வந்ததும் இல்லையே! இன்று ஏன் வந்தன? என் சகோதரன் உங்கள் கைத்தலம் பற்றிய நாளில் இருந்து இன்று வரை உன் முகம் பார்த்தறியாதவன் நான். உங்கள் திருவடிகள் மட்டுமே எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட எனக்கு உங்கள் திருமேனியைப் பார்க்கும் துணிச்சல் எப்படி வரும்? யோசித்து தான் பேசினீர்களா? என்றான் கண்ணீர் ஆறாய்ப் பெருக. பின்பு சிரமப்பட்டு எழுந்தான். தலை குனிந்தபடியே அண்ணியார் அருகில் சென்றான். அண்ணியை அவன் பார்த்தானா?

லவகுசா பகுதி-5




அந்த தேரில் அமைச்சர் சுமந்திரரும் சென்றார். தேர், கங்கைக்கரையை அடைந்தது. தேர் அங்கு சென்றதோ இல்லையோ, குனிந்த தலை நிமிராத லட்சுமணனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சீதை பதைபதைத்து போனாள். லட்சுமணா! எதற்காக வருத்தப்படுகிறாய்? உன் கண்கள் கண்ணீர் சிந்துகிறது என்றால், ஏதோ கெடுதலின் அறிகுறியாகத்தான் இருக்கும். மறைக்காமல் சொல், என்றாள். என்ன சொல்வான் லட்சுமணன். அண்ணி, உங்களை அண்ணன் காட்டில் தனியாக விட்டு வரச்சொன்னான் என்பதை எப்படி அவளிடம் சொல்வான்! அழுகை முட்டியதில், வார்த்தைகள் வர மறுத்தன.லட்சுமணா! தூய்மையின் வடிவமானவனே! அழகான இந்தக் கங்கை நதியைக் கண்டவர்கள் கையெடுத்து வணங்குவார்கள். தங்கள் பாவம் தீர மனம் மகிழ்ந்து நீராடுவார்கள். அப்படியிருக்க, நீயோ, இந்த நதியைப் பார்த்து அழுகிறாயே! மேலும், நீ கவலைப்படும் அளவுக்கு, உனக்கு துன்பம் செய்யக்கூடியவர்களும் இந்த உலகத்தில் பிறக்கவில்லையே, என்றாள்.அண்ணியாரே! வேறொன்றுமில்லை. நான் பிறந்த நாளில் இருந்து நேற்று வரை என் அண்ணனைப் பிரிந்ததே இல்லை. இப்போது தான் முதன்முறையாகப் பிரிந்து தங்களுடன் வருகிறேன். அண்ணனை நினைத்துக் கொண்டேன். அதனால் அழுகை வந்து விட்டது, என்றான். லட்சுமணா! இதற்கா சிறுபிள்ளை போல் அழுவது! இவ்வுலகில் அறம் தழைக்க பாடுபடுபவர்கள் முனிவர்கள். அவர்களின் திருவடிகளைப் பணிந்தால் புண்ணியம் கிடைக்கும். அந்தப் புண்ணியம் தீவினைகளை அறுத்துவிடும். மேலும், நாம் முன்பு இங்கு இந்த கானகத்தில் தங்கியிருந்த போது, எனக்கு உதவிசெய்த முனிபத்தினியர், அவர்களின் மகள்களுக்கு புடவை, ஆபரணம் முதலானவற்றைக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. அவற்றையெல்லாம் இந்த தேரில் கொண்டு வருவதை நீயும் அறிவாய். அவற்றைக் கொடுத்துவிட்டு, முனிவர்ளை வணங்கிவிட்டு, ஒரே நாளில் திரும்பி விடப் போகிறோம். இதற்காக கலங்காதே, என்றாள். உடனே தேரில் இருந்து இறங்கிய லட்சுமணன், அண்ணியை வலம் வந்து வணங்கி, தேவி! ஏழுலகையும் ஆட்சி செய்ய உரிமையுடையவளே! நான் சொல்வதைக் கேட்பீர்களா? என்றதும், அவனது வித்தியாசமான நடவடிக்கையைக் கண்ட சீதை, எதுவானாலும் தயங்காமல் சொல் லட்சுமணா, என்றாள்.

