Friday, December 31, 2010

இவர் தான் சனீஸ்வரன்



யாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்... தப்பு செய்துவிட்டு சக்தி தேவியிடம் ஓடினால் தாய் பாசத்தோடு அணைத்துக் கொள்வாள். சிவன் தலையில் இரண்டு குட்டி குட்டி சேர்த்துக் கொள்வார். மாயக்கண்ணன், ஏதாவது கள்ளத்தனம் செய்து சிறிதளவு சோதிப்பதோடு நிறுத்திக் கொள்வான். ஆனால், இந்த சனீஸ்வரன் இருக்கிறாரே... கடவுளாக இருந்தாலும் கூட தன் வேலையைக் காட்டிவிடுவார். ஏனென்றால், அவன் சிவனுக்குரிய ஈஸ்வரப்பட்டத்தைப் பெற்றவன். சிவன் வகுத்த சட்ட திட்டங்களை பக்தர்கள் சரிவர நிறைவேற்றுகிறார்களா என்று சோதிப்பவன். ஒருமுறை சிவபார்வதியின் நடன நிகழ்ச்சி கைலாயத்தில் நடக்க இருந்தது. இதற்காக பிரமாண்ட அரங்கத்தை நிர்மாணித்தாள் பார்வதிதேவி, நடன நேரமும் குறிக்கப்பட்டது. சிவன் பார்வதியிடம், தேவி! நீ குறித்துள்ள நேரம் சனீஸ்வரனின் பார்வை நம் அரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இடத்தில் படும் நேரம். அந்நேரத்தில் நடனம் துவங்கினால் அரங்கம் எரிந்து விடும். எனவே, வேறுநேரம் குறிப்போமே! என்றார். பார்வதி கலகலவென நகைத்தாள். லோக நாயகரே! தாங்களும், உலகாளும் நானும் தான் நவக்கிரககங்களையே படைத்தோம். அவர்களுக்கு நாம் கட்டுப்படலாமா? தாங்கள் சொல்வது நகைப்பாக இருக்கிறது, என்றாள்.

தேவி! சட்டத்தை இயற்றுபவர்களே அதை மீறினால், உலகத்தினர் எப்படி அதை மதித்து நடப்பார்கள்? நீ சொல்வது சரியல்ல. நேரத்தை மாற்று என்றார் சிவன். பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. ஈசனே! ஒரு கிரகத்துக்கு பயந்து நேரத்தை மாற்றமாட்டேன். நீங்கள் சனீஸ்வரனிடம் போய், அரங்கத்தை எரிக்கக் கூடாது என நான் சொன்னதாக உத்தரவிட்டு வாருங்கள். அவன் கேட்க மறுத்தால், உங்கள் உடுக்கையை ஒலியுங்கள். அதன் சப்தம் கேட்டதும், அவன் அரங்கத்தை அழிப்பதற்குள் நானே இதை எரித்து விடுகிறேன், என்றாள். சிவனும் சனீஸ்வரனிடம் சென்றார். விஷயத்தைச் சொன்னதும் ஐயனே! என்னைப் படைத்ததாயின் கட்டளையை நான் மீறுவேனா? அதிலும் தாங்களும், அம்பிகையும் ஆடும் நடனத்தைக் காண எனக்கும் ஆசை இருக்காதா? நீங்கள் அதை இங்கேயே ஆடிக் காட்டுங்கள். எனது லோகத்திலேயே உங்கள் திருநடனம் நிகழ ஆசைப் படுகிறேன், என்றார் சனி பகவான். சனீஸ்வரனின் வேண்டுகோலை ஏற்று சிவன் உடுக்கையை ஒலித்தபடியே நடனமாடத் தொடங்கினார்.உடுக்கை சப்தம் கேட்டதோ இல்லையோ, சனீஸ்வரன் தன் கோரிக்கையை ஏற்கவில்லையோ எனக்கருதிய அம்பிகை, தான் நிர்மாணித்த அரங்கத்தை, தன் பார்வையாலேயே எரித்து விட்டாள்.

சனீஸ்வரனின் கடமை உணர்வைப் பார்த்தீர்களா? தெய்வங்களையே அவர் இப்படி படுத்துகிறார் என்றால், நம்மை விட்டு வைப்பாரா என்ன? நாம் நமது பணிகளை நல்ல முறையில், ஒழுக்கமான முறையில் கவனித்தால் நம்மை அவர் ஏதும் செய்யமாட்டார். புரிகிறதா?

மண்டோதரி எனும் பதிவிரதை!




கணவனின் உயர்வில், கண்ணும் கருத்துமாகச் செயல்படுபவளைப் பதிவிரதை என்கிறோம். கணவனை அரவணைப்பவள்; சிந்தனை தடுமாறும்போது விழித்துக் கொண்டு நேர்வழியில் செல்பவள்; முழுமையாக வாழ, இடையே வருகிற இன்னல்களை அகற்ற உதவுபவள்; கணவனின் உயர்வில், இரண்டு மடங்கு உயர்ந்து நிற்பவள். இந்தக் குணங்களால்தான், அவள் தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறாள்! புராண நளாயினி துவங்கி சரித்திரக் கண்ணகி வரை பதிவிரதைகள் பலரை அறிவோம். புறத்தோற்றத்தைப் புறக்கணித்து, அகத்தோற்றத்தில் ஆனந்தம் காணும் அவர்களது பக்குவம், பதிவிரதா தர்மத்தின் மிக முக்கியமான ஆதாரம்! புகழ்மிக்க பதிவிரதைகளின் பட்டியலில், மண்டோதரிக்கும் சிறப்பான இடம் உண்டு. மந்தோதரி என்றுதான் பெயர் அவளுக்கு ஆனால், காலப்போக்கில் மண்டோதரி என்றாகி விட்டது. மந்தோதரி என்றால், சிறுத்த இடையாள் என்று பொருள். சாமுத்ரிகா லட்சணத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவள்; கைப் பிடித்த கணவனுடன் காலம் முழுவதும் பாதுகாப்பாக இணைந்தவள். ஒன்றுடன் ஒன்று பாதுகாப்பாக இணைந்து முழுமை பெறுவதுதானே வாழ்வின் இலக்கணம்! கால ஓட்டத்தில், இன்னல்கள் பலவற்றில் சிக்கினாலும், எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்று, தனக்கும் தன்னுடைய கணவனுக்கும் பெருமை சேர்த்தவள்.

ஆட்சியாளர்கள், மகான்கள், சமூக சேவகர்கள் ஆகியோரது செயல்பாடு முழுமை பெற, அவர்களின் மனைவிமார்கள் பதிவிரதையாகத் திகழ்வதுதான் பெரும் காரணம்! அவர்களது அறம், கணவன்மார்களுக்குத் தற்காப்பாகச் செயல்படுகிறது. அகல்யை, திரௌபதி, சீதாதேவி, தாரை, மண்டோதரி எனும் ஐவரை, தூக்கத்திலிருந்து விழித்ததும் நினைத்துக் கொள்கின்றனர் மக்கள். இது அவர்களின் ஒழுக்கத்தால் விளைந்த அழியாப் புகழ்! வேட்டையாடச் சென்ற ராவணன், அங்கே மயன் எனும் அசுரனைக் கண்டான். அவனுடைய புதல்வி, மண்டோதரி. ராவணனின் செயல்பாடு பயத்தைக் கொடுத்தது. விளைவு... அவனுக்குத் தன் மகளையே திருமணம் முடித்து வைத்து நிம்மதியானான் மயன். பதிவிரதையாகத் திகழ்ந்த மண்டோதரியால், ராவணனுக்குப் பெருமை சேர்ந்தது. உலக சுகத்தில் கணவனுக்காக ஈடுபட்டாலும், அறத்தின் செயல்பாட்டில் அக்கறை செலுத்தினாள் மண்டோதரி. சீதாதேவியைக் கவர்ந்து வந்தது, அறத்துக்குப் புறம்பானது என ராவணனுக்கு அறிவுறுத்தினாள். அறமானது உடலெடுத்தே ஸ்ரீராமன் என்கிற மாரீசனின் வார்த்தையைச் சொல்லி, வழி தவறியவனைத் திருத்த முயன்றாள். அறத்துடன் இணைந்தவருக்கு ஆறறிவற்ற உயிரினங்களும் துணை நிற்கும்; அறத்திலிருந்து விலகியவரை உடன்பிறப்பும் விலக்கி வைக்கும் என்பதை உணர்த்த முற்பட்டாள், மண்டோதரி.

வரம் பெறும் தருணத்தில், மனிதனால் தனக்கு இழப்பு உண்டு என அறிந்தான் ராவணன் ஆனால் வீரம், தீரம், செல்வம், பதவி, பெருமை ஆகியவற்றுடன் அகங்காரமும் இணைந்து அவனை மழுங்கடித்தன. மாரீசனிலிருந்து மண்டோதரி வரையிலானவர்களின் அறிவுரைகள், காதில் நுழைந்தன; ஆனால், மனதை எட்டவே இல்லை! நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது என்பார்களே.... அது ராவணன் விஷயத்தில் பலித்தது. வீரனாகப் பிறந்தவன், வீரனாக மடிய வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு! போர்க்களத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்ரீராமர் அளித்த சந்தர்ப்பத்தையும் புறக்கணித்தது அவனது வீரம்; ராம பாணத்துக்கு இரையானான். போரில் உயிர் துறப்பது வீரனுக்குப் பெருமை; எனினும், தனது வீரத்துக்கு நிகரில்லாத மனிதனால் ஏற்பட்ட மரணம் இழுக்கு என நினைத்து வருந்தினான் என்கிறார் வால்மீகி. தனது உறுதியில், கணவனைக் காப்பாற்றிய பதிவிரதைகள் உண்டு. வீரமிகு வாழ்வுக்கு வில்லங்கம் ஏற்பட்டாலும், கோழையாக மாறாதவன் ராவணன். எனவே, வீரமரணத்தை எதிர்கொள்ள ராமபாணத்தை வரவேற்றான். அவனது விருப்பத்தை அறிந்த மண்டோதரி, அதற்கு இடையூறாக இருக்கவில்லை. தனக்கு உடன்பாடில்லை எனினும் கணவனது விருப்பத்துக்கு இணங்குவதே பதிவிரதையின் இயல்பு!

தாசியைச் சந்திக்க வேண்டும் என்கிற கணவனின் ஆசையை மனைவி நிறைவேற்றியதைச் சொல்கிறது புராணம். நியதிக்குப் புறம்பாகச் செயல்பட எவராலும் இயலாது. இங்கே... நியதி, ராவணன் மரணத்தை வரவேற்கிறான் எனும் நிலை. எனவே, அதனை ஏற்றாள் மண்டோதரி. அசுரனை மனிதன் வென்றான் என்பது நிகழாத ஒன்று. காட்டில் கரன், தூஷணன் முதலான அரக்கர்களை அழித்தான் ஸ்ரீராமன். ஆகவே, அவன் மனிதன் இல்லை; மனித வடிவில் தென்படும் கடவுளாக இருக்கவேண்டும். அதேபோல் வானரங்களைக் கொண்டு கடலில் அணை அமைத்து இலங்கைக்குள் நுழைவதும் மனிதனால் இயலாத ஒன்று. அப்போதே சந்தேகம் வலுத்தது. அணுகவே முடியாத உன்னை (ராவணனை), சீதை எனும் மாயையால் மதியை மங்கச் செய்து, ஸ்ரீராமனின் வடிவில் எமன் தனது வேலையை முடித்துக் கொண்டான் என்பது, இப்போதுதான் தெரிகிறது. ஸ்ரீமந் நாராயணனே மனித வடிவில் வந்து, வானரங்களுடன் இணைந்து, தவறு செய்தவனை, உலக நன்மைக்காகத் தண்டிக்க வந்திருக்கிறார். உனது மறைவுக்கு நீயே காரணம்! காட்டில் தனியே இருந்த சீதையை, மாரீசனின் துணையுடன் ஏமாற்றிக் கவர்ந்து வந்தாய். வீரனுக்குப் பொருத்தமில்லாத, உறங்கிக்கிடந்த உனது அல்பத்தனம் அங்கே வெளிப்பட்டது. பெருமைக்குரியவள் என்பதைப் பொருட்படுத்தாமல் தூக்கி வந்தாய். பதிவிரதையின் மீது நீ கொண்ட தாபமே, உன்னை அழித்தது. பொறுமைக்குப் பெயர் பெற்ற பூமாதேவியின் மகள் அவள். அதனால்தான், அவளை அணுகும் தருணத்திலேயே உன்னை அழிக்கவில்லை அவள்! அதேநேரம், பதிவிரதை எடுத்த முடிவையும் எவராலும் மாற்ற முடியாது.

