Friday, December 31, 2010

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!


லட்சுமணன் என்ற வியாபாரிக்கு எந்த நேரமும் வியாபாரத்தைப் பற்றிய கவலைதான். அவரது மனைவி ஊர்மிளா, குடும்பம், குழந்தை என ஒருநாளாவது வீட்டில் இருக்க கூடாதா? என கேட்டுக் அலுத்துப் போனாள். நான் ஒருநாள் வீட்டிலே இருந்தா ஆயிரம் ரூபாய் நஷ்டப்படும். நீ உன் அப்பன் வீட்டில் இருந்தா அதைக் கொண்டு வருவே, என கொடூரமாகப் பேசுவார். இதற்குப் பயந்தே, அவர் மனைவி வாயைத் திறப்பதில்லை. ஒரு சமயம் திடீரென வியாபாரம் குறைந்தது. வியாபாரி கவலையுடன் இருந்தபோது ஒரு சாமியார் கடைப் பக்கமாக வந்தார். தம்பி! நெஞ்சு எரிச்சலா இருக்குது! ஒரு துண்டு இஞ்சி கொடேன். அதை சாறுபிழிந்து குடித்தால் சரியாகி விடும், என காசை நீட்டினார். வியாபாரி அவரிடம் காசு வாங்கவில்லை. சாமி! எனக்கு காசுக்கு பதிலாக, நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்களேன். நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும், என்றார். சாமியும், அப்படி என்னப்பா கேள்வி? என கேட்க, வியாபாரி தனது வியாபாரம் திடீரென குறைந்து விட்டது பற்றியும், அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும், என்றும் சொன்னார். சாமியார் அவரிடம், நீ தர்மம் செய்வாயா? என்றார். அதெல்லாம் செய்றதில்லே சாமி! சரி போகட்டும்... கடவுளை யாவது தினமும் வணங்குவாயா? அதுக்கெல்லாம் எங்கே சாமி நேரம் கிடைக்குது. காலையிலே எழுந்து குளிச்சதும், சாப்பிடக்கூட செய்யாம கடை பக்கம் வந்துடுவேன். அப்படி வியாபாரம் செய்தும் பலனில்லை என்றார் லட்சுமணன்.

சாமியார் சிரித்தார். தம்பி! நீ கடவுளை வணங்கு. ராமா ராமானு கொஞ்ச நேரமாவது சொல்லு. எல்லாம் சரியாயிடும், என்றதும் எனக்கு அதற்கு நேரமில்லையே சாமி, என்றார் வியாபாரி. காலையில் உன் அன்றாடப் பணியைச் சொல்லேன், என்றதும் சாமி! நான் காலையில், எங்க ஊர் ஒதுக்குப்புறத்திலே இருக்கிற வயல் பகுதிக்கு காலைக்கடன் கழிக்க போவேன், போக வர அரை மணி நேரமாகும், என்றதும் குறுக்கிட்ட சாமியார், அது போதும்! அந்த அரை மணிநேரம் நீ ராம நாமத்தைச் சொல்லு. எல்லாம் சரியாயிடும் என்றார். லட்சுமணனும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். ஒருநாள், விண்வெளியில் சஞ்சாரம் செய்த ஆஞ்சநேயர், ராமநாமம் எங்கோ ஒலிப்பதைக் கேட்டு, கீழே பார்த்தார். வியாபாரி, இயற்கை உ<பாதையைக் கழிக்கும் நேரத்தில் அதைச் சொல்வதைப் பார்த்து கோபமடைந்தார். என் பகவானின் நாமத்தை சுத்தமில்லாத நேரத்தில் உச்சரித்தாயா? எனக் கேட்டபடியே இறங்கி வந்து வியாபாரி கன்னத்தில் ஒரு அறை விட்டார். பின்னர் அயோத்தி சென்று விட்டார். அங்கே ஸ்ரீமன் ராமச்சந்திர மூர்த்தியை வணங்கி, அவரது முகத்தை பார்த்தார். கன்னம் வீங்கியிருந்தது. பதறிப்போன ஆஞ்சநேயர், காரணம் கேட்டார். அனுமான் எந்த நேரமாக இருந்தாலும் என்ன! ஏதோ கிடைத்த நேரத்தில் ஒரு பக்தன் என்நாமத்தை சொன்னான். நீயோ அவனை தாக்க கையை ஓங்கினாய். உன்னிடம் அடிபட்டால் அவன் இறந்தல்லவா போயிருப்பான்! அதனால், அவன் கன்னத்தில் உன் கைபடும் முன் நான் குறுக்கே புகுந்து, என் கன்னத்தில் அதைத் தாங்கிக் கொண்டேன், என்றார். பகவானை வணங்க நேரம் காலமும் இல்லை. பகவான், தன் பக்தர்களுக்கு வரும் துன்பத்தைப் பொறுப்பதும் இல்லை.

No comments:

Post a Comment