லட்சுமணனின் நாக்கு வறண்டது. உடல் சோர்ந்தது. முகம் களையிழந்தது. மனம் நடுங்கியது. தட்டுத்தடுமாறி வார்த்தைகளை உதிர்த்தான். உத்தமியே! உலகத்தின் தாயே! தூயவராகிய ஜனகரின் வேள்வித்தீயில் பிறந்தவளே! என் அண்ணன் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன். இந்த உலகம் இல்லாத ஒன்றை இருக்கிறது என்று சொன்னால், எல்லோருமே அதை நம்பி, ஆமாம்...இருக்கிறது என்றே சொல்வார்கள். இருக்கும் ஒன்றை இல்லை என்று உலகம் சொன்னால், நிச்சயம் அது இல்லை என்றாகி விடுகிறது. உலகம் இருக்கிறது என்று சொல்லும் விஷயத்தை, யாரோ ஒருவன் இல்லை என்று சொன்னால், அவனை பேயைப் பார்ப்பது போல பார்ப்பார்கள். அண்ணியாரே! தங்கள் விஷயத்திலும் அப்படியே நடந்து விட்டது. தங்களை ராவணன் கவர்ந்து சென்றான். அண்ணன் உங்களை மீட்டார். நீங்கள் நெருப்பில் குதித்து உங்களைத் தூயவர் என்று நிரூபித்தும் விட்டீர்கள். ஆனால், இதையெல்லாம் அயோத்தியில் உள்ளவர்கள் பார்க்கவில்லையே! அப்படி பார்க்காத யாரோ சிலர், தங்களைப் பற்றி குற்றம் சொல்லி பேசியிருக்கிறார்கள். மோகத்தின் காரணமாக, மாற்றானுடன் தங்கியிருந்தவளுடன், இந்த ராமன் வாழ்வதை விட செத்து விடலாமே என்பதே பேச்சின் சாரம். இதை ஒற்றர்கள் மூலம் அறிந்த அண்ணன் கொதித்து விட்டார். மக்களுக்கு விருப்பமில்லாத ஒருத்தியுடன் இணைந்து அரசாள முடியாது. எனவே, வால்மீகி முனிவரின் ஆசிரமம் அருகில் உங்களை நிரந்தரமாக விட்டு வரச்சொன்னார், என்றான். இதைக் கேட்டாளே இல்லையோ, சீதாதேவியின் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலை நுழைத்தது போல் இருந்தது. தேரில் இருந்து சரிந்து கீழே விழுந்து விட்டாள். வாய்களில் இருந்து வார்த்தைகள் வர மறுத்தது. அவள் தரையில் இருந்து எழ முயற்சித்தாள். நிற்க முடியவில்லை. சரிந்து சாய்ந்தாள்.

இந்த உலகத்திலேயே சீதாதேவிக்கு ஏற்பட்டது போன்ற துன்பம் யாருக்கும் ஏற்பட்டது இல்லை. யாராவது ஒரு பெண், என்னைப் போல் பாவம் செய்த ஒரு ஜீவனுண்டா? என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. ஏனெனில், சீதா திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்தாள். சில காலம் தான் மாமியார் வீட்டில் தங்கியிருந்தாள். உடனே காட்டுக்கு புறப்பட்டாயிற்று. அங்கும் சோதனை. கொடியவன் ராவணனிடம் சிக்கிக் கொண்டாள். ராவணனோ, அவளை இச்சைக்கு அழைத்தான். ஒருவனுக்கு துணைவியாக இருக்கும் நிலையில், இன்னொருவன் கூப்பிடுகிறான் என்றால், ஒரு பெண்ணின் மனநிலையைச் சொல்லவும் வேண்டுமோ? சதாசர்வகாலமும், ராமனின் திருநாமம் விழ வேண்டிய செவிகளில், அரக்கியரோ, ராவணனுடன் போய் வாழ் என்று வற்புறுத்தும் இழிவான சொற்களைப் பேசினர். அதைத் தாங்கிக்கொண்டாள். காட்டில் இருந்து மீண்டாள். கட்டிய புருஷனே அவளைத் தீக்குளிக்கச் சொன்னான். சொன்னது அவனளவில் நியாயம் என்றாலும், எந்தக் குற்றமும் செய்யாத சீதா, கணவன் தன் மீது சந்தேகப்பட்டானே என்று துடித்துப் போனாள். தீ கூட அவளைச் சுடவில்லை. ஆனால், வார்த்தைகள் சுட்டன. வீட்டுக்கு வந்தாள். பட்டாபிஷேகம் முடிந்து சில காலம் கணவனுடன் சுகவாழ்வு. இப்போது அவள் கர்ப்பிணி. அயோத்தியின் வாரிசுகளை சுமந்து கொண்டிருக்கும் அவளை, உலகம் சந்தேகிக்கிறதே என்பதற்காக நிரந்தரமாக ஒதுக்கி வைக்கிறான் ராமன். என்ன கொடுமையப்பா இது! அடியே சீதா! உன்னை நினைத்தால், எங்கள் கண்கள் அருவியைத் தானேடி கொட்டுகிறது! என்று நாமும் அவளோடு சேர்ந்து புலம்புவதைத் தவிர வேறென்ன சொல்வது!

லவகுசா பகுதி-4




உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் மீதும், என்மீதும் சொல்லப்படும் பழிச்சொல் என் இதயத்தை வாட்டுகிறது, என்ற ராமன் அரசவையில் ஒற்றர்கள் தன்னிடம் சொன்ன தகவலைக் கூறினார். சகோதரர்கள் இதுகேட்டு மிக துன்பமடைந்தனர். கைகேயி, ராமபிரானை நாட்டை விட்டு அனுப்பியதை விட, அவர்களுக்கு இந்த செய்தி மிகக்கொடுமையாக இருந்தது. அவர்களால், ராமனிடம் ஏதும் பேச முடியவில்லை. அண்ணன் சொல் கேட்டு நடக்கும் அவர்கள், இதனால் தங்கள் அண்ணியாருக்கு என்னாகப் போகிறதோ என்றே மனதுக்குள் கலங்கி நின்றனர். ராமன் தொடர்ந்தார். லட்சுமணா! உலகம் மூன்றையும் கலக்கு என்று சொன்னாலும் கூட கணப்பொழுதில் அதை செய்து முடித்திடும் மனோபலம் பெற்றவன் நீ. உன் அண்ணியை தவமுனிவர்கள் வாசம் செய்யும் காட்டில் சென்று விட்டு வா, என்றார். லட்சுமணன் வாய் பொத்தி நின்றான். ஏதும் பேசினால் பயனேதும் இருக்காது என்பதை அவன் அறிவான். விஷயம் அமைச்சர் சுமந்திரருக்கு தெரிய வந்தது. அவர் தசரதரின் அரசாங்கத்தில் இருந்தே முதல் அமைச்சராக இருப்பவர். கைகேயி உள்ளிட்ட பட்டத்து ராணிகளையே எதிர்த்து வாதிடுபவர். திறமைசாலி. அவருக்கும் தெரியும். ராமன் ஒரு வார்த்தையை சொன்னால் சொன்னது தான் என்பது. மனஉறுதியில் ராமன் கைகேயிக்கு சமமானவர். ஆம்....ராமனைப் பிரிந்தால் தசரதரின் உயிர்போகும் என்று தெரிந்திருந்தும் பிடிவாதம் பிடித்தவள் அல்லவா! எல்லோரும் யோசித்துக் கொண்டு நிற்பதை உணர்ந்த ராமன், இதில் யோசிக்க ஏதுமில்லை. நான், சீதைக்கு ஒன்றும் கேடு செய்யவில்லை. அவள் ஏற்கனவே என்னிடம் காட்டுக்குச் சென்று ரிஷிகளைத் தரிசிக்க வேண்டும் என்றாள்.

