Thursday, February 10, 2011

தமிழகத்தின் பாரம்பரியச் சின்னம்


தமிழகத்தின் பாரம்பரியச் சின்னம்: கி.பி. 1987ல் யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தஞ்சைப் பெரியகோயிலை அறிவித்தது. இதன் மூலம் இக்கோயிலின் பெருமை உலகத்தின் பலநாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. மனிதமரபினை, பண்பாட்டினைப் பறைசாற்றும் கலைப்பொக்கிஷமாகத் திகழும் இக்கோயிலைக் காண நாள்தோறும் வெளிநாட்டவர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். இக்கோயிலை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கான காரணங்கள்.


1.பொதுவாக பெரிய கோயில்களை பலகாலம் பல மன்னர்கள் கட்டுவர். ராஜராஜன் ஒருவனாலேயே எழுப்பப்பட்ட முழுமையான பிரம்மாண்ட கோயில் இது.


2.ஒரே தன்மையான செந்நிறக்கற்களால் அமைந்த திருக்கற்றளி கோயிலாக அமைந்தது. (கற்களால் ஆன கோயில்களைக் கற்றளி என்பர்)


3.கருவறைக்கு மேலே உயரமான விமானம் அமைத்தது மாறுபட்ட அமைப்பாக இருந்தது.


4.புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.


5.ராஜராஜசோழன், தானேகோயில் கட்டியதற்கான ஆதாரத்தை கல்வெட்டில் பொறித்ததோடு மட்டுமல்லாமல், எந்தெந்தவகையில் பொருள் வந்தது என்பதையும், கோயிலுக்கு யார் யாருடைய பங்களிப்பு, கும்பாபிஷேகம் நடத்திய வரலாறு ஆகியவற்றை கல்வெட்டில் பொறித்துள்ள தகவல்கள்.