ராமனுடன் பகை வேண்டாம்; சீதையை அவனிடம் இணைத்துவிடு என்று எத்தனை முறை சொல்லியிருப்பேன்! நீ கேட்டால்தானே? நல்லது செய்தவன் நன்மையைச் சந்திப்பான்; கெடுதல் செய்தவன், பாபத்தைச் சந்திப்பான். உன்னுடைய சகோதரன் நன்மை செய்தான்; மகிழ்ச்சியுடன் இருக்கிறான். நீ கெடுதல் செய்தாய்; பாபத்தைச் சந்தித்தாய். சீதையைப் பார்த்த கணத்தில், அவளை எடைபோடத் தெரியவில்லை உனக்கு! காமத்தில் மூழ்கிய உன் மனம் தவறிழைத்தது. அவள் மூலமாக உனக்கு மரணமும் கிடைத்தது.... இப்படியெல்லாம் சிந்தித்த மண்டோதரியின் மனம் இயலாமையில் தவித்தது. குலம், குணம், அழகு, ஒழுக்கம், பெருமை ஆகிய குணங்களைக் கொண்டவளை மனைவியாகப் பெற்றிருந்த போதிலும், பிறன்மனையைத் தீண்டியதே ராவணனின் முடிவுக்குக் காரணமாயிற்று. அக்னிக்கு இரையான பொருள் திரும்பவும் துளிர்க்காது. சீதையின் பதிவிரதாக்னியில் வீழ்ந்த நீ, உயிர் பெற்று வருவது இயலாத ஒன்று. பதிவிரதையின் கண்ணீரானது, பூமியில் விழுந்தால், ஏதேனும் ஒன்று நடந்தே தீரும். அதுதான் உன்னைப் பழிவாங்கியது! எது எப்படியோ... உன்னை இழந்து நான் அநாதையாக நிற்கிறேன் எனப் புலம்பினாள் மண்டோதரி கணவனின் செயல்பாடு அவனுடன் முடிவதில்லை; மனைவியையும் துன்பத்தில் ஆழ்த்தும் எனப் புரிந்து கொண்டேன் எனத் தெளிந்தாள். அவனது தவறில் தானும் பங்கேற்று, உலக சுகங்களைத் துறந்து, துயரத்தை ஏற்றாள்; கணவனை, ராவணனைத் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கிய முதல் பதிவிரதை, மண்டோதரி! ராவணனின் மனைவி என்பதால் மாற்றுக் குறையவில்லை அவள்! கணவன் இறந்தாலும், அவனது நினைவிலேயே வாழ்ந்தவள் என்பதால், சிறப்புப் பெற்றவளாக ஒளிர்கிறாள் மண்டோதரி!

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!


லட்சுமணன் என்ற வியாபாரிக்கு எந்த நேரமும் வியாபாரத்தைப் பற்றிய கவலைதான். அவரது மனைவி ஊர்மிளா, குடும்பம், குழந்தை என ஒருநாளாவது வீட்டில் இருக்க கூடாதா? என கேட்டுக் அலுத்துப் போனாள். நான் ஒருநாள் வீட்டிலே இருந்தா ஆயிரம் ரூபாய் நஷ்டப்படும். நீ உன் அப்பன் வீட்டில் இருந்தா அதைக் கொண்டு வருவே, என கொடூரமாகப் பேசுவார். இதற்குப் பயந்தே, அவர் மனைவி வாயைத் திறப்பதில்லை. ஒரு சமயம் திடீரென வியாபாரம் குறைந்தது. வியாபாரி கவலையுடன் இருந்தபோது ஒரு சாமியார் கடைப் பக்கமாக வந்தார். தம்பி! நெஞ்சு எரிச்சலா இருக்குது! ஒரு துண்டு இஞ்சி கொடேன். அதை சாறுபிழிந்து குடித்தால் சரியாகி விடும், என காசை நீட்டினார். வியாபாரி அவரிடம் காசு வாங்கவில்லை. சாமி! எனக்கு காசுக்கு பதிலாக, நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்களேன். நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும், என்றார். சாமியும், அப்படி என்னப்பா கேள்வி? என கேட்க, வியாபாரி தனது வியாபாரம் திடீரென குறைந்து விட்டது பற்றியும், அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும், என்றும் சொன்னார். சாமியார் அவரிடம், நீ தர்மம் செய்வாயா? என்றார். அதெல்லாம் செய்றதில்லே சாமி! சரி போகட்டும்... கடவுளை யாவது தினமும் வணங்குவாயா? அதுக்கெல்லாம் எங்கே சாமி நேரம் கிடைக்குது. காலையிலே எழுந்து குளிச்சதும், சாப்பிடக்கூட செய்யாம கடை பக்கம் வந்துடுவேன். அப்படி வியாபாரம் செய்தும் பலனில்லை என்றார் லட்சுமணன்.

சாமியார் சிரித்தார். தம்பி! நீ கடவுளை வணங்கு. ராமா ராமானு கொஞ்ச நேரமாவது சொல்லு. எல்லாம் சரியாயிடும், என்றதும் எனக்கு அதற்கு நேரமில்லையே சாமி, என்றார் வியாபாரி. காலையில் உன் அன்றாடப் பணியைச் சொல்லேன், என்றதும் சாமி! நான் காலையில், எங்க ஊர் ஒதுக்குப்புறத்திலே இருக்கிற வயல் பகுதிக்கு காலைக்கடன் கழிக்க போவேன், போக வர அரை மணி நேரமாகும், என்றதும் குறுக்கிட்ட சாமியார், அது போதும்! அந்த அரை மணிநேரம் நீ ராம நாமத்தைச் சொல்லு. எல்லாம் சரியாயிடும் என்றார். லட்சுமணனும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். ஒருநாள், விண்வெளியில் சஞ்சாரம் செய்த ஆஞ்சநேயர், ராமநாமம் எங்கோ ஒலிப்பதைக் கேட்டு, கீழே பார்த்தார். வியாபாரி, இயற்கை உ<பாதையைக் கழிக்கும் நேரத்தில் அதைச் சொல்வதைப் பார்த்து கோபமடைந்தார். என் பகவானின் நாமத்தை சுத்தமில்லாத நேரத்தில் உச்சரித்தாயா? எனக் கேட்டபடியே இறங்கி வந்து வியாபாரி கன்னத்தில் ஒரு அறை விட்டார். பின்னர் அயோத்தி சென்று விட்டார். அங்கே ஸ்ரீமன் ராமச்சந்திர மூர்த்தியை வணங்கி, அவரது முகத்தை பார்த்தார். கன்னம் வீங்கியிருந்தது. பதறிப்போன ஆஞ்சநேயர், காரணம் கேட்டார். அனுமான் எந்த நேரமாக இருந்தாலும் என்ன! ஏதோ கிடைத்த நேரத்தில் ஒரு பக்தன் என்நாமத்தை சொன்னான். நீயோ அவனை தாக்க கையை ஓங்கினாய். உன்னிடம் அடிபட்டால் அவன் இறந்தல்லவா போயிருப்பான்! அதனால், அவன் கன்னத்தில் உன் கைபடும் முன் நான் குறுக்கே புகுந்து, என் கன்னத்தில் அதைத் தாங்கிக் கொண்டேன், என்றார். பகவானை வணங்க நேரம் காலமும் இல்லை. பகவான், தன் பக்தர்களுக்கு வரும் துன்பத்தைப் பொறுப்பதும் இல்லை.

பிரகலாதனின் முற்பிறவி!



துவாரகையில் வசித்த சிவசர்மா, வேத சாஸ்திரங்களை கற்று புலமை பெற்றவராக திகழ்ந்தார். அவருக்கு ஐந்து மகன்கள். அவர்களுக்கு குருவாக இருந்து வேதத்தை கற்றுக் கொடுத்தார் சிவசர்மா. வேதம் பயில்பவர்கள் குருவுக்கும் பெற்றோருக்கும் மரியாதை செய்ய வேண்டும். தன் மகன்கள் அவ்வாறு இருக்கின்றனரா என சோதிக்க நினைத்தார் சிவசர்மா. அதற்காக ஒரு தந்திரம் செய்தார். தன் மனைவி, இறந்து கிடப்பதைப் போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, மூத்த மகன் யஜ்ஞசர்மாவை அழைத்தார். அவனிடம், உன் தாய் இறந்துவிட்டாள். அவளது உடலை வாளால் வெட்டி வீசி விடு! என்றார். அவனும் அப்படியே செய்தான். பின் ஒரு அழகிய பெண்ணை படைத்து, இரண்டாவது மகன் வேதசர்மாவை அழைத்தார். அவனிடம் அப்பெண்ணை, தனக்கு மணம் செய்து தரும்படி கேட்டார். வேதசர்மா அவளிடம், தன் தந்தையை மணந்து கொள்ளும்படி கேட்டான். அவளோ மறுத்தாள். அவள் மனதை மாற்றுவதற்காக, எதைக் கேட்டாலும் தருவதாகச் உறுதியளித்தான் வேதசர்மா. அவள் அவனது தலையைக் கேட்டாள். அவனும் தன் தலையை வெட்டிக் கொடுத்து விட்டான்.

அடுத்து மூன்றாவது மகன் தர்மசர்மாவை அழைத்தார். அவனிடம் வெட்டபட்ட வேதசர்மாவின் தலையை கொடுத்து, பத்திரமாக வைத்திரு என்றார். அவன் அதை வாங்கி தர்மதேவதையை வணங்கி, அண்ணனை உயிர்ப்பித்தான். நான்காவது மகன் விஷ்ணுசர்மாவை சோதிக்க வேண்டியநிலை. சிவசர்மா அவனிடம், நான் ஒரு அழகியை மணக்க விரும்புகிறேன். ஆனால், வயதாகிவிட்டது. மீண்டும் இளமையைப் பெற அமிர்தம் உண்டால் மட்டுமே முடியும். எனவே, தேவலோகம் சென்று அமிர்தம் பெற்று வா என்றார். அவனும் தேவலோகம் சென்றான். இந்திரன் மேனகை எனும் தேவலோக பெண்ணை அனுப்பி அவனது கவனத்தை திசைதிருப்ப முயன்றான். அவனோ தன் வேலையில் மட்டும் கவனமாக இருந்து, இந்திரனிடம் அமுதம் பெற்று. தந்தையிடம் கொடுத்தான். மகிழ்ந்த சிவசர்மா நான்கு மகன்களையும் அழைத்தார். தன் மனைவியை உயிர்ப்பித்து, தான் அவர்களை பரிசோதித்ததை கூறினார். மகன்களும் மகிழ்ந்தனர். அவர்களை விஷ்ணுலோகத்திற்கு அனுப்பி விட்டார் சிவசர்மா. ஐந்தாவது மகன் சோமசர்மா விஷ்ணுவின் மீது அதீத பக்தியுடையவன்.

ஒருசமயம் சிவசர்மா அவனிடம், நானும், உன் தாயாரும் தல யாத்திரை செல்கிறோம். நாங்கள் திரும்பும் வரையில் இந்த அமுதத்தை பத்திரமாக வைத்திரு! என்று சொல்லி சென்றார். சிலநாட்கள் கழித்து திரும்பிய சிவசர்மா, கலசத்தில் இருந்த அமுதத்தை மறையச் செய்துவிட்டு, மகனிடம் அமுதம் தரும்படி கேட்டார். அமுத கலசத்தை பார்த்த அதில் அமுதம் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். விஷ்ணுவை பிரார்த்தித்தான். அமுதகலசம் நிரம்பியது. அதனை தன் பெற்றோரிடம் கொடுத்தான். அமுதம் உண்ட இருவரும் சோமசர்மாவை வாழ்த்திவிட்டு, விஷ்ணுலோகம் சென்றனர். பின் பூலோகத்தில் தனித்து வாழ்ந்த சோமசர்மா, தவ வாழ்க்கையில் ஈடுபட்டான். ஒருசமயம் அவனது தவத்தை கெடுக்க வந்த அசுரர்களைக் கண்டு பயத்திலேயே உயிர் விட்டான். அந்த அசுரகுலத்தை வேரறுக்க மறுபிறவியில் அதே குலத்தில், இரண்யகசிபுவின் மகன் பிரகலாதனாக பிறந்தான். நரசிம்ம அவதாரம் தோன்றவும் காரணமாக இருந்தான். மகாவிஷ்ணுவின் அருளையும் பெற்றான்.

தைப்பொங்கல்


பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை- 7.30 மணி முதல் 8.30 மணி வரை

தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியே இம்மாதத்தின் சிறப்பை உணர்த்தும். தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளே பொங்கல் பண்டிகையாகும். கேரளாவிலும், வட மாநிலங்களிலும் இந்நாளை "மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். "சங்கரமணம் என்றால்" நகரத் தொடங்குதல் என்பது பொருள். இந்நாளில் சூரியன் மகர ராசியில் பிரவேசித்து, தன் வடதிசை பயணத்தைத் தொடங்குகிறார். இது, உத்ராயண புண்ணிய காலத்தின் துவக்கமாகும். விவசாயிகள் முதன்முதலில் அறுவடை செய்த பயனுக்காக, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் கொண்டாடுவதே இவ்விழாவின் அடிப்படையõகும். அன்று, வயலில் விளைந்த புதிய நெல்லை குத்தி அரிசியாக்கி, அதில் பொங்கலிட்டு கண்ணிற்கு தெரியும் கடவுளான சூரியனுக்கு படைப்பர். செய்ந்நன்றி மறக்கக்கூடாது என்ற அரிய தத்துவத்தை உணர்த்தும் நாள் இது.தைப்பொங்கலன்று வாசலில் அடுப்பு வைத்து பொங்கலிடுவர். பொங்கல் பானையில் பால் கொதித்துவரும்போது, ""பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்புவதும், வயதான பெண்கள் குரவையிடுவதும் (குலவை) இப்பண்டிகைக்குரிய சிறப்பாகும். பின்னர் அப்பொங்கலையும், கரும்பு, ஆகியவற்றை சூரியனுக்குப் படைத்து வழிபடுவர். தங்கள் வீட்டில் பிறந்து திருமணம் ஆன பெண்மக்களுக்கு பொங்கல் படியாக பணம் கொடுப்பதும் சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.மறுநாள் மாட்டுப்பொங்கலன்று பசு, கன்று, காளைகளுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, அவற்றை குளிப்பாட்டி, அலங்கரித்து தெய்வமாகவே பாவித்து வணங்க ÷வண்டும்.