நானும் சரியென ஒப்புக்கொண்டேன். இப்போது, அவள் சொன்னதைத்தான் செய்கிறேன். எனவே லட்சுமணா! உம்...புறப்படு, உன் அண்ணியுடன். வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் அவளை விட்டுவிட்டு நீ வந்துவிட வேண்டும், என்றார் அதட்டலுடன். பரந்து விரிந்த முடியையுடைய வெள்ளைப்புரவிகள் பூட்டிய தேர் அரண்மனை வாசலில் வந்து நின்றது. மாமியார் கவுசல்யா, மருமகளை வழியனுப்ப வந்தாள். மகளே! பத்திரமாக சென்று வா. நாளை நீ திரும்பி விட வேண்டும். வயிற்றில் அயோத்தியின் வாரிசை சுமக்கும் நீ மிகுந்த கவனத்துடன் காட்டிற்குள் செல். அது சரி...உன் மைத்துனன் அருகில் இருக்கும்போது, உனக்கேதும் ஆபத்து ஏற்படாது என்பதை அறிவேன், என்று புன்னகையுடன் சொன்னாள், நடந்து கொண்டிருக்கும் விபரீதத்தை அறியாமலே! சீதையை அழைக்க அவள் தங்கியிருந்த மாளிகைக்குச் சென்றான் லட்சுமணன். ஒளிவீசும் ரத்தினமாலை பளபளக்க காத்திருந்த அவள், வா லட்சுமணா! பயணத்துக்கு தயார் ஆகிவிட்டேன். புறப்படலாமா? என்றாள். அவளது கமலத் திருப்பாதங்களில் விழுந்து வணங்கிய லட்சுமணன், புறப்படலாம் அன்னையே என்றார். அவள் தேரில் ஏறி அமர்ந்தாள். அப்போது, சீதையின் வலக்கண் துடித்தது. பெண்களுக்கு, வலதுகண் துடிப்பது கெட்ட சகுனத்திற்கு அறிகுறி. அதேநேரம் வயிற்றில் ஏதோ எரிச்சல் ஏற்பட்டது. உடலில் ஏதோ ஒரு நடுக்கம் தெரிந்தது. ஊருக்குப் புறப்படும் வேளையில், பூஜை குறுக்கே போய்விட்டாலே, நம் உள்ளம் நடுங்கி விடும். சீதாதேவிக்கு இத்தனை கெட்ட அறிகுறிகளும் தெரிந்ததால், அவள் ரொம்பவே கலங்கி, லட்சுமணா!கிளம்பும் போதே, கெட்ட சகுனங்கள் தோன்றுகின்றன. எனக்கு ஏற்பட்ட இந்த தீய சகுனங்கள், என்னென்ன விளைவைத் தரப்போகிறதோ தெரியவில்லை. அதற்காக என்ன செய்ய முடியும்? விதி மிகவும் வலிமையான ஒரு வஸ்து.

அது என்ன நாடகம் நடத்தப்போகிறது என்பதை யாரும் அறியமாட்டார்கள். அதை அனுபவித்து தானே ஆக வேண்டும். இந்த விதி தன் கொடுமையான கரங்களை நீட்டி, என்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், என் கணவருக்கோ, என் கொழுந்தர்களான உங்களுக்கோ, உங்கள் மனைவியருக்கோ, எனது மாமியார்களுக்கோ, என் தாய் சுனைநாவுக்கோ, தந்தை ஜனகருக்கோ, பிற உறவினர்களுக்கோ, இதற்கெல்லாம் மேலாக, என் மேல் அன்பைப்பொழியும் அயோத்தி வாழ் மக்களுக்கோ துன்பம் வந்து விடக்கூடாது, என்றவள், தெய்வமே! இந்த சகுனங்களால் அவர்களுக்கு எந்த தீங்கும் வந்து விடக்கூடாது, என்று கடவுளையும் வணங்கிக் கொண்டாள். எவ்வளவு உயர்ந்த பண்பு பாருங்கள்! ராமாயணத்தை படி படி என்கிறார்களே! அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்பவர்கள் சீதாதேவியின் இந்த உயரிய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாமியார், கொழுந்தனார்களுக்கு ஆதரவாக இன்றைக்கு உலகில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? எங்கும் சண்டையும் சச்சரவும் தானே நடக்கிறது. சீதாதேவி பட்டபாடுகளைப் படித்தால், பெண்களுக்கு பொறுமை குணம் வளரும். சிறந்த பண்புகளெல்லாம் வந்து ஒட்டிக்கொள்ளும். லட்சுமணன் அவளது வார்த்தை கேட்டு திகைப்பும், மகிழ்ச்சியும் ஒருசேர தாக்க, இப்படி ஒரு உத்தமியை தன் அண்ணியாகப் பெற்றதற்காக பெருமை பொங்க அவளது திருவடி நோக்கி மீண்டும் ஒருமுறை வணங்கி, அன்னையே! நீங்கள் சொன்னது போல, நம் சுற்றத்தாருக்கும், நாட்டு மக்களுக்கும் எந்த ஆபத்தும் வராது. அவர்கள் சுகமாக வாழ்வார்கள், என்று சொல்லி விட்டு, குதிரைகளை விரட்டினான். அந்த பெரிய தேர் காட்டை நோக்கிச் சென்றது.

