Friday, December 31, 2010

பிரகலாதனின் முற்பிறவி!



துவாரகையில் வசித்த சிவசர்மா, வேத சாஸ்திரங்களை கற்று புலமை பெற்றவராக திகழ்ந்தார். அவருக்கு ஐந்து மகன்கள். அவர்களுக்கு குருவாக இருந்து வேதத்தை கற்றுக் கொடுத்தார் சிவசர்மா. வேதம் பயில்பவர்கள் குருவுக்கும் பெற்றோருக்கும் மரியாதை செய்ய வேண்டும். தன் மகன்கள் அவ்வாறு இருக்கின்றனரா என சோதிக்க நினைத்தார் சிவசர்மா. அதற்காக ஒரு தந்திரம் செய்தார். தன் மனைவி, இறந்து கிடப்பதைப் போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, மூத்த மகன் யஜ்ஞசர்மாவை அழைத்தார். அவனிடம், உன் தாய் இறந்துவிட்டாள். அவளது உடலை வாளால் வெட்டி வீசி விடு! என்றார். அவனும் அப்படியே செய்தான். பின் ஒரு அழகிய பெண்ணை படைத்து, இரண்டாவது மகன் வேதசர்மாவை அழைத்தார். அவனிடம் அப்பெண்ணை, தனக்கு மணம் செய்து தரும்படி கேட்டார். வேதசர்மா அவளிடம், தன் தந்தையை மணந்து கொள்ளும்படி கேட்டான். அவளோ மறுத்தாள். அவள் மனதை மாற்றுவதற்காக, எதைக் கேட்டாலும் தருவதாகச் உறுதியளித்தான் வேதசர்மா. அவள் அவனது தலையைக் கேட்டாள். அவனும் தன் தலையை வெட்டிக் கொடுத்து விட்டான்.

அடுத்து மூன்றாவது மகன் தர்மசர்மாவை அழைத்தார். அவனிடம் வெட்டபட்ட வேதசர்மாவின் தலையை கொடுத்து, பத்திரமாக வைத்திரு என்றார். அவன் அதை வாங்கி தர்மதேவதையை வணங்கி, அண்ணனை உயிர்ப்பித்தான். நான்காவது மகன் விஷ்ணுசர்மாவை சோதிக்க வேண்டியநிலை. சிவசர்மா அவனிடம், நான் ஒரு அழகியை மணக்க விரும்புகிறேன். ஆனால், வயதாகிவிட்டது. மீண்டும் இளமையைப் பெற அமிர்தம் உண்டால் மட்டுமே முடியும். எனவே, தேவலோகம் சென்று அமிர்தம் பெற்று வா என்றார். அவனும் தேவலோகம் சென்றான். இந்திரன் மேனகை எனும் தேவலோக பெண்ணை அனுப்பி அவனது கவனத்தை திசைதிருப்ப முயன்றான். அவனோ தன் வேலையில் மட்டும் கவனமாக இருந்து, இந்திரனிடம் அமுதம் பெற்று. தந்தையிடம் கொடுத்தான். மகிழ்ந்த சிவசர்மா நான்கு மகன்களையும் அழைத்தார். தன் மனைவியை உயிர்ப்பித்து, தான் அவர்களை பரிசோதித்ததை கூறினார். மகன்களும் மகிழ்ந்தனர். அவர்களை விஷ்ணுலோகத்திற்கு அனுப்பி விட்டார் சிவசர்மா. ஐந்தாவது மகன் சோமசர்மா விஷ்ணுவின் மீது அதீத பக்தியுடையவன்.

ஒருசமயம் சிவசர்மா அவனிடம், நானும், உன் தாயாரும் தல யாத்திரை செல்கிறோம். நாங்கள் திரும்பும் வரையில் இந்த அமுதத்தை பத்திரமாக வைத்திரு! என்று சொல்லி சென்றார். சிலநாட்கள் கழித்து திரும்பிய சிவசர்மா, கலசத்தில் இருந்த அமுதத்தை மறையச் செய்துவிட்டு, மகனிடம் அமுதம் தரும்படி கேட்டார். அமுத கலசத்தை பார்த்த அதில் அமுதம் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். விஷ்ணுவை பிரார்த்தித்தான். அமுதகலசம் நிரம்பியது. அதனை தன் பெற்றோரிடம் கொடுத்தான். அமுதம் உண்ட இருவரும் சோமசர்மாவை வாழ்த்திவிட்டு, விஷ்ணுலோகம் சென்றனர். பின் பூலோகத்தில் தனித்து வாழ்ந்த சோமசர்மா, தவ வாழ்க்கையில் ஈடுபட்டான். ஒருசமயம் அவனது தவத்தை கெடுக்க வந்த அசுரர்களைக் கண்டு பயத்திலேயே உயிர் விட்டான். அந்த அசுரகுலத்தை வேரறுக்க மறுபிறவியில் அதே குலத்தில், இரண்யகசிபுவின் மகன் பிரகலாதனாக பிறந்தான். நரசிம்ம அவதாரம் தோன்றவும் காரணமாக இருந்தான். மகாவிஷ்ணுவின் அருளையும் பெற்றான்.

No comments:

Post a Comment