பலன்: தைப்பொங்கலன்று சூரிய பகவானை வழிபடுபவர்கள் உடல் ஆரோக்கியம்,செல்வம், ஆயுள் ஆகியவற்றை குறைவின்றி பெறுவர். செய்நன்றி மறவாத தன்மையும், சகோதர, சகோதரிகள் மீது பாசமும் வளரும்.

பொங்கல் பூஜை செய்வது எப்படி?

இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.

வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். கோயில்களையும் தேர்ந்தெடுக்கலாம். பால் பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து, ""பொங்கலோ பொங்கல் என ஒரு சேர முழக்கமிட வேண்டும். ஏனெனில், இது ஒரு ஒற்றுமைத் திருவிழா. தேரோட்டம் என்ற நிகழ்ச்சியை ஊர் ஒற்றுமை கருதி எப்படி நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றார்களோ, அதுபோல பொங்கலும் மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வீட்டுக்குள் காஸ்ஸ்டவ், மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றில் பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வீதியில் வைக்க வேண்டும். நகரங்களாக இருந்தாலும் கூட, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புஅளிக்கும் வகையில், அங்கிருந்து பனை ஓலை அல்லது தென்னை ஓலை தருவித்து பொங்கலிட வேண்டும்.

பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும்.

பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும், ஒரு தேங்காயை உடைத்து, அதன் நீரை பானையில் விட வேண்டும். சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து, அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் "பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.

இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின், காய்கறி வகைகள் சமைத்து வெண்பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து, இனிப்பு வகைகள், புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்.

Wednesday, December 22, 2010

அமெரிக்கா, அருள்மிகு ராமர் திருக்கோயில், டெக்சாஸ்


தலவரலாற்று : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில், சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்டதாகும். இக்கோயில் 1999 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் தேதியன்று, உலகளாவிய சின்மயா மிஷன் அமைப்பின் தலைவரான சுவாமி தேஜோமயானந்தாவால் துவங்கி வைக்கப்பட்டது. இக்கோயிலில் ராம பிரான், சீதா தேவி, லட்சுமணர் மற்றும் ஹனுமான் ஆகிய பரிவாரங்களுடன் கருவறையில் காட்சி அளிக்கிறார். இது தவிர கணேசர், சிவன் போன்ற தெய்வங்களுக்கென தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி கண்ணாடிகளின் மீது அழகிய வேலைப்பாடுடனான சின்மயா மிஷனின் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இதன் மீது காவி நிறத்தால் ஆன குருதேவரின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பது, இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது.

கோயில் முகவரி :

டாலாஸ் ஃபோர்ட் வொர்த் சின்மயா மிஷன்,

சின்மயா சாகெட்,

17701 டவென்போர்ட் ரோடு,

டாலாஸ், டெக்சாஸ் -75252, யு.எஸ்.ஏ.

தொலைப்பேசி : +1-972-250 2470

இணையதளம் : http://www.chinmayasaaket.org/

அமெரிக்கா ,ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆலயம், தெற்கு டெக்சாஸ்



தலவரலாறு : தெற்கு டெக்சாஸ் இந்து சமூக அமைப்பின் சார்பில் கார்பஸ் கிறிஸ்டி பகுதியில் 2002ம் ஆண்டு ஆகம சாஸ்திர விதிப்படி ஸ்ரீ வெங்கடேஷ்வரர் திருக்கோயில் உருவாக்கப்பட்டது. தெற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள இந்து சமூகத்தினருக்கு சேவை ஆற்றுவதும், மத சேவைகள் புரிவதும் இக்கோயிலின் முக்கிய நோக்கமாக கொள்ளப்பட்டது. தெற்கு டெக்சாஸ் இந்து சமூக அமைப்பின் உறுப்பினர்களான சுப்பாராவ் புர்ரா, லலிதா ஜானகி, ராமகிருஷ்ண முலுகுட்லா,பனுகந்த் பட்டேல், எம்.பி.சுதாகரன் ஆகியோரின் சீரிய முயற்சியால் இக்கோயில் கட்டப்பட்டது. கோயிலின் வளர்ச்சிப் பணியாக இந்திய சமூகத்தினருக்கு பயன்படும் விதமாக சமூக அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

லாப நோக்கமற்ற அமைப்பாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் சமூக பணிகளுக்காக ஸ்டிவர்டு ரைஸ் என்பவரால் நிலம் பெறப்பட்டது. அதே சமயம் கோயிலுக்கென கணபதி, வெங்கடேஷ்வரர், பத்மாவதி, ஆண்டாள், சிவன், கருடர் மற்றும் துவாரபாலகர்கள் உள்ளிட்ட தெய்வ விக்ரஹங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டன. பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கோயிலுக்கான நிதி வசூலிக்கப்பட்டது. கோயிலின் நிர்வாக உறுப்பினர்களின் முயற்சியாலும், பல்வேறு சமூக ஆர்வலர்களின் உதவியுடனும் கார்பஸ் கிறிஸ்டி பகுதியில் கோயிலுக்கான நிலம் பெறப்பட்டது. அந்த புதிய நிலத்தில் 2003ம் ஆண்டு ஜூன் 18ம் தேதியன்று வேத சாஸ்திர முறைப்படி கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கோயிலில் பல்வேறு உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, நவகிரகங்கள் உள்ளிட்ட சன்னதிகளும் கூடுதலாக அமைக்கப்பட்டது. இதை தவிர மார்பிள் கல்லால் வடிவமைக்கப்பட்ட ராதா கிருஷ்ணர், ராம பரிவாரங்கள் மற்றும் தத்தாத்ரேயர் உள்ளிட்ட தெய்வ சிலைகள் அமைக்கப்பட்டன. பின்னர் பக்த சமூகத்தின் ‌விருப்பத்தின் பேரில் கபீர்ஜி முனிவரின் சிலையிலும் கோயிலில் அமைக்கப்பட்டது.

2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் திருப்பதியில் இருந்து புதிய கோயிலுக்கான வடிவமைப்பு மாதிரி தயார் செய்யப்பட்டு, அதற்கு பல்வேறு சமூக அமைப்புகளிடம் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் கோயிலின் வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு, கோயில் திருப்பணி துவங்கப்பட்டது. தெய்வ விக்ரஹங்கள் இந்தியாவிலிருந்து பெறப்பட்டு, தற்காலிக இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சாம்பவி தனஞ்சய சுவாமிகளால் இக்கோயிலுக்கு பார்வதி தேவி சிலையும் அனுப்பி வைக்கப்பட்டது. மிக நேர்த்தியாக, அழகுமிளிரும் விதமாக அமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு சத்யநாராயண ஆச்சார்யார் தலைமையில் 2005ம் ஆண்டு மே 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோயில் நேரம் : காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை ; மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை. வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை கோயில் திறக்கப்படுகிறது.

ஆலய முகவரி :

Sri Venkateswara Temple,

South Texas Hindu Society,

10401 McKinzie Ln,

Corpus Christi, TX 78410

தொலைப்பேசி : (361) 241 - 0550

இமெயில் : svtemple@southtexashindusociety.org

இணையதளம் : http://svtempletexas.org

அருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம், தாலாஸ்,அமெரிக்கா




தலவரலாறு : டெக்சாசின் ஃபிரிஸ்கோ பகுதியில் உள்ள தாலாசில் அமைந்துள்ள அழகிய ஆலயம், அருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம் ஆகும். பரம பூஜ்ய ஸ்ரீ சுவாமிஜி தாலாஸ் மற்றும் ஹோஸ்டன் பகுதியில் உள்ள சட்சாங் குழுவினரை 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி சந்தித்து, தத்தா கோயில் கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அப்பகுதியிலுள்ள பக்தர்களின் உதவியுடன் தாலாஸ் பகுதியில் நிலம் பெறப்பட்டு அருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம் கட்டப்பட்டது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டத்திலேயே முற்றிலும் கல்லால் உருவாக்கப்பட்ட ஒரே ஆலயம் இதுவாகும். சுவாமிஜியின் அரிய முயற்சியால் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆலயம் அமைப்பதற்காக நிலம் தேடும் பணி துவங்கப்பட்டது. இப்பணி செப்டம்பர் மாத இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் தாலாஸ் பகுதியில் பெறப்பட்ட நிலம் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் விலைக்கு வாங்கப்பட்டது. வேகமாக முன்னேறி வந்த நகரங்களில் ‌ஒன்றான ஃபிரிஸ்கோ பகுதியில் இக்கோயில் அமைக்கப்பட்டது. குடியிறுப்பு பகுதியின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு மிக அருகில் தேவாலயமும், பள்ளியும் இருப்பது தனிச்சிறப்பானதாகும்.

வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய சுமார் 10,000 சதுரடியில் அமைந்த கோயில் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டப்பட்டது. கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது மெட்ரோபிளக்ஸ் பகுதியில் பக்தர்களால் எளிமையான முறையில் ஹனுமன் வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. பக்தர்களின் பல ஆண்டுகால கோரிக்கைக்கு பிறகு சுவாமிஜியால் ஜெய்பூரில் இருந்து இளஞ்சிவப்பு நிறத்தாலான ஹனுமன் சிலை புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டது. அத்துடன் 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதியன்று முதல் ஹனுமன் ஜெயந்தி விழாவன்று 5 அடி உயர ஹனுமன் சிலை ஒன்று கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதியன்று ஹனுமன் கலாச்சார மையத்துடனான ஸ்ரீ காரிய சித்தி ஹனுமன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆஷாத சுக்ல ஏகாதசி அன்று கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதால், அன்று முதல் ஏகாதசி தினமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதியன்று ஹனுமன் கலாச்சார மையத்தில் ஹனுமன் விக்ரஹத்தின் பிரன்ன பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

ஆலய நேரங்கள் : திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது. வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமையிலும், தேசிய விடுமுறை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலயம் திறக்கப்படுகிறது.

ஆலய முகவரி : Karya Siddhi Hanuman Temple,

12030 Independence, Pkwy, Frisco, Texas - 75035

இ-மெயி்ல் : info@dallashanuman.org

தொலைப்பேசி : (866) 996-6767

இணையதளம் : http://www.dallashanuman.org

அருள்மிகு கணேசர் திருக்கோயில், கொலம்பியா




ஆலய வரலாறு : அமெரிக்காவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு கணேசர் திருக்கோயில். சமூக சேவை மன்றமாக பதிவு செய்யப்பட்ட இவ்வமைப்பு 1999ம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பக்தர்களின் வழிபாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக அருள்மிகு கணேசர் திருக்கோயில் உருவாக்கப்பட்டது. கவய் இந்து துறவிகள் மட நிறுவனர் சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி என்பவரால் இக்கோயிலில் மூலவர் விக்ரஹம் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. ஹவாய் தீவில் உள்ள துறவிகள் மடம் தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி அமைக்கப்பட்டிருப்பதற்கும் இவரே முக்கிய காரணமாகும்.

பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கனடா பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக் குடும்பங்கள் ஒன்று கூடும் இடமாக இக்கோயில் திகழ்கிறது. அதனால் இக்கோயில் ஆன்மிக, கலாச்சார, கல்வி, சமூக நிகழ்வுகள் மற்றும் சேவைகள் செய்யும் இடமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இக்கோயிலுக்கு விநாயகப் பெருமானை வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்துக்களின் விழாக்கள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளும் மாதந்தோறும் இக்கோயிலில் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து பக்தர்களும் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் அளவிற்கு பெரிய பிரார்த்தனை கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள், பெரியவர்கள் என சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோயிலில் தன்னார்வ தொண்டு புரிந்து வருகின்றனர். ஆதரவற்றோருக்கு உதவி செய்தல், வீடற்றோருக்கு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தல், உணவு வழங்குதல், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்தல் உள்ளிட்ட பல்வேறு சமூல நல செயல்பாடுகளையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சமூக ஆர்வலர்கள் வசூலித்து கொடுத்த நன்கொடைகளின் மூலம் 2004ம் ஆண்டு கோயிலுக்கென தனியிடம் பெறப்பட்டு, 2006ம் ஆண்டு தற்போது உள்ள ஆலயம் அமைக்கப்பட்டது.

கோயிலின் சிறப்புக்கள் : குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் விதமான தியானம், ஆன்மிகம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஆன்மிகம், ஆரோக்கியம் மட்டுமின்றி பெரியோர்களுக்கு மதிப்பளிக்கும் பண்பும் கற்றுத் தரப்படுகிறது. அனைத்து தரப்பினருக்குமான நூலகம், வழிபாட்டுக் கூடம், திருமணம் உள்ளிட்ட வைபவங்கள் நடத்துவதற்கான மண்டபம், உணவுக் கூடம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இக்கோயிலில் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் வாகன வசதி, ‌நந்தவன வசதி, சேமிப்பு அறை, அலுவலக அறை உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

ஆலய முகவரி : Sri Ganesh Temple Society of British Columbia

7656 Main Street
Vancouver, BC V5X 3K3

தொலைப்பேசி : 604-327-2924

இணையதளம் : http://www.sriganeshbc.com

பதினெட்டாம் படி பாலகன் வரலாறு்



அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது....

தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்க மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்.

சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.

தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் ‘ட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.

எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். ராஜராஜன் என்ற அந்த ராஜகுமாரன் எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது ‘ழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.

இது ‘ழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறனர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை தேவலோகத்தில் நின்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.

ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாதுஎன்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.

மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.

மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.

மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.

ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.


அச்சம் தீர்க்கும் அச்சன் கோவில்


அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை ‘ழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது.

ஐயப்பன் பாலகனாக வளர்ந்தது குளத்துப்புழையில்.