லவகுசா பகுதி-3




சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் உங்கள் வாயால் தொடர்ந்து கேட்கப்போகிறோம் என்றுதானே பொருள். இதில் தாங்கள் வருத்தப்படுவது பற்றி தான் எங்களுக்கு புரியவில்லை, என்றனர். சீடர்களிடம் வால்மீகி பதிலேதும் சொல்லவில்லை. அவரது ஞானதிருஷ்டியில், காட்டிற்கு வரப்போகும் சீதைக்கு ஆகப்போகும் நிலை தெரிந்தது. உம்...விதி வழி வாழ்வு. அவள் பூமாதேவியின் புத்திரி ஆயினும், அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதானே ஆக வேண்டும். பொதுவாகவே, பொறுமைசாலிகளுக்கு தான் பூமியில் அதிக துன்பமே விளைகிறது என தனக்குள் சொல்லிக்கொண்டார். இந்த பூலோகத்தில் பிறந்தவர்களில் பொறுமைசாலிகளுக்கு துன்பம் அதிகமாக வருகிறது என்று வால்மீகி நினைத்தது இன்றுவரை கண்கூடாகத்தான் தெரிகிறது. இவ்வளவு பொறுமையாய் இருந்தும், நமக்கு இவ்வளவு சோதனையா என சில பொறுமைசாலிகள் சலித்துக் கொள்ளவும் கூடும். ஆனால், காரணமில்லாமல் காரியமில்லை. இந்த லோகத்தில் நம் முன்வினைப் பயனையெல்லாம் அனுபவித்து, மேலும் மேலும் பொறுமை காத்தால், அவ்வுலகில் சுகமான வாழ்வு வாழலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீதையிடம் ராமன், சீதா! நீ நாளையே புறப்படலாம். உரிய ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன், எனச்சொல்லி விட்டு, அரசவைக்குச் சென்றார். அவருக்கு வீட்டை விட நாட்டைப் பற்றிய கவலை அதிகம். மக்களுக்கு ஒரு சிறு கஷ்டம் கூட வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதற்காக, பல ஒற்றர்களை நியமித்திருந்தார். மக்கள் என்ன பேசுகிறார்கள். அவர்களது தேவையென்ன, யாராவது வெறுப்பு கலந்த குரலில் பேசுகிறார்களா...இவை ஒற்றர்களிடம் அவரது அன்றாடக்கேள்விகள். ஒற்றர்கள் இதற்குரிய பதிலைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். விஜயன், பத்திரன், தந்தவக்கிரன், சுமகாதன், சுராஞ்சி, காளியன் ஆகியோர் ராமபிரானின் ஒற்றர்கள். நகைச்சுவை ததும்ப பேசுவதிலும் இவர்கள் கில்லாடிகள். இவர்கள் சொன்ன நகைச்சுவை கதைகளைக் கேட்டு ராமன் கலகலவென சிரித்துக் கொண்டிருந்தார்.

நகைச்சுவை வாழ்க்கைக்கு ஒரு நல்ல மருந்து. சிரிக்க சிரிக்க பேசத்தெரியவில்லையே என வருத்தப்படுபவர்கள் அதிகம். ஆனால், சிரிப்பதற்கு பழக்கம் தேவையில்லை. சிரிக்க சிரிக்க பேசுபவர்கள் அதிகம் இருந்தாலே போதும்! சிரிப்பு மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குகிறது. மகிழ்ச்சியான மனநிலை சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. நகைச்சுவை புத்தகங்களைப் படிப்பது, சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகியவை நல்ல மருந்து. அதே நேரம் கேலியும், கேளிக்கையுமே வாழ்க்கையாகி விடக்கூடாது என்பதிலும் ராமன் கவனமாக இருந்தார். ஒற்றர்களே! இந்த பரிகாசக்கதைகள் ஒருபுறம் கிடக்கட்டும். நாட்டு மக்கள் என்ன சொல்கின்றனர்? அதை முதலில் சொல்லுங்கள். நாடாள்பவனுக்கு முதலில் மக்கள். அதன்பிறகு தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும். சொல்லுங்கள், என்று துரிதப்படுத்தினார். அவர்கள் ராமனிடம், அண்ணலே! தங்கள் ஆட்சியில் என்ன குறை இருக்கிறது? கடலின் நடுவில் இருக்கும் இலங்கை மாநகரை தாங்கள் வெற்றி கொண்டதைப் பற்றி மக்கள் வியப்புடன் பேசுகிறார்கள். அசுரர்களை அழித்ததைப் பற்றி வீரம்பொங்க உரையாடுகிறார்கள். தேவர்களின் தலைவனான இந்திரனின் கொடும் பகைவனான இந்திரஜித்தைக் கொன்றது பற்றியும், அதிசயத்தின் வடிவமான பத்து தலைகளைக் கொண்ட ராவணனை அழித்தது பற்றி பேசுகிறார்கள். எங்கள் ராமனை வெல்வார் யார் என்று மார்தட்டி பேசுகிறார்கள், என்றனர். ராமன் அவர்கள் பேசுவதை கையசைத்து நிறுத்தினார். ஒற்றர்களே! நீங்கள் நிறைகளை மட்டுமே சொல்கிறீர்கள். தனது ஆட்சியின் நிறைகளைக் கேட்டு சந்தோஷம் கொள்வது மட்டும் அரசனின் பணியல்ல. அதன் குறைகளைக் கேட்டு, அதனை நீக்கி, நன்மை செய்பவனே அரசன். எனவே, நீங்கள் கேட்ட குறைகளையும், மனம் கூசாமல், அதைரியம் கொள்ளாமல் சொல்லுங்கள், என்று வற்புறுத்தினார். அந்நிலையில் அவர்கள் தாங்கள் கேட்ட ஒரு இழிசொல்லை ராமனிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஸ்ரீராமா! ஆருயிர் மன்னவரே! நாங்கள் கேட்ட ஒரு விஷயத்தைச் சொல்கிறோம். அதுகேட்டு தாங்கள் வருத்தம் கொள்ள வேண்டாம். புத்தியற்றவர்கள் பேசும் பேச்சு அது, என்றதும், ராமன் உஷாராகி விட்டார்.