இளைஞனானதும் அவர் அச்சன்கோயில் வந்தார். சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும்.

அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் தீயாலும், இதர ஐயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் நடை திறக்கப்பட்டு ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள சந்தனத்தை பூசினால் விஷம் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.


ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு


வாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.

ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார்.

அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

படிப்பு தரும் குட்டி சாஸ்தா




கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சாஸ்தா, குழந்தை வடிவில் இருக்கிறார். கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு உயரம் குறைந்து உள்ளது. செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. விஜயதசமி தினத்தன்று இங்கு "வித்தியாரம்பம்' எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும்


குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட "குட்டி சாஸ்தா' அருள்புரிவார் என்பது நம்பிக்கை.

சரண கோவை

மாலை அணிந்து விரதமிருப்பவர்கள் தினமும் காலை, மாலையில் நீராடி விட்டு ஐயப்பனின் 108 சரணக்கோவையை மனதில் பயபக்தியுடன் பாடவேண்டும். இதனை மிகவும்


மாப்பிள்ளை ஐயப்பன்

சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா கிரகஸ்த (குடும்பம்) நிலையில் ஆரியங்காவில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சாஸ்தா, புஷ்கலாதேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார். சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவின் இங்கே சாஸ்தாவுடன் ஐக்கியமானார். அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துவர். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால் "மதகஜ வாகன ரூபன்' என்றொரு பெயரும் உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும் என்பது நம்பிக்கை.

ஐயப்பன் கோயிலில் தீப வழிபாடு

கோயம்புத்தூர் சித்தாபுதூரில் ஐயப்பன் கோயில் உள்ளது. சபரிமலை கோயில் போலவே கட்டப்பட்டிருப்பதும், அங்கு நடக்கும் பூஜை முறைகளைப் போலவே பூஜைகள் செய்வதும் இத்தலத்தின் சிறப்பு. நம்பூதிரிகளே இங்கு பூஜைகளை செய்கின்றனர். பிரகாரத்தில் நெய்தீப மேடை உள்ளது. ஐயப்பனிடம் வேண்டிக்கொண்டு இங்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தீமைகள் விலகி நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. குருவாயூரப்பன், பகவதிதேவி, பிரம்மரக்ஷி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சன்னதி உள்ளது.

சென்னை ஐயப்பன்

சென்னை பாரிமுனை அரண்மனைக் கார தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஐயப்பனுக்கு சன்னதி உள்ளது.
சபரிமலை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஐயப்பன் சிலை கொண்டு செல்லப்பட்ட போது அவரை சில தலங்களில் வைத்து பூஜை செய்தனர். இங்கு பூஜை செய்தபோது மூன்று நாட்கள் வரையில் சிலையை எடுத்துச் செல்ல சுவாமியின் உத்தரவு கிடைக்கவில்லை. இதன் பிறகே எடுத்துச் சென்றனர். சபரிமலை ஐயப்பன் இங்கிருந்ததை நினைவூட்ட, தனியாக சன்னதி அமைக்கப் பட்டது. சபரிமலையில் நடப்பது போலவே இவருக்கு பூஜைமுறை கடைபிடிக்கப்படுகின்றன. மகரஜோதி விழாவும் நடத்தப்படுகிறது.

வில்வ இலை அபிஷேகம்

சிவ, விஷ்ணுவின் மைந்தனாக பிறந்த ஐயப்பன் கிராமங்களில் அய்யனாராக அருள்புரிகிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், மோகினியாக இருந்து தன்னைப் பெற்ற பெருமாளின் பெயரையும் சேர்த்து "சேவுகபெருமாள் அய்யனார்' என்றழைக்கப்படுகிறார். அத்துடன் தனது தந்தை சிவனுக்கு உகந்த வில்வ இலையை பூஜிக்கும் பேறு பெற்றவராக இருக்கிறார். மகுடம், பட்டைகள் அணிந்து வீராசனத்தில் அமர்ந்து பூர்ண புஷ்கலா தேவியுடன் காட்சி தருகிறார். சிவன் சுயம்பு மூர்த்தியாக பூவைவல்லி அம்பாளுடன் அருள் பாலிக்கிறார். தந்தையும், மகனும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் அற்புத தலம் இது.

நாலும் அறிந்த நாயகன்




நாலும் தெரிந்தவர் என்றால் "அனைத்தும் அறிந்தவர்' என்று பொருள். வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வார்த்தையைச் சொல்வதுண்டு. ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற வேதங்களைக் கரைத்துக் குடித்தவரே நாலும் அறிந்தவர் என்ற பொருளில் சொல்லப்படுவதுண்டு. சபரிமலை ஐயப்பனும் "நாலும் அறிந்தவர்' ஆகிறார்.


ஏனெனில், அவர் நான்கு ஆசனங்களையும், நான்குவித முத்திரையையும் உள்ளடக்கி அருள்பாலிக்கிறார்.

ஐயப்பனின் 4 ஆசனங்கள்:

1.தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரையிலும், 2.கிருஹ நாரீய பீடாசனத்தில் யோகப் பிராணா முத்திரையிலும், 3.குத பாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையிலும், 4.அஷ்ட கோண சாஸ்தாசனத்தில் யோக பத்ராசனத்திலும் அருள் பாலிக்கறார். இப்படி நான்கு ஆசனத்தில் நான்குவித முத்திரையுடன் அருள்பாலிப்பது ஐயப்பன் மட்டும் தான். படத்தில் காட்டியுள்ளபடி,

ஐயப்பன் லிங்க வடிவில் (மேல்முக்கோணம்) ஆண் தன் மையாகவும், சங்கு வடிவில் (கீழ் முக்கோணம்) பெண் தன்மையாகவும் இரண்டறக் கலந்து உலக உயிர்கள் அனைத் தையும் காக்கும் காவலனாக விளங்குகிறார்.

சிவனது நெற்றிக்கண் பொறியிலிருந்து தோன்றியவர் முருகன். இவரது சின்னம் அறுகோண நட்சத்திரம். ஐயப்பனை முருகனின் இன்னொரு அம்சமாகவும் சொல்லலாம். அறுகோணத்தை பிரித்தால், மேல் முக்கோணம், கீழ் முக்கோணம் என இரண்டு முக்கோணம் வரும். இந்த இரண்டு முக்கோணமும் சேர்ந்த அமைப்பில் தான் ஐயப்பன் தவமிருக்கிறார்.

சிவன் ஞானத்தை வழங்குகிறார். விஷ்ணு மோட்சத்தை வழங்குகிறார். இவர்களின் அம்சமாக உள்ள அரிகரபுத்திரனோ இவை இரண்டையும் வழங்கும் வள்ளலாக விளங்குகிறார்.

ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத் தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள் பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.

ஐயப்பன் முழங்கால்களை கட்டியிருப்பது, சிவன் பார்வதி வந்தால் கூட எழுந்திருக்கக்கூடாது என்பதற்காக என கூறப்படுவது சரியானதாகாது. அவர், கால்களை தன் முதுகு தண்டெலும்பின் கீழ்பகுதியுடன் சேர்த்து கட்டி, ஆசனப்பகுதியும், இரண்டு பாதமும் தரையில் படும்படி குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார். மன அமைதி, தெளிந்த சிந்தனை, எதையும் சாதிக்கும் மன ஆற்றல், அஷ்டமாசித்தி ஆகியவற்றை இந்த ஆசனம் தரும்.

யோகநிலையில் காலை வைத்து, வயிற்றை அழுத்தி, மூச்சை அடக்கி, குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்த சக்தியை ஞான சக்தியாக மாற்றி, தனது திறந்த கண்கள் மூலம் பக்தர்களை பார்த்து அவர்களுக்கு ஆசி வழங்கும் நிலையில் இருப்பதால் தான், கலியுகத்திலும் தன்பக்கம் பக்தர்களை இவ்வளவு அதிகமாக ஈர்க்கமுடிகிறது.

ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம். ஐயப்பனின் இந்த ஆசனத்தை நாம் விரதமிருந்து சுத்தமான கண்களுடனும், மனதை அடக்கிய நிலையிலும் பார்த்தால், நமது உள்ளம் நிரந்தரமாக தூய்மையாகி விடும்.

மதுரையில் ஒரு சபரி




பரிமலையில் மகரவிளக்கு பூஜை கொண்டாடுவதைப்போல் மதுரை விளாச்சேரி ஐயப்பன் கோயிலிலும் விழா கொண்டாடப்படுகிறது. புதுசாரி விஷ்ணு நம்பூதிரி என்பவர் பார்த்த தேவபிரஸ்னத்தின்படி இக்கோயில் கட்டப்பட்டது. 1980ல் சிருங்கேரி சாரதாபீட மடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் அடிக்கல் நாட்டினார். இந்த கோயிலை கட்டி முடிக்க 6 ஆண்டு ஆனது.

கணபதி, ஐயப்பன், துர்க்கை, நாகர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்த கோயிலை கட்டி முடிக்க 6 ஆண்டு ஆனது. கணபதி, ஐயப்பன், துர்க்கை, நாகர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.1986 ஜூலை 13ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கல்லூர் மாதவன் நம்பூதிரி கும்பாபிஷேகத்தை நடத்தினார். துவஜஸ்தம்பம் (கொடிக்கம்பம்) ஜூன் 2001லும், நவக்கிரகங்கள் 2005லும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.


இங்கு தினமும் கணபதிஹோமம் நடக்கிறது. ஐயப்பனுக்கு 3 முறையும், துர்க்காதேவிக்கு 2 முறையும் நம்பூதிரிகளால் பூஜை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழியில் சுத்திகலசம், எழுநெல்லிப்பூ, ஸ்ரீபூதபலி, பணி, உத்சவபலி, பள்ளி வேட்டை, ஆறாட்டு, அன்னதானம் ஆகியவை சபரிமலையைப் போலவே நடத்தப்படுகிறது. தற்போது உள்ள கோயிலை சீரமைத்து, சுப்ரமணியர், சிவன், குருவாயூரப்பன் ஆகிய தெய்வங்களுக்கு 45 லட்சம் ரூபாய் செலவில் சன்னதிகள் கட்டப்பட்டு 2007 ஜூலை 15ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அடுத்த கட்டமாக 60 லட்சம் ரூபாய் செலவில் ராஜகோபுரம், தங்கும் விடுதி, தியான அறை, ஆடிட்டோரியம், கோயில் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி ஆகியவை கட்டப்பட உள்ளது. தினமும் அன்னதானம், மருத்துவ உதவி, சமஸ்கிருத, திருக்குறள் வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பணி தொடர்பாக, பொருளாளர், ஐயப்பா சேவா சங்கம், 175, விளாச்சேரி மெயின்ரோடு, முனியாண்டிபுரம், மதுரை 625 004 போன்: 0452-237 1870 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.



இருப்பிடம்:

மதுரை மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து(6கி.மீ) விளாச்சேரி செல்லும் பஸ்களில், சவுராஷ்டிரா கல்லூரி ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு செல்ல வேண்டும்.

ஐயப்பனின் சின்முத்திரை




பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார்.


அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.

ஆரம்பகால பூஜை

ஒரு காலத்தில் சபரிமலையில் தர்மசாஸ்தாவுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஒரே ஒரு நாள் மகரஜோதி அன்று மட்டும்தான் பூஜை நடந்தது. நிலக்கல் என்ற இடத்திலிருந்து பக்தர்கள் சென்று பூஜை நடத்தி வந்துள்ளனர்.

ஐயப்பன் தர்மசாஸ்தாவிடம் ஐக்கியமான பிறகுதான் மண்டல பூஜை, மகரவிளக்கு, மாத பூஜை என படிப்படியாக பூஜைகள் பெருகின. தர்மசாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு என்பதை இந்த தகவல் தெரிவிக்கிறது.

பாதுகாப்பாக வரும் கருடன்

ஐயப்பனின் வளர்ப்புத்தந்தை பந்தள மகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை பிரியும் காலம் வந்தது. மணிகண்டன் அவரிடம், ""நான் காட்டுக்குள் குடியிருக்க போகிறேன். என்னைக் காணவேண்டுமானால் நீங்கள் மலைகளைக் கடந்து வரவேண்டும். அது சாதாரண மலையல்ல. ஏற்ற இறக்கமும், கல்லும் முள்ளும் கொண்டதாக இருக்கும்'' என்றார்.


"அப்படியானால் நான் உன்னை எப்படி காணவருவேன்' என மகாராஜா கேட்டார். அதற்கு மணிகண்டன், "நீங்கள் வரும்போது உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டுவான். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம்' என அருள்பாலித்தார். அதன்படி பல இடங்களில் ஏற முடியாமல் ஆங்காங்கே அமர்ந்துவிடுவார். ஐயோ! அப்பா! என அவர் அடிக்கடி சொல்வார். இந்த சொற்களே திரிந்து "ஐயப்பன்' என ஆகிவிட்டதாக சொல்லப்படுவதுண்டு. இப்போதும் ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையிலிருந்து நகைகளை எடுத்துச் செல்லும்போது கருடன் நகைப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக வருவது விசேஷ அம்சமாகும்.


பம்பா தர்ப்பணம்

பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும் ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப் படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சபரி அன்னையை பார்ப்பதற்காக ராமன் இங்கு வந்தார். வரும் வழியில் பம்பையில் தர்ப்பணம் செய்தார்.