உம்...அதை விரைந்து சொல்லுங்கள், என்றார். ராமா! எங்கள் அன்னை சீதாதேவியார், இலங்கையில் ராவணனின் இடத்தில் ஒரு வருடகாலம் இருந்தார். இப்படி தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவளை, அவன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாமே! இது தெரிந்தும், நாடாளும் மன்னன் ஒருவன் அவளுடன் வாழலாமா? குடிமக்களுக்கு ஒழுக்கத்தை கற்பித்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய மன்னன் ஒருவனே இப்படி இருந்தால், அது எவ்வகையில் நியாயம்? என கேட்கிறார்கள், என்றனர். இத்தனை நேரமும் பரிகாசக்கதைகளைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த ராமனின் கரிய முகம் சிவந்து விட்டது. அது கோபத்தின் வெளிப்பாடா, வெட்கத்தின் பிரதிபலிப்பா...ஒற்றர்கள் குழம்பினர். மனதில் வேல்போன்று தைத்த இந்த கடும் சொற்களைத் தாங்க முடியாத ராமபிரான், சைகையாலேயே ஒற்றர்களை அனுப்பிவிட்டு, தம்பியர்கள் இருக்குமிடம் சென்றார். தம்பியரே! என் உயிர் நீங்கள். என் பலமும் நீங்கள் தான். நண்பர்களும் நீங்களே! நீதி, தவம், சகோதரர்கள், அரசாங்கம், இன்பம் எல்லாமே நீங்கள்! இப்படி எல்லாமே எனக்கு நீங்கள் தான் என்றாகி விட்ட பிறகு உங்களிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? ஏனெனில், எனக்கு புகழ் கிடைத்தால் அதுவே உங்கள் புகழ். என் மீது பழிவந்தால் அது உங்களுக்கும் பழிதானே. எனவே, நான் கேள்விப்பட்ட ஒன்றை வெளிப்படையாகச் சொல்கிறேன், கேளுங்கள், என்றார். அண்ணனின் முகபாவம், பீடிகை ஆகியவை அவர் ஏதோ சொல்லக்கூடாததைச் சொல்லப் போகிறார் என்பதை தம்பிகளுக்கு உணர்த்தி விட்டது. என்ன அண்ணா? என்றனர் அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன். உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் மீதும், என்மீதும் சொல்லப்படும் பழிச்சொல் என் இதயத்தை வாட்டுகிறது, என்றவர் நடந்ததைச் சொன்னார். சகோதரர்கள் இதுகேட்டு மிக துன்பமடைந்தனர். கைகேயி, ராமபிரானை நாட்டை விட்டு அனுப்பியதை விட, அவர்களுக்கு இந்த தகவல் மிகக்கொடுமையாக இருந்தது.

லவகுசா பகுதி-2




அன்று சீதாதேவி, ஸ்ரீராமனின் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கணவனின் அழகை ரசிப்பதில் பெண்களுக்கு பேரானந்தம் உண்டு. இத்தனைக்கும் ராமன் சியாமளவண்ணன். கரிய நிறமென்று சொல்வதற்கில்லை. கருமையிலும் ஒரு நீலம். இந்தக்காலத்தில் என்றால், பெண்கள் மாப்பிள்ளை கருப்பா என்று புள்ளி வைப்பார்கள். சீதாதேவி, ராமனுக்காகவே பிறந்தவள். அவளது தந்தை அவளுக்கு மாப்பிள்ளையாக ராமபிரானைக் கொண்டு வந்து நிறுத்திய போது, அவள் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நமது கம்பர் தான், நம் தமிழ்க்காதலின் சுவை கருதி, அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்று இருவருமே திருமணத்துக்கு முன் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டதாக அனுபவித்து எழுதியிருக்கிறார். ஆனால், வால்மீகி அப்படி சொல்லவில்லை. அவன் கால் பாதம் தான் அவளுக்குத் தெரியும். அந்த நீலவண்ணப் பாதங்களில் செந்தூரத்தால் போட்ட கோலம் தெரியும். திருமணமாகி அயோத்திக்கு வந்த பின்னர் தான் அவனது முகம் பார்த்து வெட்கத்தால் சிவந்தாளாம் அந்த சிவப்பழகி. இன்றைக்கும் கூட நமது கிராமங்களில் சிகப்பி என்று பெண்களுக்கு பெயர் வைப்பார்கள். அது வேறு யாருமல்ல. நம் சீதாதேவி தான். பூமாதேவியின் அம்சமான அவள், அத்தனை சிவப்பழகு, பேரழகு படைத்தவள். கொடிகள் அவளது இடையைக் கண்டு வெட்கப்பட்டு, முகம் நாணி, தலை குனிந்து, கொம்புகளுக்குள் வளைந்து வெட்கப்பட்டு கிடக்கும். சிவப்பழகு கொண்ட பெண்கள், கருத்த மாப்பிள்ளைகளை ஒதுக்கக்கூடாது. மனம் வெள்ளையாக இருக்கிறதா என்பதை விசாரித்து தெரிந்து கொண்டால் போதும் என்பது சீதாதேவி பெண்களுக்கு கற்றுத்தரும் பாடம். அவரருகே வந்தவள், ஸ்ரீராமா... என்று ஆரம்பித்து விட்டு நிறுத்தினாள். அவர் அவளது கைகளைப் பற்றி நெஞ்சத்தில் புதைத்து, அவளை தழுவியபடி, என்ன தேவி! சொல், என்றார்.

அன்பரே! என் மனதிலுள்ள ஆசையை நிறைவேற்றுவீர்களா?ராமன் சிரித்தார்.நாடாளும் ராணி நீ. இந்த பட்டத்தரசி சொல்வதைக் கேட்கத்தானே இந்த பட்டத்தரசனும், இந்த தேசமும், உன் மாமியார்களும், மைத்துனர்களும் இருக்கிறோம். மனதிலுள்ளதை தயங்காமல் சொல். அதிலும் நீ கர்ப்ப ஸ்திரீயாக இருக்கிறாய். கர்ப்பவதிகள் மனதில் எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது. தங்கள் விருப்பத்தை கணவனிடம் சொல்ல வேண்டும். கணவன் அதை நிறைவேற்றி வைக்க வேண்டும். சொல் சீதா, என்றார். ஸ்ரீராமா! எனக்கு மீண்டும் மகரிஷிகளை தரிசிக்க வேண்டுமென என் மனம் ஆசைப்படுகிறது. தாங்கள் ராஜ்ய பரிபாலனத்தில் இப்போது தான் கவனம் செலுத்த துவங்கியிருக்கிறீர்கள். எனவே, நான் மட்டும் சென்று வருகிறேன். ஒரே ஒரு நாள் தரிசனம் தான். நான் சென்று வருவதற்குரிய அனுமதியையும், அதற்குரிய ஏற்பாட்டையும் செய்து தாருங்கள், என்றாள். ராமர் கலகலவென சிரித்தார். இவ்வளவுதானா! இதற்கா மனம் சஞ்சலப்படுகிறது என்றாய். மகரிஷிகளை தரிசிப்பது என்பது நல்ல விஷயம் தானே! அதிலும், நீ கர்ப்பவதியாய் இருக்கிறாய். இந்நேரத்தில், உன் வயிற்றில் இருக்கும் நம் செல்வம், மகரிஷிகள் கூறும் மந்திரங்கள், நல்வார்த்தைகளைக் கேட்டால், மிகச்சிறந்தவனாக, தர்மத்தைக் கடைபிடிப்பவனாக பிறப்பானே! இதைச் சொல்லவா இவ்வளவு தயக்கம்! காட்டிற்கு போகிறோமோ என கவலை கொள்ளாதே. உன் மைத்துனன் லட்சுமணன், எதற்கு இருக்கிறான்? கோபக்கார பயல். அவனை உன்னோடு அனுப்பி வைக்கிறேன். அவன் தன்னைப் பெற்ற சுமித்திரையை தாயாக நினைக்கிறானோ இல்லையோ! உன்னை தாயாக நினைக்கிறான், என்றதும் சீதாவின் கண்களில் கண்ணீர் அரும்பியது. ஆம்...சுவாமி! தாங்கள் மாரீச மானைப் பிடிக்கச் சென்றதும், அவனைக் கடும் மொழிகளால் பேசினேன். அவன் கோபிக்கவில்லை. மாறாக, கண்ணீர் வடித்தான். அந்நிலையிலும் அவன் கோடு போட்டு நிற்கச் சொன்னான். அதையும் நான் மதிக்கவில்லை. அயோத்தியில் காட்டிற்கு நாம் கிளம்பிய போது, அவன் நம்மோடு கிளம்பினான். அப்போது, தன் மனைவி ஊர்மிளாவிடம், விடை பெறச்சென்றான்.