பந்தளம் அரண்மனை உருவான ஆண்டு

பாண்டிய நாட்டு மன்னர் ஒருவரை அவரதுமந்திரி சூழ்ச்சி செய்து கொல்ல முயன்றார். அவர் மதுரையிலிருந்து தப்பிச் சென்று கேரளத்தை அடைந்தார். பல ஆண்டுகளுக்கு பின் பந்தளத்தில் ஒரு இடம் வாங்கி, ஒரு அரண்மனையை அமைத்தார். கி.பி.903ல் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது. பின்னால் வந்த மற்ற மன்னர்கள், அரண்மனையை மட்டுமின்றி தேசத்தையும் விரிவுபடுத்தினர்.

பஸ்மக்குள தீர்த்தம்

ஐயப்பன் கோயிலில் புண்ணிய தீர்த்தமாக கருதப்படுவது பஸ்மக்குளம். ஒரு காலத்தில் இக்குளத்து நீர் தேங்காய் தண்ணீரை விட சுவையாக இருந்தது. இதில் பார்வை பட்டாலே பாவங்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. கூட்டம்

அதிகமான பிறகு, இதன் பெருமை தெரியாமல் பக்தர்கள் இதன் கரையை கழிவறையாக்கி விட்டனர். தற்போது இக்குளம் ஓரளவு சீரமைக்கப்படிருக்கிறது. பக்தர்கள் தயவு செய்து இக்குளத்தை பாழ்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இக்குளத்தை தூரெடுத்து, தலையில் தண்ணீர் எடுத்து தெளிக்கும் அளவுக்கு மட்டும் வழிகளை அடைத்து விட்டால், இதன் பழம்பெருமை பாதுகாக்கப்படும்.


ஐயப்பன் வரலாறு காட்டும் தத்துவம்


கடவுளை வணங்குவோருக்கு வேண்டியது கிடைக்கும். அப்படி கிடைத்ததை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் தண்டனையும் உடனே கிடைக்கும். சாகாவரம் பெற்றவர்களுக்குக்கூட ஏதோ ஒரு சக்தியால் அழிவு நிச்சயம். நிலையற்றது இந்த வாழ்க்கை. எனவே வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.

சபரிமலை ஐயப்பனின் வரலாற்றில் முதலில் ஆடம்பரமான அரண்மனை வாழ்வு.. இது நிலைத்ததா என்றால் இல்லை. தெய்வப்பிறவியான ஐயப்பனுக்கு கூட இந்த வாழ்வு நிலைக்கவில்லை என்றால் சாதாரண மனிதர்களான நமக்கு மட்டும் நிலைத்துவிடுமா என்ன... எனவேதான் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல எளிமையான ஏற்றத்தாழ்வற்ற சீருடை அணிந்து, ஒன்றுபோல இருமுடி கட்டி, ஒற்றுமையாய் கூட்டமாய் போய் அவனை வணங்கிவிட்டு வருகிறோம்.


தியானத்தில் கவனம்

ஐயப்பன் சபரிமலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார். சபரிமலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக் காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.

சபரிமலை பிறந்த கதை




கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சேர நாட்டின் ஒரு பகுதி சிதறுண்டு செழுமை குன்றியிருந்தது. உள்நாட்டு கலவரக்காரர்கள் பெருகி நலிந்திருந்தது. கரிமலையில் வசித்த உதயன் என்ற கொள்ளையன் சபரிமலைக்கோயிலை தகர்த்து, பூஜாரிகளை கொன்று, ஐம்பொன் ஐயப்பனை களவாடி சென்றான். எனவே, நாட்டை காக்கும் வீரனாக சாஸ்தா அவதாரம் எடுத்தார்.


உதயன் திருவிதாங்கூர் அரசின் அரண்மனை செல்வங்களை கொள்ளையடித்துவிட்டு இளவரசியை கடத்த முயற்சி செய்தான். ஜயந்தன் என்பவன் அவளை காப்பாற்றி மணந்து கொண்டான். அவர்களுக்கு சாஸ்தா மகனாகப் பிறந்தார். "ஐயப்பன்' என்று அவனுக்கு பெயர் சூட்டினர். ஜயந்தன் ஐயப்பனுக்கு யுத்த பயிற்சிகளுடன் அனைத்து கலைகளையும் கற்றுத் தந்தான்.

பந்தள அரண்மனையில் பணியில் சேர்ந்தார் ஐயப்பன். அவனது அறிவும் வீரமும் மன்னனை கவர்ந்தது. எனவே தன் அரசின் முதல் தளபதியாகவும், பின் பந்தள மன்னனாக்கி தன் வாரிசாகவும் உயர்த்தினான். இதை கடுத்தை, மல்லன் என்ற தளபதிகள் எதிர்த்தனர். இவர்களை வென்று அவர்களுக்கு பதவி கொடுத்து தன்னுடனேயே வைத்து கொண்டார் ஐயப்பன். வாபர் என்ற கடல் கொள்ளையனை எதிர்த்து போர் செய்து, தன் நண்பனாக்கி கொண்டார்.

யோகம் மற்றும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை கற்ற ஐயப்பன் மாபெரும் சக்தி பெற்றவராக திகழ்ந்தார். கொச்சியின் தளபதி சிறமூரப்பன் என்பவனை தன் வசப்படுத்தினார். அவனது மகள் "சிறுகூத்தி' என்பவள் ஐயப்பனை மணக்க விருப்பம் கொண்டாள். இதை விரும்பாத ஐயப்பன் அவள் மனதை மாற்றி ஆன்மநெறியில் திருப்பி விட்டார்.


பாண்டியநாட்டில் இருந்து சேரநாட்டில் புகுந்து கொள்ளையடித்தவர்களை பிடிக்க திட்டமிட்டார். இதற்காக, பாண்டிய மன்னர்களிடம் தான் யார் என்பதை காட்டி கொள்ளாமல், சேவனாக பணி ஏற்றார். தன் வீரத்தாலும், அறிவாலும், நேர்மையாலும் பாண்டிய அரசனிடம் நற்பெயர் பெற்றார். ஆனால் பாண்டிய நாட்டு அரசி, இவன் ஒற்றனாக இருப்பான் என தவறாக கருதி, அதை அரசனிடம் கூறாமல், தனக்கு தலைவலி என்றும், அதற்கு புலிப்பால் வேண்டும் என கூறி ஐயப்பனை காட்டிற்கு அனுப்பினாள். தெய்வப்பிறவியான ஐயப்பன் இந்திராதி தேவர்களை புலிகளாக்கி அரண்மனைக்கு அழைத்து வந்தார். அத்துடன் தான் யார் என்பதை மன்னனிடம் கூறி, பாண்டிய நாட்டு சிற்றரசர்களாலோ, கொள்ளையர்களாலோ தன் நாட்டிற்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என உதவியும் கேட்டார். பாண்டிய மன்னனும் மகிழ்ந்து எப்போதும் உதவி செய்ய காத்திருக்கிறேன் என கூறி அனுப்பி வைத்தான்.

பந்தளம் வந்த ஐயப்பன், கரிமலைப்பகுதியில் மறைந்திருந்து தொல்லை கொடுத்து உதயனை ஒடுக்க திட்டமிட்டார்.


தன் படைகளை மூன்று பிரிவுகளாக்கி, அதன் தலைவர்களாக கொச்சுக்கடுத்தை, வாவர், மல்லன் ஆகியோர்களை நியமித்து கொள்ளையர்களை வென்று வர அனுப்பி வைத்தார். அதன்படி அவர்கள் மூவரும் எரிமேலியிலிருந்து ஒன்று கூடி, விரதமிருந்து, களைப்பு தெரியாமல் இருக்க ஆடியும் பாடியும் பெருந்தோட்டில் தங்கி, அழுதாநதியில் குளித்து காவல் தெய்வமான சாஸ்தாவை நினைத்து பூஜை செய்ய வேண்டும். பின் கரிமலை அடைந்து அங்கிருந்து இஞ்சிப்பாறை கோட்டை மற்றும் கொள்ளையர்களின் மறைவிட கோட்டைகளை அழித்து, எதிரிகளை வென்று பெரியானை வட்டம், சிறியானை வட்டம் கடந்து, பம்பை நதிக்கரையில் இறந்த வீரர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும். அந்த நதியை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதன்பின் நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம் கடந்து, சரங்குத்தியில் மீதி ஆயுதங்களை சேர்க்க வேண்டும். மீண்டும் ஆயுதம் எடுக்கும் நிலை வரக்கூடாது என வணங்கி, பதினெட்டு தத்துவப்படிகளை கடந்து என்னை காண வர வேண்டும் என கூறினார். இதனை அறிந்த பாண்டிய மன்னன் சாஸ்தாவே தன்னிடம் ஐயப்பன் என்ற பெயரில் சேகவம் புரிந்ததை அறிந்து மகிழ்ந்து அவருக்கு சபரிமலையில் கோயில் கட்டினான்.



வன சக்கரவர்த்தி

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்ற தலம் அச்சன்கோவில். சிறுவனாக குளத்துப்புழையில் வளர்ந்த சாஸ்தா இளைஞர் பருவத்தில் இத்தலத்தில் வசித்ததாக வரலாறு. இங்கு சாஸ்தா வனத்தை காக்கும் அரசராக பூரணா, புஷ்கலை தேவியருடன் இருக்கிறார். பரசுராமர் கட்டிய இக்கோயிலில் அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் அருளுவது விசேஷம்.

இங்கு மார்கழி மாதம் முதல் நாளில் இருந்து பத்து நாள் திருவிழா சிறப்பாக நடக்கிறது. பிற ஐயப்பன் கோயில்களில் இல்லாத சிறப்பாக இத்திருவிழாவின் போது தேரோட்டம் நடத்தப்படுகிறது. விஷப்பூச்சிகளால் கடிபட்டவர்கள் மூலவரின் மேனியில் பூசியிருக்கும் சந்தனத்தை தேய்த்துக்கொண்டால் விஷம் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.


நாகராஜா, நாகயட்சி

ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் நீராட அமைக்கப்பட்டுள்ள பஸ்மக்குளத்திற்கு வடக்கே நாகராஜாவையும், நாகயட்சியையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். இங்கே சர்ப்ப பாட்டு பாடப்படும். குழந்தை இல்லாத பக்தர்கள், சர்ப்ப பாட்டு வழிபாட்டில் கலந்து கொண்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. நாகயட்சிக்கு பட்டுப்புடவை, பூ, குங்குமம் ஆகியவற்றை வழிபாட்டு பொருட்களாக கொடுக்கலாம். நாகராஜாவிற்கு மஞ்சள் பொடி, கற்பூரம் வழங்கலாம்.

மாளிகை புறத்தம்மைக்கும் திருவாபரணம்

சபரிமலையில் ஐயப்பனுக்கு மட்டுமின்றி மாளிகைப்புறத்தம்மனுக்கும் ஆபரணங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதையும் தனியாக ஒரு பெட்டியில் வைத்து கொண்டு வருகிறார்கள். ஐயப்பனுக்கு திருவாபரணம் சார்த்தப்பட்டு பூஜை நடக்கும் போது மாளிகை புறத்தம்மனுக்கும் பூஜை நடத்தப்படும். மகர ஜோதி முடிந்த பிறகும் ஆறு நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த ஆறு நாட்களிலும் நடக்கும் விழாவின் நாயகி மாளிகைபுறத்தம்மன் தான். ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.

பரிசோதகர்


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் வாபர் எனும் இஸ்லாமியர் ஒருவர் வசித்து வந்தார். கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களிடம் இருந்து வழிப்பறி செய்து அதனை ஏழைகளுக்கு கொடுத்தார். அப்பகுதியை ஆண்ட அரசரால் அவரை பிடிக்கமுடியாததால், வாபரின் செயலுக்கு முடிவு கட்டும்படி ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார். பாலகனாக இருந்த ஐயப்பனின் பேச்சை வாபர் கேட்பதாக இல்லை. எனவே அவரை வதம் செய்ய சென்றார் ஐயப்பன். அவரிடம் வாபர், "என்னைக் கொன்றால் என்னை நம்பியிருக்கும் மக்களுக்கு யார் ஆதரவு?' என்றார். அவர்களை தான் பார்த்துக் கொள்வதாக கூறிய ஐயப்பன், அவருக்கு பரிசோதிக்கும் பணியையும் கொடுத்தார்.

சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம். இங்கு விபூதியை பிரசாதமாக தருவது சிறப்பு.


மனைவியை பிரிந்த சாஸ்தா

ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது மாம்பழத்துறை தலம். புஷ்கலையை மணம் முடித்த சாஸ்தா தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படி செய்தார். இங்கு புஷ்கலை தேவி, "பகவதி' அம்மனாக "பத்திரகாளி' வடிவத்தில் அருளுகிறாள்.

பம்பா தர்ப்பணம்

பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும் ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சபரி அன்னையை பார்ப்பதற்காக ராமன் இங்கு வந்தார். வரும் வழியில் பம்பையில் தர்ப்பணம் செய்தார் என புராணங்கள் கூறுகின்றன.

Monday, December 20, 2010

சாவித்திரியின் புத்திசாலித்தனம்!



சத்தியவானை சாவித்திரிஎமனிடமிருந்து மீட்டாள் என்பது வரை நிமக்கு தெறுயும். ஆனால் எப்படி மீட்டாள் என்பது தெறுய வேண்டுமல்லவா...அவளிடம் எமன் சொன்னான். அம்மா! உனக்கு உன் கணவனின் உயிரைத் தவிர எதை வேண்டுமானாலும் தருவேன். கேட்டுப்பெற்றுக்கொள், என்றான். உடனே சாவித்திரிபுத்திசாலித்தனமான பதிலை சொன்னாள். அவளது கணவனின் உயிர் திரும்ப கிடைத்தது. சாவித்திரிஅப்படி என்ன சொன்னாள்? என்பதை அறியத்தானே ஆவலாக இருக்கிறது! இதை தெறுந்து கொள்ள வேண்டுமானால் அப்படியே கதைக்குள் செல்லுங்கள்...

மந்திரதேசம்...வளம் மிக்க ஒரு நாடு. மக்களெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் எல்லோர் மனதிலும் ஒரு குறை. நாட்டின் எதிர்காலம் யார் கையில் இருக்கப்போகிறது என்பதே அந்த கவலை. மன்னர் அஸ்வபதிக்கு வாறுசுகளே இல்லை. அவர் சரஸ்வதி தேவியிடம் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என கேட்டார். மன்னர் கல்விக்கு அதிபதியாகிய சரஸ்வதி தேவியிடம் குழந்தை வரம் கேட்டதில் ஏதோ உள்÷நாக்கம் இருக்க வேண்டும் என்று மக்கள் எல்லாம் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். குழந்தை வரம் வேண்டுமானால் பார்வதி தேவியிடம்தானே கேட்டிருக்க வேண்டும். ஏன் சரஸ்வதியிடம் குழந்தை வரம் கேட்டார் என்று புருவத்தை உயர்த்தி நன்றார்கள். ஆனால், சாவித்திரி பிறந்த பிறகு திருமணமாகி கணவனை இழந்த நலையில் அவனது உயிரை திரும்ப பெற வேண்டும். இது மாபெரும் சாதனை படைக்கும் காறுயமல்லவா! அதற்கு தகுந்த புத்திசாலித்தனமுள்ள குழந்தை தனக்கு வேண்டுமே! என்று மன்னறுன் உள் மனதில் பட்டதோ என்னவோ! ஒரு கலக்கமான மனநலையில் சரஸ்வதியிடம் அவர் வரம் கேட்டார். அஸ்வபதியின் மனதார்ந்த பிரார்த்தனையில் மகிழ்ச்சி கொண்ட சரஸ்வதி அவருக்கு குழந்தை பாக்கியத்தை அளித்தாள். அஸ்வபதியின் மனைவி மாளவி சாவித்திரியை பெற்றெடுத்தாள். இளமைப் பருவம் முதலே சாவித்திரிமிக புத்திசாலியாக திகழ்ந்தாள். அவள் நாவிலிருந்து வந்த வார்த்தைகள் பெற்றோருக்கு தேனாய் இனித்தன. எத்தகையவரையும் பேச்சுத்திறனால் வசீகறுக்கும் ஆற்றல் அவள் மனதில் இருந்தது.

பருவம் அடைந்த மகளுக்கு தகுந்த மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே என்ற கவலை அஸ்வபதிக்கு எழுந்தது. தான் இன்னொருவனுக்கு மனைவியாகி விட்டால் நாட்டை ஆளப்போவது யார் என்ற கவலை சாவித்திரிக்கு....தனக்கு ஒரு தம்பி இருந்தால் அவன் நாட்டை ஆண்டிருப்பான். கடவுளே! எனக்கு ஒரு தம்பியைக் கொடு! என வேண்டினாள் அவள். ஆனால் அவ்வளவு இலகுவான காறுயமா அது.....அவளது வேண்டுதல் பலிக்கவில்லை. இந்த ÷நிரத்தில் தான் சால்வ நாட்டின் அரசன் சத்தியவானை சாவித்திரிஒரு முறை சந்தித்தாள்.அவன் மீது காதல்வயப்பட்டாள். அவனே தனக்கு மணாளன் என முடிவெடுத்து விட்டாள். இருப்பினும் காதலை பற்றி தந்தையிடம் சொல்ல தயக்கம். மன்னன் இதை அறியாமல் பல தேசத்து இளவரசர்களையும் பற்றி விசாறுக்க ஆரம்பித்தான். இந்த ÷நிரத்தில் தான் கலக முனிவர் நாரதர் வந்தார். அஸ்வபதியிடம் மெதுவாக போட்டுக் கொடுத்தார். உன் மகள் யாரையோ விரும்புகிறாள் போல் முகத்தில் தெறுகிறதே! அதைப் பற்றி விசாறுத்தாயா? என்றார். தந்தை கண்டிப்பான பார்வையை மகள் மீது வீசினார். மகள் உண்மையைச் சொல்லி விட்டாள். சத்தியவானை விரும்புவதாக சொன்னாள். அதிர்ச்சி அடைந்தார் நாரதர். இந்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளையே கிடைக்கவில்லையா? அந்த சத்தியவான் தன் எதிறுகளிடம் தோற்று நாட்டை இழந்து கண் தெறுயாத தன் தந்தையுடன் காட்டில் அல்லவா வாழ்கிறான்? அட...நாடு போனால் போகட்டும். அவன் இன்னும் உயிரோடு இருக்கப் போவதே இன்னும் ஒரு வருஷம் தான். அவன் விதி முடியப் போகிறது. அதன் பிறகு இந்த குழந்தையின் நலை என்னவாகும்? என்ற அதிர்ச்சி தகவலை சொன்னார்.

அஸ்வபதி அரண்டு விட்டார். சாவித்திரிக்கு மனதில் கலக்கம் என்றாலும் வெளியில் காட்டவில்லை. தந்தையிடம் உறுதியாகச் சொல்லி விட்டாள். மனதில் அவரை நனைத்த பிறகு வேறு ஒருவருக்கு இடமில்லை. ஒரு ஆண்டு வாழ்ந்தாலும் அவரோடு வாழ்ந்து விட்டு சாகிறேன், என்றாள். அடம் பிடித்த மகளின் கண்ணீர் அஸ்வபதியின் öநிஞ்சைக் கரைத்து விட்டது. சால்வ தேசத்து காட்டில் நாடிழந்து தவித்துக் கொண்டிருந்த சத்தியவானை தேடிச் சென்றார். அவனது தந்தையை சந்தித்தார். கண்ணிழந்த அந்த மாஜி மகாராஜா, தன் மகனின் நலை தெறுந்தும் பெண் கொடுக்க முன்வந்த அஸ்வபதியின் அன்பை நனைத்து öநிகிழ்ந்து போனார். என் மகனுக்கு திருமணமே வேண்டாம் என நனைக்கிறேன். உயிறுழக்க போகும் அவனுக்கு உங்கள் செல்வ மகளை கொடுத்து அவளை அமங்கலியாக்க வேண்டும்? இதைத் தாங்கும் சக்தி எனக்கே இல்லாத போது, உங்கள் மனம் என்ன பாடுபடும்? தெறுந்தே கிணற்றில் விழுவது என்பது பாவமில்லையா? என்றார். மகளின் மனதை மாற்றும் சக்தி தனக்கு இல்லை என்ற அஸ்வபதி, திருமணத்துக்கு நாள் குறித்தார். கற்பரசி சாவித்திரியை கைபிடித்தான் சத்தியவான். தன் நாட்டை விட்டு கண் தெறுயாத மாமனாருக்கு சேவை செய்யவும், ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்ற தத்துவத்தை மெய்யாக்கும் வகையிலும், காட்டிற்கே வந்து விட்டாள் சாவித்திரி. ஒரு வருடம் கழிந்தும் விட்டது. எமன் பாசக்கயிறோடு வந்து விட்டான். யாருக்காகவும், எதற்காகவும் காத்திராதவன் அவன். விதி முடிந்து விட்டால் ஏதாவது ஒரு ரூபத்தில் வருவான். பாவிகள் என்றால் வேறு ரூபத்தில் வருவான். இவன் கற்புக்கரசியின் கணவன் அல்லவா? ÷நிறுலேயே வந்து விட்டான். இந்த ÷நிரத்தில் ஏதோ காரணத்தால் மயங்கிக் கிடந்தான் சத்தியவான். சற்று ÷நிரத்தில் உயிர் பிறுந்து விட்டது. சாவித்திரிதுயரக்கடலில் இருந்தாலும் நதானத்தை இழக்கவில்லை. எமதர்மராஜாவை அழைத்தாள்.

பெறுயவரே! தாங்கள் என் கணவறுன் உயிரைக் கொண்டு செல்லும் காரணம் என்ன? என்றாள். எமதர்மராஜன் சிறுத்தவனாய், விதி முடிந்தவர்களை கூட்டிச் செல்வதுதானே என் வேலை. நீ பத்தினிப் பெண். எனவே உனக்கு தறுசனம் தர வந்தேன், என்றான். தேவர்களின் தறுசனம் கிடைத்தால் நில்லது நிடக்கும் என்று தானே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நீர் மகா பெறுயவர். தேவ மைந்தன். உங்கள் தறுசனம் கிடைத்தும் நான் அமங்கலியாகிறேனே! அப்படியானால் வேதங்கள் சொல்வது பொய்யா? என பதில் சொல்ல முடியாத கேள்வியை தூக்கி போட்டாள் சாவித்திரி. எமன் கலங்கிப் போனான். அவனால் பதில் சொல்ல முடியவில்லை தாயே! நீ சொல்வது சரிதான். இருந்தாலும் விதி முடிந்தவர்களை விட்டுச் செல்லும் அதிகாரம் எனக்கு இல்லை. நீ உன் கணவனின் உயிரைத் தவிர எதைக் கேட்டாலும் தருகிறேன், என்றான். இங்குதான் சரஸ்வதி கடாட்சத்தால் பிறந்த அந்த புத்திசாலி பெண்ணின் அறிவுத்திறன் வெளிப்பட்டது. தர்மராஜவே! நீங்கள் சொன்னதைப் போலவே கேட்கிறேன். என் மாமனாருக்கு கண் பார்வை வேண்டும், என்றாள். எமன் அந்த வரத்தை கொடுத்து விட்டான். அடுத்து என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும், என்றாள். ஒன்றென்ன! நூறு ஆண் குழந்தைகள் வேண்டுமானாலும் தருகிறேன், என்றான். கடைசியாக அணுகுண்டை வீசினாள் சாவித்திரி. நான் குழந்தை குட்டிகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், என்றாள். அவ்வளவு தான். அரண்டு போனான் எமன். சொன்ன வார்த்தை தவறாமல் வரம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு. கணவனின் உயிர் வேண்டும் என கேட்காமல் தனக்கு குழந்தை வேண்டுமென கேட்கிறாள். கணவன் இல்லாமல் குழந்தை பிறப்பது எப்படி சாத்தியம்? வேறு வழியே இல்லாமல் உயிரை திருப்பித் தந்தான் எமன். புத்தி சாதுர்யம் உள்ளவர்கள் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள். இதற்கு சாவித்திரியின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

கும்பகர்ணனின் தூக்கம்!



சிலர் இரவும், பகலும் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். சாப்பிடும் நேரத்திற்கு எழுந்திருப்பார்கள். சாப்பாட்டை முடித்து விட்டு தூங்க ஆரம்பித்து விடுவார்கள். சிலபேர் அலுவலகங்களில் தூங்குவார்கள். சிலர் கடையில் தூங்குவார்கள். இப்படி தூங்குபவர்களை, என்னப்பா! கும்பகர்ணன் மாதிரி தூங்குறியே, என்று கிண்டல் செய்வதுண்டு. கும்பகர்ணனுக்கு இந்த தூக்கம் வர காரணமானவர் யார் தெரியுமா? நம்ம நாரதர் தான். நாரதர் குழப்பவாதி. ஆனால் நல்லது நடக்கவே குழப்புவார். எல்லாரையும் தெய்வங்கள் சோதிக்கும் என்றால், தெய்வங்களை இவர் சோதிப்பார். அப்பேர்ப்பட்ட மகாத்மா அவர். ராவணன் பத்து தலைகளை உடையவன். மிகப்பெரிய சிவபக்தன். ஆனால் குணம் தான் ராட்சஷ குணம். அவன் மனதைக் கெடுத்தது அவனது சகோதரி சூர்ப்பனகை. ராமன் மீது ஆசைப்பட்ட அவள், அவனைத் திருமணம் செய்ய எண்ணினாள். ஏகபத்தினி விரதனான ராமன் அவளை விரட்டி அடித்து விட்டான். லட்சுமணன் அவளது மூக்கை அறுத்து அவமானப்படுத்தி விட்டான். இந்த அவமானத்தை சூர்ப்பனகையால் தாங்க முடியவில்லை. தன் அண்ணன் கும்பகர்ணனிடம் வந்து அழுதாள். கும்பகர்ணன் கடும் கோபம் கொண்டு, அண்ணன் ராவணனிடம் சென்று, ராம, லட்சுமணர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றான். சூர்ப்பனகை இதற்கு தூபம் போட்டாள். தன்னைப் போலவே ராமனின் மனைவியும் அவமானப்பட வேண்டும். மனைவி போனதும் ராமன் மனம் மாறி ஒருவேளை தன்னைத் திருமணம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அவள் எண்ணினாள். சீதையின் அழகை ராவணனிடம் வர்ணித்து, அவள் உன் அந்தப்புரத்தில் இருக்க வேண்டியவள் என ஆசையைத் தூண்டினாள். ராவணனும் சீதையைக் கடத்தி வந்து விட்டான். நிலைமை இப்படி இருக்க கும்பகர்ணனின் மனதில் ஒரு ஆசை. நாம் பிரம்மாவை நினைத்து தவமிருந்து, அண்ணனைப் போலவே சாகாவரம் பெற வேண்டும் என விரும்பினான். அந்த ஆசையுடன் அவன் காட்டை நோக்கி புறப்பட்டான். செல்லும் வழியில் நாரதர் எதிர்ப்பட்டார். கும்பகர்ணா! எங்கே கிளம்பி விட்டாய்? எங்கோ அவசரமாக செல்வது போல தெரிகிறதே? என்று கேட்டார். கும்பகர்ணன்