அந்த மாதரசி எந்த தடையும் சொல்லவில்லை. ஊர் உலகில் நடக்கிற காரியமா இது? எந்த மனைவியாவது தன் கணவனை, அவனது அண்ணனுக்கும், அண்ணன் மனைவிக்கும் துணையாக காட்டுக்கு 14 வருஷம் அனுப்புவாளா? அவள் அனுப்பி வைத்தாள். அந்த உத்தம பத்தினியை மனைவியாகப் பெற்ற அவன், என்னோடு வருவது சாலவும் தகும். ஆனால்... என்று இழுத்தவளிடம், ராமபிரான், என்ன ஆனால்... என்றார். சுவாமி! ஊர்மிளாவும் இப்போது கர்ப்பவதியாக இருக்கிறாள். அவள் அருகே அவன் இருக்க வேண்டாமா? அவனை ஏற்கனவே 14 ஆண்டுகள் மனைவியை விட்டு பிரித்து விட்டோம். இப்போது, அந்த கர்ப்பஸ்திரீயிடமிருந்தும் பிரிக்க வேண்டுமா? என்ற சீதாவைப் பார்த்து சிரித்தார் ராமன். சீதா! ஊர்மிளா யார்? உன் தங்கை. உன்னைப் போலவே உத்தமி. நீ காட்டிற்கு போகிறாய் எனத்தெரிந்தால், அவள் உடனே தன் கணவனை அனுப்பி வைப்பாள். இதற்கெல்லாம் கலங்காதே. மேலும், நீ என்ன அங்கே நீண்டகாலம் தங்கவா போகிறாய்? ரிஷி தரிசனத்தை முடித்து விட்டு கிளம்பப் போகிறாய். அவனும் உன்னோடு வந்துவிடுவான், என்றார். அயோத்தியில் பட்டாபிஷேகம் முடிந்ததோடு ராமாயணமும் முடிந்தது, ஸ்ரீராமனின் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ந்து வாழப் போகின்றனர். ராமசகோதரர்கள் தங்கள் மனைவியருடன் இல்லறத்தில் திளைத்து, நன்மக்களை உலகுக்கு தரப்போகின்றனர். இனி இவ்வுலகில் எல்லாம் ÷க்ஷமமே என நினைத்திருந்த வால்மீகி மகரிஷி திடீரென நிஷ்டை கலைந்து எழுந்தார். சீடர்கள், அவர் திடுக்கிட்டு எழுந்ததைக் கண்டு ஓடோடி வந்தனர். குருவே! என்னாயிற்று! தாங்கள் இப்படி பதைபதைப்பு காட்டி நாங்கள் பார்த்ததே இல்லையே! தங்கள் கண்களிலிருந்து சரம் சரமாய் கண்ணீர் கொட்டுகிறதே! ராமன் ஆளும் பூமியில் அபவாதம் ஏதும் நிகழ வாய்ப்பில்லையே சுவாமி! பின் ஏன் இந்த கலக்கம்? என்றனர் படபடப்புடன். அவர் அமைதியாகச் சொன்னார்.ராமாயணம் முடியவில்லை...அது தொடரப்போகிறது.

லவகுசா பகுதி-1




மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து கொண்டிருந்த காட்சி, விண்மீன்கள் கண்சிமிட்டும் வானத்தை ஒத்திருந்தது.எங்கள் ராமபிரான் பதவியேற்று விட்டார். இனி என்றும் எங்களுக்கு இன்பமே, என்று மக்கள் ஆரவாரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ராமபிரானை தரிசிக்க காத்திருந்த மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு காவலர்களுக்கு அவசியமில்லாமல் போயிற்று. ஏனெனில், ராமராஜ்யம் தொடங்கி விட்டதல்லவா! ராமன் என்றாலே ஒழுக்கம் என்பது தானே பொருள். மக்கள் தாங்களே வரிசையை வகுத்துக்கொண்டு ஒழுங்குபட நின்றனர். வெளியே இப்படி என்றால், அரண்மனைக்குள் இன்னும் கோலாகலம். பட்டாபிஷேகம் காண வந்திருந்த பெண்கள் பயமின்றி நடமாடினர். சகோதரி! ராமராஜ்யம் துவங்கி விட்டது. இனி இரவு, பகல் என்ற வித்தியாசம் இங்கில்லை. நாம் எப்போது வேண்டுமானாலும், சிங்கங்கள் நிறைந்த காட்டிற்குள் கூட போகலாம். நம்மை ஏறிட்டு பார்க்கக்கூட ஆண்கள் தயங்குவார்கள். ஏனெனில், ராமராஜ்யத்தில் பண்பாடு என்பது ஊறிப்போனதாக ஆகிவிடும், என மகிழ்ச்சி பொங்க, ஒரு பெண், இன்னொருத்தியிடம் சொன்னாள். ஆம்...இயற்கை தானே! ராமபிரானின் தம்பி லட்சுமணன், தன் அண்ணனுக்கு திருமணமாகி இந்த நிமிடம் வரை, அண்ணியாரின் முகத்தை ஏறிட்டு பார்த்ததில்லை. இப்போதும், அவன் பட்டாபிராமன் முன்னால், கைகட்டி பவ்வியமாகத் தான் நின்று கொண்டிருந்தான். கோபக்காரன் தான்...மற்றவர்கள் முன்பு. அண்ணனையோ, அண்ணியாரின் திருப்பாதத்தையோ பார்த்துவிட்டால் பசுவைப் போல் ஒடுங்கி விடுவான். கோபமுள்ள இடத்தில் தானே குணம் இருக்கும்! அப்படிப்பட்ட தம்பியைப் போலவே தான் அயோத்தி வாழ் மக்களும், பெண்கள் விஷயத்தில் மிகுந்த அடக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மாமுனிவர், தமிழ்க்கடல் அகத்தியர் அங்கே வந்தார். ஸ்ரீராமனின் வெற்றிக்கு போர்க்களத்துக்கே வந்து அருளாசி செய்த மகான் அவர். ராமா! ராவணனை வெல்வோமா மாட்டோமா என சந்தேகம் கொள்ளாதே. இந்த உலகில் வெற்றி தரும் சூரிய மந்திரம் ஒன்று உள்ளது. அதை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன். அதைச் சொல், வெற்றி உன்பக்கம் தான், என்றவர் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். ராமன் சொன்னார், வென்றார்.