நாரதரை வணங்கினான். தவத்தில் சிறந்த நாரத முனிவரே! நான் பிரம்மனிடம், சாகாவரம் பெறப் போகிறேன். எங்கள் வம்சம் தழைத்தோங்க நான் இந்த வரத்தை பெறுவேன், என்றான். நாரதருக்கு பகீரென இருந்தது. ஐயையோ! இது என்ன சோதனை. ஏற்கனவே இவனது அண்ணன் ராவணன் மிகப் பெரிய பாவி. அவன் செய்யும் கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. சீதாவாய் மானிட அவதாரம் எடுத்துள்ள லட்சுமிதேவியே அவன் கைவசம் இருக்கிறாள். அவன் மானிடர்களைத் தவிர, மற்ற யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றுள்ளான். மனிதர்களை இழிந்த ஜென்மமாகக் கருதி, மனிதர்களைத் தவிர மற்ற தேவர்களால், ஏன்...கடவுளால் கூட அழிக்க முடியாத வரம் பெற்றுள்ளான். இதற்காகவே பகவான் ராமனாக மானிட அவதாரம் எடுத்து சீதையை இழந்து நிற்கிறார். இப்போது இவனும் சாகாவரம் பெற்றால் நிலைமை என்னாகும்? தேவர்களும், மக்களும் இன்னுமல்லவா கொடுமைப்படுத்தப்படுவார்கள் என யோசித்தார். என்ன நாரதரே! யோசிக்கிறீர். நீர் கலகம் விளைவிப்பதில் பெரிய கில்லாடி ஆயிற்றே! என்னைக் கவிழ்க்க ஏதாவது ஆலோசிக்கிறீரா? என சிரித்துக் கொண்டே கேட்டான். சிவ சிவ! உனக்கு நன்மை செய்வது பற்றி யோசித்தால், நீ என்னையே சந்தேகப்படுகிறாயே! நவக்கிரகங்கள் எல்லாம் உன் சகோதரனுக்கு படிக்கட்டுகளாக குப்புற படுத்துக் கிடந்ததை, நேராக படுக்க வைத்து அவற்றின் மேல் ஏறிச்சென்றால் தான் மதிப்பு என்று, நான் உன் அண்ணன் ராவணனிடம் கூறவில்லையா? அப்படி உன் குலத்தின் பெருமையை பேணிக்காக்கும் நான், மாபெரும் வீரனான உன்னிடம் கலகம் செய்வேனா? அப்படி செய்தால் என்னை நீ நசுக்கி விட மாட்டாயா? என்று நல்லவர் போல் நடித்தார். கும்பகர்ணன் நாரதரின் நடிப்பை நம்பி விட்டான். பொதுவாக ஒருவரைப் பற்றி உயர்வாக பேசினால் போதும். அப்படியே குளிர்ந்து எதிரிகள் சொல்வதைக் கூட நம்பி விடுவார்கள்.

உலகத்தின் இந்த நியதிக்கு கும்பகர்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன!. நடிப்பை நம்பி விட்ட கும்பகர்ணனிடம் நாரதர், கும்பகர்ணா! உனக்கு வரம் கொடுக்க நிச்சயம் பிரம்மா வருவார். அவரிடம் மறக்காமல் நித்யத்துவம் வேண்டும் எனக் கேள். நித்ராத்துவம் வேண்டும் எனக் கேட்டு விடாதே, என்றார். நித்யத்துவம் என்றால் இறப்பற்ற வாழ்வு. நித்ராத்துவம் என்றால் எப்போதும் உறங்கிக் கொண்டிருப்பது. மீண்டும் மீண்டும் நாரதர், கும்பகர்ணா மறந்து விடாதே! அந்த பிரம்மன் பொல்லாதவர். நீ நித்யத்துவம் என்று கேட்பதற்கு பதில் நித்ராத்துவம் எனக் கேட்டு விட்டால் அதைக் கொடுத்து விட்டு, உடனே மறைந்து விடுவார். நித்ராத்துவம்...நித்ராத்துவம்...நித்ராத்துவம். இந்த வார்த்தையை மறந்து விடு, என்ன புரிகிறதா? என்றார். கும்பகர்ணன் நாரதருக்கு நன்றி சொன்னான். நல்ல வேளையாக வார்த்தை உச்சரிப்பை தெளிவாகக் கூறினீர். இல்லாவிட்டால் நான் மாற்றிக் கேட்டு மாட்டிக் கொண்டு விடுவேன், என்றவன் வெகுதூரம் நடந்தான். செல்லும் வழியில் நாரதர் சொன்ன அந்த வார்த்தையை நினைவுபடுத்தி பார்த்தான். நித்யத்துவமா... நித்ராத்துவமா... .நாரதர் அழுத்தம் திருத்தமாக சொன்னாரே! நித்ராத்துவம், என்றபடியே தவத்தில் ஆழ்ந்து விட்டான். சந்தேகத்துடன் எந்தச் செயலையும் தொடங்குவது தவறு. சந்தேகத்துடன் ஒரு மாணவன் தேர்வு எழுதினால், மொத்த பதிலும் தப்பாகி, மார்க் கிடைக்காமல் போய்விடும். எதிலும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதையே கும்பகர்ணனின் செயல் உணர்த்துகிறது. அவன் நினைத்திருந்தால் நாரதரிடம் திரும்பவும் தன் சந்தேகத்தை தீர்த்து விட்டு, தவத்தை தொடங்கி இருக்கலாம். சந்தேகத்துடன் தவத்தை தொடங்கி விட்டான். அவனது தவத்தை ஏற்றுக் கொண்ட பிரம்மா அவன் முன் தோன்றினார். அன்பு பக்தா கும்பகர்ணா! என்ன வரம் வேண்டும் கேள், என்றார். எனக்கு நித்ராத்துவம் வேண்டும், என்றான். அப்படியே தருகிறேன், என்றவர் நிற்காமல் மறைந்து விட்டார். அவ்வளவு தான். கும்பகர்ணனுக்கு அங்கேயே தூக்கம் வந்து விட்டது. நடந்ததை அறியாத ராவணன் கும்பகர்ணனைத் தேடி காட்டுக்குள் சென்றான். அங்கே அன்புத் தம்பி குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். அவனை எழுப்பினான். உஹூம்....எழவில்லை. அரண்மனையிலிருந்து ஆட்களை வரவழைத்து, முரசறைந்து எழுப்பினான். பின்பு மாற்றி சொல்லி விட்டதை அறிந்து, பிரம்மனை மீண்டும் வேண்டி, ஆறுமாதம் தூக்கம்...ஆறுமாதம் விழிப்பு என்ற வரத்தை பெற்றான் கும்பகர்ணன்.

பெண்ணைப் பெற்றவர்களே பெருமாளை தரிசியுங்கள்!


பெண்ணைப் பெற்று திருமணம் செய்து கொடுக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர் நாகப்பட்டினம் சவுந்தரராஜப் பெருமாளை தரிசித்து பலனடையலாம்.

தல வரலாறு: உத்தானமகாபாத மகாராஜாவின் மகன் துருவன். பெருமாள் பக்தரான இவர், சிற்றன்னையால் ராஜ்யம் தரப்படாமல் அவமானப்படுத்தப்பட்டார். இதனால், ராஜ்யப் பதவியை விட உயர்ந்த பதவி தனக்கு வேண்டுமென கோரி, சவுந்தர்ய ஆரண்யம் என்னும் காட்டில் பெருமாளை வேண்டி கடும் தவம் செய்தார். சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் கருடாழ்வார் மீது, பேரழகு பொருந்தியவராக பெருமாள் காட்சி அளித்தார். அவர் துருவன் வேண்டிய வரத்தை அளித்து வானமண்டலத்தில் துருவ நட்சத்திரம் ஆக்கினார். அழகாகத் தோன்றிய பெருமாளுக்கு "சவுந்தரராஜப் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது.

பெருமாளின் திவ்யதரிசனம் கண்ட துருவன், ""என் வாழ்க்கையில் எப்போதும் உன்னுடைய ஞாபகம், உன்னுடைய சிந்தனையாக இருக்க வரம் வழங்க வேண்டும், இந்த இடத்தில் எனக்கு அனுக்கிரஹம் செய்தது போல், உன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களுக்கும் இதே இடத்தில் தங்கி அனுக்கிரஹகம் செய்ய வேண்டும்', என்று வேண்டினார். பெருமாளும் அங்கேயே சிலை வடிவில் தங்கினார். பிற்காலத்தில் மன்னர்கள் பெருமாளுக்கு கோயில் எழுப்பினர். புராணச் சிறப்பும், பாடற்சிறப்பும் பெற்ற இந்தக் கோயிலில் நாகர், சோழர், பல்லவர்களைத் தொடர்ந்து தஞ்சையை ஆண்ட நாயக்க மராட்டிய மன்னர்களும் திருப்பணி செய்து விரிவுபடுத்தினர்.

கன்னிகா தான பிரார்த்தனை: சாலீசுக மகாராஜன் என்பவனுக்கு, நாக கன்னிகை என்னும் பெண்ணை, பெருமாளே தந்தையாக இருந்து கன்னிகாதானம் செய்து கொடுத்த தலம் இது. இதனால் பெண்ணைப் பெற்று திருமணம் செய்து கொடுக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர், இந்தப் பெருமாளையும், சவுந்தரவல்லி தாயாரையும் பிரார்த்தித்து பலனடையலாம். தங்கள் பெண்களை கோயிலுக்கு அழைத்து சென்று பால், தயிர், நெய் அபிஷேகம் செய்து மனமுருகி வணங்கி பிரார்த்தித்தால் பலன் கிடைக்கிறது.

நாகதோஷம் நீங்கும் தலம்: "ஸாரம்' என்றால் பாம்பு. பாம்பாகிய நாகராஜனால் உருவாக்கப்பட்டது இந்தக் கோயில் என்கிறது ஒரு புராணத்தகவல். இங்குள்ள தீர்த்தம் "ஸார புஷ்கரணி' எனப்படுகிறது. ராகு, கேது ஆகிய நாகதோஷம் உள்ளவர்கள், ஸொர தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டால், தோஷ நிவர்த்தி கிடைப்பதாக நம்பிக்கையுள்ளது. இங்குள்ள பெருமாள் விஷ்ணு சகஸ்ரநாம மாலையை அணிந்திருக்கிறார். எனவே ஒரு முறை விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் பத்துமடங்கு பலன் கிடைக்கிறது. மேலும், மார்பில் மகாலட்சுமியையும் தாங்கியுள்ளார்.

கோயில் சிறப்பு: திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலம். 108 திவ்யதேசங்களில் 19வது தலம். மூலவர் சவுந்தரராஜப் பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். அருகில் சவுந்தரவல்லி தாயார், ஸ்ரீதேவி, பூமிதேவி, சந்தான கண்ணன் உள்ளனர். ரங்கநாதர் சயனநிலையிலும், லட்சுமி நரசிம்மர் அனுக்கிரக நிலையிலும் சேவை சாதிக்கின்றனர். "என் திருவடியை பற்றினால் அனைத்து காரியமும் பூர்த்தியாகும்' என்ற பொருளுடன் கீதை உபதேச மந்திரமான "மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்று வாசகம் பக்தர்களின் பார்வையில் தெரியும் வகையில் பெருமாளின் வலது கையில் எழுதப்பட்டுள்ளது. ஆதிசேஷன் பெருமாளைக் குறித்து தவமிருந்து, பெருமாளின் சயனமாகும் தகுதியைப் பெற்றார். அவர் பெருமாளை ஆராதித்ததால், "நாகன் பட்டினம்' என்றாகி காலப்போக்கில் நாகப்பட்டினமாகியது. துவாரபாலகர்களாக காட்சிதரும் ஜெயன், விஜயன் சுதை சிற்பங்கள் மிக அழகானவை.

திருவிழா: ஐப்பசியில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் விழா, வைகுண்ட ஏகாதசி விழா, பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆனி உத்திரம் பத்து நாள் திருவிழா, புரட்டாசி சனிக்கிழமைகளில் பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரங்களோடு சேவை. நவராத்திரி விழா, கார்த்திகையில் திருப்பவித்திர விழா, அனுமன் ஜெயந்தி விழா, ராமநவமி விழாக்கள் நடக்கிறது.

இருப்பிடம்: நாகப்பட்டினம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள தெருவில் கோயில் உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டில் இறங்குபவர்கள், பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல பஸ் உள்ளது.

திறக்கும் நேரம்: காலை 7.30- பகல் 12 மணி, மாலை 7 - இரவு 9 மணி.
போன்: 94422- 13741, 04365- 221 374.

காஞ்சியின் கலைக்கோயில்


சென்னையில் வசித்த சுப்பிரமணியன், காஞ்சிப்பெரியவரின் மீது தீவிரபக்தி கொண்டவர். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் சுவாமிகளைச் சந்திக்கத் தவறியதில்லை. 1983 பிப்ரவரியில் மஹாகாவ்ம் முகாமிற்குச் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவர் சுவாமிகளிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார்.

""பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனைத் தரிசிக்க எண்ணுகிறேன். ஆனால், எனக்கு நாளையோடு லீவு முடிந்துவிடுகிறது. நாளை மறுநாள் அலுவலகத்திற்கு அவசியம் செல்லவேண்டும். அதற்குள் பாண்டுரங்கனைத் தரிசிக்கும்பேறு கிடைத்தால் சந்தோஷம் அடைவேன்,'' என்று விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார். பெரியவரும் அவருக்கு ஆசி வழங்கி பிரசாதம் கொடுத்தார்கள். பெரியவரின் அருளால் நாளை உறுதியாக பண்டரிநாதனைத் தரிசிக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு பண்டரிபுரம் கிளம்பினார் சுப்பிரமணியம். ஆனால், அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய தினத்தில் அங்கு கட்டுக்கு அடங்காமல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நீண்ட வரிசையில் மக்கள் தரிசனத்திற்குக் காத்து நின்றனர். நம்பிக்கையோடு வந்தும் பாண்டுரங்கனைக் காண முடியவில்லையே என்ற மனவேதனையில் கோயிலையாவது ஒருமுறை வலம் வரலாம் என்று சுற்றத் தொடங்கினார். கோபுரவாசலுக்கு அருகில் வரும் போது, திட்டிவாசல் என்னும் ஒடுக்கமான வாசலை அடைந்தார். அவ்வாசல் வழியாக ஒருவர் மட்டுமே நுழைய முடியும். அவ்வாசல் வழியாக கோயில் பண்டா(அர்ச்சகர்) ஒருவர் கதவைத் திறந்து கொண்டு சுப்பிரமணியத்தைப் பார்த்து ஹிந்தியில் பேசினார். ""விட்டோபா (பாண்டுரங்கன்) தரிசனம் வேணும்னா என்னோட வா'' என்று அழைத்தார் அந்த பண்டா.

ஆச்சர்யத்துடன் சுப்பிரமணியம் பண்டாவைப் பின்தொடர்ந்தார். ஐந்தே நிமிடத்தில் பாண்டுரங்கன் முன், அவர் நின்று கொண்டிருந்தார். பாண்டுரங்கனும் ருக்மாயியும் புன்னகையுடன் தரிசனம் தந்தனர். சிறு காணிக்கையை பண்டாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அவர் கிளம்பினார். அவரை அழைத்துச் சென்றவர் கோயில் பண்டாவாகவே சுப்பிரமணியனுக்குத் தோன்றவில்லை. பாண்டுரங்க தரிசனம் பெற காஞ்சிப்பெரியவரே உதவியதாகவே நம்பினார். அல்லாடி கிருஷ்ண சாமி ஐயர் மகன் டாக்டர் ராமகிருஷ்ணனும், அவரது மனைவி லலிதா ராமகிருஷ்ணனும் அமெரிக்கா செல்வதற்கு முன் காஞ்சிபுரம் மடத்திற்கு பெரியவரைக் காண வந்திருந்தனர். பெரியவரிடம், ""வரும் 12ம்தேதி புறப்படறோம். பெரியவாளின் அனுக்ரஹம் பூரணமாக வேணும்,'' என்று சொல்லி அந்த தம்பதிகள் வணங்கினர்.

பெரியவர் கண்ணை மூடிக் கொண்டு மவுனத்தில் ஆழ்ந்தார். "" பதினைஞ்சு நாள் கழிச்சு புறப்படு'' என்று கண்டிப்பான தொனியில் சொன்னார். டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. பயணத்தை தள்ளிப்போட இஷ்டமில்லை. பெரியவர் பேச்சை கேட்காமலும் இருக்கமுடியவில்லை. டிக்கட் கான்சலேஷன், அடுத்து ரிசர்வேசன் எப்படி செய்வது? என்று மனக்குழப்பமும் உண்டானது. கடைசியில் அமெரிக்கப்பயணத்தை ஒத்தி வைத்தார்.

மீனம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மும்பையிலேயே தன் பயணத்தை முடித்துக் கொண்டு விட்டது. அதில் பயணம் செய்த நூறு பேரும் இறந்துவிட்டனர். இதனைக் கேள்விப்பட்ட டாக்டர் அல்லாடி ராமகிருஷ்ணனும், அவரது மனைவி லலிதாவும் தாங்கள் பெரியவரால் காப்பாற்றப் பட்டதை எண்ணி ஆனந்தக்கண்ணீர் பெருக்கினர். வரவிருந்த துன்பத்தில் இருந்துகாப்பாற்றிய காஞ்சிப்பெரியவரின் அருளாசியை வியந்து மகிழ்ந்தனர்.

Saturday, December 18, 2010

மச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் !



  • அறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும்.
  • மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும்.
  • சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது.
  • மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும்.
  • நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம்இ கடத்தப்படுதல்இ தீரா நோய் கோர மரணம் ஊரை விட்டு ஒதுக்கப்படுவது உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும்.
  • ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல் குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். மனசாட்சிக்கு அப்பார்பட்ட செயல்களை செய்வார்கள்.
  • குரு மேட்டில் மச்சம் இருந்தால் பெரிய பதவிகளில் இருப்பார்கள் திடீரென தூக்கி எறியப்படுவார்கள்.
  • சுண்டு விரலுக்குக் கீழே இருப்பது புதன் மேடு. அதற்குக் கீழே இருப்பது செவ்வாய் மேடு. செவ்வாய் மேட்டில் உள் செவ்வாய் மேடு வெளிச் செவ்வாய் மேடு என்று இரண்டு வகைப்படும்.
  • உள்செவ்வாய் மேட்டில் கரும்புள்ளி இருந்தால் திடீர் யோகம் உண்டாகும். ஆனால் அதனை அனுபவிக்க துணைவியர் இல்லை என்று புலம்ப வைக்கும்.
  • வெளிச் செவ்வாயில் கரும்புள்ளி இருந்தால் அரசு வழியிலோ அல்லது வழக்குகளிலோ நமது சொத்துகள் பறிபோகும். அதாவது சாலை அமைக்க நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளுதல் வழக்கில் எதிராளிக்குச் சாதகமாக தீர்ப்பு அமைந்து சொத்து கைவிட்டுப் போதல் போன்றவை ஏற்படும்.
  • கட்டை விரலுக்குக் கீழே இருக்கும் மேடு சுக்கிரன் மேடு. ரொம்ப முக்கியமான மேடு. சுக்கிர மேட்டில் மெல்லிய கோடுகள் இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும். புள்ளிகள் இல்லாமல் இருப்பதுதான் நல்லது.
  • புள்ளி இருந்தால் அது ஒழுக்கக் கேடு. பலருடன் செல்வது பல பெண்களிடம் செல்வது போன்றவை ஏற்படும். உடலுறவில் பல்வேறு தவறான உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்கள்.
  • சுக்கிரன் மேட்டிற்கும் வெளிச் செவ்வாய் மேட்டிற்கும் கீழே நடுவே இருப்பது சந்திரன் மேடு. அதாவது உள்ளங்கையின் சுண்டு விரலுக்குக் கீழே கடைசியான மூலைப் பகுதிதான் சந்திரன் மேடு.
  • சந்திரன் மேட்டில் புள்ளிகள் இருந்தால் மனநலம் குன்றியக் குழந்தைகள் நரம்புக் கோளாறு போன்றவை ஏற்படும்.

    ஆம். சிலருக்கு பிறக்கும்போதே மச்சங்கள் ஏற்படுவதில்லை. புள்ளிகள் இயற்கையின் விதிமுறைகளை முன்கூட்டியே எடுத்துக் கூறுவதாகும்.
  • இங்கு வந்தால் இது நடக்கும் இங்கு மச்சம் வந்தால் இந்த யோகம் கிட்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
  • சிலருக்கு பிறக்கும்போதே மச்சம் இருக்கும். சிலருக்கு ஒரு சில காலக்கட்டத்தில் மச்சம் தோன்றும். சனி ராகு சேர்ந்திருந்து சனி திசையில் ராகு புத்தி வந்தால் கரும் புள்ளிகள் தோன்றும்.
  • அதை நாம் தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் சிலதை கூட்டி சிலதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • உடலின் பிறப்பகுதியைக் காட்டிலும் உள்ளங்கையில் ஏற்படக் கூடிய கரும்புள்ளிகள் பொரும்பாலும் வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
  • கருப்பு புள்ளிகள் முதலில் கருப்பாகத் தோன்றாது. பழுப்பு நிறுத்தில்தான் தோன்றும். அப்போது அது நல்ல பலன்களைத் தரும்.
  • அதேப்போல உள்ளங்கையில் இருக்கும் வெண் புள்ளிகள் அதிக பணப் புழக்கம் அறிவுக் கூர்மை எதையும் திட்டமிட்டுச் செய்யும் திறனைத் தெளிவுப்படுத்தும்.
  • பழுப்பு வெண் புள்ளிகள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும் புள்ளிகள் நல்லது. ஆரஞ்சு புள்ளிகளால் திடீர் சொத்து வாங்குவது போன்றவை ஏற்படும்.
  • சிவப்பாக இருப்பவர்களின் கைகளில்தான் ஆரஞ்சு நிற புள்ளிகள் தெரியும். நமக்கு இருந்தாலும் அது பழுப்பு நிறத்திற்கும் ஆரஞ்சுக்கும் வித்தியாசம் தெரியாததால் கண்டுபிடிக்க முடியாது.
  • ஆம் மச்சங்களுக்கும் இது பொருந்தும். பெண்களுக்கு இடது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும் ஆண்களுக்கு வலது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும் ஏற்படும்.
  • முகத்தில் பொதுவாக மச்சம் இல்லாமல் இருப்பது நல்லது என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக உதடு கண் புருவம் இமைகளுக்கு மேலே மச்சம் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.
  • நெற்றிக்கு மேலே தலையில் எல்லாம் மச்சம் இருக்கலாம். ஆனால் முன் தலையில் இருப்பதை விடஇ பின் தலையில் இருக்கலாம்.
  • சிலருக்கு கருப்பையும் பச்சையையும் கலந்த மச்சங்கள் இருக்கும். அது பொதுவாக உடல் பகுதியில் உண்டாகும். அதுபோன்ற மச்சங்கள் உடலின் பின்பகுதியில் ஏற்படுவது நல்லது.
  • என் தாத்தா சில ஜாதகங்களைப் பார்த்ததும் இந்த பெண்ணுக்கு நாக தோஷம் இருக்கிறது என்பார். அந்த பெற்றோர்கள் இல்லையேஇ எந்த தோஷமும் இல்லை என்று சொன்னார்களே என்று கூறுவார்கள். அதற்கு முட்டியில் இருந்து தொடைக்கு இடைப்பட்ட பகுதியில் பச்சையும் கருப்பும் கலந்த நிறத்தில் பாம்பு படம் எடுத்தது போன்ற ஒரு மச்சம் இருக்குமே என்று சொல்வார்கள். அவர்களிடம் கேட்டால் அது உண்மையாக இருக்கும்.
  • லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ சந்திரனுடன் ராகு சேர்ந்தாலோ பூர்வ புண்ணியாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ இதெல்லாம் ஏற்படும்.
  • பொதுவாக கிரகங்களில் பார்த்தால் ராகு கேதுதான் மச்சங்களை வெளிப்படுத்தும் கிரகங்கள். அடுத்ததாக செவ்வாயை சொல்லலாம். செவ்வாய் ரத்தத்தை வெளிப்படுத்தும் கிரகம்.
  • செவ்வாய் நீச்சமாகி ராகு கேதுவுடன் சேர்ந்து சனியின் பார்வை பெற்றாலே உடல் எங்கும் மச்சமாக – அகோரமாக காட்சி அளிப்பார்கள் என்று ஜோதிட அலங்கார நூல் சொல்கிறது. ஒரு உயரிய பதவியில் வகிப்பவருக்கு அதுபோன்ற நிலை உள்ளது.
  • பெண்இ ஆண் உறுப்புகளில் மச்சங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் விரும்பி விபச்சாரத்தில் ஈடுபடுவது விபச்சார விடுதிகளுக்குச் செல்வது போன்ற குணங்கள் இருக்கும்.
  • வாழ வந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம் ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.
  • பொதுவாக ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் இருப்பது அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு என்று நூல்கள் சொல்கின்றன. பெண்களுக்கு வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது.
  • அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இருந்தால் கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் என்று சொல்லலாம். பொதுவாக பின்புறம் இருக்கும் மச்சத்தால் திடீர் பணப்புழக்கம் அதிர்ஷ்மாகவும் இருப்பார்கள் என்று சொல்வார்கள்.
  • பொதுவாக கால்களில் மச்சம் இருப்பவர்களுக்கு காலில் சக்கரம் என்று சொல்வார்கள். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். அது உள்ளங்காலில் இருக்கும் மச்சத்தின் காரணமாகத்தான் இருக்கும். ஏனெனில் உள்ளங்காலில் இருக்கும் மச்சம் ஒரு அசைவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஓடிக் கொண்டே இருப்பார்கள்.
  • மான் போன்று மச்சம் மீன் போன்று மச்சம் என்பதெல்லாம் உண்மையா?
  • உண்மைதான். எந்த நட்சத்திரக் கூறில் ராகு கேது செவ்வாய் எல்லாம் அமைந்திருக்கிறதோ அதன் அடிப்படையில் மச்சத்தின் வடிவம் வேறுபடும். மச்சம் என்றால் மீன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு.
  • மீனைப் போன்று இருக்கும் மச்சம் எல்லாம் விசேஷம். உள்ளங்க¨யில் எல்லாம் மச்ச ரேகை கூட உருவாகும். மச்ச ரேகை உண்டானால் மன்னனாகக் கூட ஆவார்கள்.
  • மீனைப் போன்ற மச்சம் அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு. இப்போதெல்லாம் அது அரிதாகிவிட்டது.
  • நெல்லிக்காய் போல மாவடு போல எல்லாம் மச்சம் உண்டு. உலகத்தில் எங்கோ ஒருவர் இதுபோன்ற மச்சங்கள் கொண்டிருப்பர்.