அந்த மரியாதைக்குரியவர் வந்ததும், அவையே அவையடக்கத்துடன் எழுந்து நின்று அவரை தலைபணிந்து தாழ் பணிந்து வரவேற்றது. ராமபிரானும், சீதாதேவியாரும் அந்த மாமுனிக்கு பாதஸ்நானம் செய்து, அந்த தீர்த்தத்தை தங்கள் தலையில் தெளித்து வரவேற்றனர். தங்க சிம்மாசனத்தில் அகத்தியர் அமர்ந்தார். ராமபிரான் அவரிடம், மாமுனியே! நான் பல அரக்கர்களை வனவாசத்தின் போது வென்றேன். அவர்களெல்லாம் யார்? அவர்களின் பிறப்பு என்ன? என்று கேட்டார். அகத்தியர் விலாவாரியாக அவற்றிற்கு விளக்கமளித்தார். ராமன் தன் அருகில் நின்ற அனுமானை அழைத்தார். முனிவரே! என் சீதாவை காட்டில் துறந்த வேளையில், எனக்காக வானரவீரர்கள் நாற்திசைகளிலும் சென்று தேடினர். தெற்கே சென்ற இந்த அனுமான் என்னைக் காப்பாற்றும் வகையிலான நற்செய்தி கொண்டு வந்தான். இறந்து போன வீரர்களை எழுப்ப மருந்துமாமலையைக் கொண்டு வா என்றால், வடக்கேயிருந்து அதை எடுத்து வர இவன் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நாழிகை (24 நிமிடம்) தான். இது இவனால் எப்படி சாத்தியமாயிற்று? என்று கேட்டார். ராமா! மிகச்சரியானதொரு கேள்வி கேட்டாய். இந்த அனுமனின் சரித்திரம் அற்புதமானது. இவனது வரலாறு கேட்டாலே பாவங்கள் நசிந்து போகும். தன் சக்தியின் பெருமை இன்னதென அறியாதவன் இந்த ஆஞ்சநேயன். செருக்கற்றவன்; பிறர் நலம் விரும்புபவன்; கருணையும், சாந்தமும் இவனிடம் ஊறிப்போனவை. கருணை எங்கிருக்கிறதோ, அங்கே தான் வீரலட்சுமி குடியிருப்பாள். இவனது வீரம் அளவிட முடியாதது. சொல்கிறேன் கேள், என்றவர் அனுமானின் கதையை ஆரம்பித்தார். ராமா! காற்றுக்கு அதிபதியான வருணபகவான், அஞ்சனை என்ற இவனது அன்னை மீது ஆசை கொண்டான். அந்த அஞ்சனையின் வயிற்றில் இந்த அனுமன் பிறந்தான். இவன் பிறந்ததுமே, இவனுக்குரிய ஆற்றல் அதீதமாக இருந்தது கண்டு பெற்றவர்கள் ஆச்சரியமடைந்தனர், இந்த வீரனால் அரக்கர் குலம் அழியும் என தேவர்கள் ஆனந்தம் கொண்டனர்.

அவன் தன் இளம்பிராயத்தில், தன் தாயிடம், அம்மா! எனக்குரிய இனிய உணவு எது? என்று கேட்டான். மகனே! இந்த குளிர்ந்த சோலையில் எந்தக் கனியெல்லாம் சிவந்து போயிருக்கிறதோ, அதுவெல்லாம் உனக்குரியது தான் என்று சொல்லிவிட்டு இவனுக்காக பழம் பறிக்க வெளியே சென்று விட்டாள். அப்போது, வான்வெளியில் சூரியன் உதயமாக, அதை பழமெனக் கருதி இவன் மேலே பாய்ந்தான். வாயுவின் மகன் என்பதால், இவனுக்கு காற்றில் பறக்கும் சக்தி இயற்கையிலேயே வாய்த்தது. இப்படி சூரியனையே பழமாக நினைத்தவனுக்கு, இலங்கை ஒன்றும் பெரியகாரியமாக படவில்லை, என்றார் அகத்தியர். பின்னர் விபீஷணன், சுக்ரீவன், அனுமான், அங்கதன், சேது அணை கட்டிய நளன் உள்ளிட்ட பலருக்கும் பரிசுகளை வழங்கினார் ராமன். அனைவரும் ராமனைப் பிரிய மனமின்றி கண்ணீருடன் அவரவர் ஊர் திரும்பினர். அனுமான் ரொம்பவே கண்ணீர் வடித்து விட்டான். சுக்ரீவனின் நிலைமை கருதி, அவனுடேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்ட ராமன், அனுமானை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் சீதாதேவியுடன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தார். அவருக்கு திருமணம் நடந்த போது வயது 12. சீதாவுக்கு 6 வயது. 18 வயதில், 12 வயது சீதாவுடன் காட்டுக்குப் போய் விட்டார். 32 வயதில் திரும்பியிருக்கிறார். சீதாவுக்கு இப்போது 26 வயது. இவர்கள் தங்கள் இளமையை காட்டில் கழித்து விட்டனர். அரண்மனை சுகத்தை அனுபவிக்க இப்போது தான் நேரம் வாய்த்திருக்கிறது. இன்ப வானில் அந்த தம்பதிகள் சிறகடித்துப் பறந்தனர். ஆனால், விதி என்னும் விரோதி அந்த இன்பத்தை நீண்டநாள் நீடிக்க விடவில்லை.