6.கற்றளியால் அமைந்த விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டது.
7.தஞ்சைப் பெரிய கோயில் ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல. இது தமிழக வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் பெட்டகமாகத் திகழ்கிறது.
கல்வெட்டுகள் தரும் தகவல்: தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜசோழன் காலம் முதல் மராட்டிய மன்னர் சரபோஜி காலம் வரையான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் கிடைத்த தகவல்களின் சுவையான தகவல்கள்:
* கல்வெட்டுகள் அனைத்திலும் "திருமகள் போல' "செந்திரு மடந்தை' என்று மகா லட்சுமியைக் குறிப்பிட்டே தொடங்குகின்றன.
* ராஜராஜன் மற்றும் அவனுடைய சகோதரி, பட்டத்தரசிகள், சோழ நாட்டு மக்கள் கொடுத்த பொன், பொருள்கள் முழுமையாகப் பட்டியல் இடப்பட்டுள்ளன.
* பெரிய கோயில் நிர்வாக அலுவலராக விளங்கியவர் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்.
* அரண்மனை ராஜகுருவாக இருந்தவர் ஈசான சிவபண்டிதர்.
* கோயில் தலைமை அர்ச்சகராகப் பணிசெய்தவர் பவண பிடாரன்.
* கல்வெட்டில் இடம்பெறும் செய்திகளுக்கு மெய்க்கீர்த்தி என்று பெயர். இதனை செதுக்கியவர் பாளூர்கிழவன்.
* கோயிலைக் கட்டிய தலைமைச் சிற்பி வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜ பெருந்தச்சன்.
* கோயிலில் தேவாரம் பாட 50 ஓதுவார்களும்(பிடாரர்கள்), ஆடல் மகளிராக 400 பேரும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வீடுகளும், பொன்னும், பொருளும், நெல்லும் அளிக்கப்பட்டது.
* கோயிலில் பணிபுரிந்த பணியாளர்களின் எண்ணிக்கை 1500.
*அனைத்து செப்புத் திருமேனிகளையும் ராஜராஜன், அவனது மனைவியர், சகோதரிகள், அரண்மனை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் தனித்தனியாக செய்து தந்துள்ளனர்.
* இரண்டு நிதிநிலைக் கருவூலங்கள் (வங்கி போன்றது) இக்கோயிலில் இயங்கி வந்தன. மன்னன், மக்களிடம் இருந்து பெற்ற பொருளை முதலீடாகக் கொண்டு 12.5 சதவீதம் என்ற வட்டி அடிப்படையில் வணிகர்கள், ஊர் சபையினர், தனியார் கடன் கொடுக்கப்பட்டது. அதில் கிடைத்த வருமானம் கோயிலுக்கு செலவழிக்கப் பட்டது.
* கோயிலுக்கு அளிக்கப்பட்ட பலகோடி மதிப்புள்ள பொன், ரத்தின நகைகள், தங்க வெள்ளிப் பாத்திரங்கள் முதலிய அனைத்தும் முறையாக எடைபோடப்பட்டும், அதற்கான மதிப்பும் துல்லியமாகக் கணிக்கப்பட்டு பதிவு செய்யப் பட்டிருந்தன. அந்த எடைபோடும் தராசைக் கூட "ஆடவல்லான் நிறை' என்று சிவபெருமான் பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடவல்லனாகிய நடராஜப் பெருமான் மீது ராஜராஜன் கொண்டிருந்த பக்தியைக் காட்டுவதாக அமைந்துள்ளது. சுவாமிக்கு அணிவிக்கும் ஒரு முத்துமாலையை எடை போட்டால் கூட "நூல் நீக்கி முத்துமாலையின் எடை'' என்று துல்லியமாக எடை குறிக்கப் பட்டிருப்பது ராஜராஜனின் நேர்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
* தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய இடங்களிலும் கோயிலுக்கு நிலங்கள் இருந்தன. அங்கிருந்து ஆண்டுதோறும் வரும் வருமானம் கருவூல அதிகாரியிடம் பதிவு செய்யப்பட்டன.
* கோயிலில் நெய்தீபம் ஏற்ற பசுமாடுகள், ஆடுகள் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பல இடங்களிலுள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்தன. அங்கிருந்து பெறப்பட்ட நெய்யில் கோயில் தீபங்கள் ஏற்றப்பட்டு வந்தன.
* கோயில் வளாகம் இசை, நடனக் கலைகளின் நிலையமாக விளங்கியது. கலைஞர்கள் மன்னரால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டனர். கலைஞர்களின் வாழ்க்கை இறைவனுக்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டது.
* சோழர்கள் நடத்திய போரில் கிடைத்த பெரும் பொருளும் பெரியகோயிலின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
* கோயில் ஊழியர்களுக்கு அனைத்துச் சலுகைகளும் மன்னரால் வழங்கப்பட்டன. கோயில் பணியாளர்களுக்கு முடிதிருத்து பவர்களுக்கு ""ராஜராஜப்பெரும் நாவிதன்'' என்று பட்டமளித்து கவுரவிக்கப்பட்டது.
* தஞ்சை நகரக் கோயில்கள், அக்கால வீதிகள், பேரங்காடிகள் (பெரியகடைகள்), அரண்மனை ஆகியவை பற்றி தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
* ராஜராஜேஸ்வர நாடகம் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப் பட்டு வந்தது.
* இதுதவிர விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் அளித்த நன்கொடை பற்றிய விபரங்களும் இடம் பெற்று உள்ளன.
* இதுவரை படியெடுக்கப்பட்ட 100 கல்வெட்டுகளில் இச்செய்திகள் இடம்பெற்றுள்ளன.
தஞ்சையின் கலைச்சின்னமான விமானம்: தஞ்சாவூர் நகருக்குள் நுழைந்ததும், நம் கண்ணில் படுவது பெரிய கோயிலில் உள்ள விமானமே. இதை "தென்கயிலாயம்' அல்லது "தட்சிண மேரு விமானம்' என்பர். கயிலாய மலையைப் போலவும், புராணங்களில் சொல்லப்படும் மேரு மலையைப் போலவும் உயரமாக இருப்பதாக இது வர்ணிக்கப் படுகிறது. தரை மட்டத்தில் இருந்து 216 அடி உயரமுடையது. பீடம் முதல் கலசம் வரை கருங் கற்களால் அமைக்கப்பட்டது. வாய் அகலமான கூம்பு வடிவ பாத்திரத்தை கவிழ்த்து வைத்தது போல இருக்கும் இவ்விமானத்தின், உட்புறத்தை, வெற்றிடமாக அமைத்திருப்பது அரிய விஷயமாகும். விமானத்தின் மேலுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட செப்புக்கலசம் 12அடி உயரமுள்ளது. விமானத்தில் நான்கு தளங்கள் உள்ளன. அவற்றிற்கும் மேல் பார்வதியும் சிவபெருமானும், தேவர்களும், கணங்களும் சூழ அமர்ந்துள்ளனர். கயிலாயத்தில் அவர்கள் இருப்பது போல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. உட்கூடாக அமைந்துள்ள விமானத்தை மூடியுள்ள "பிரம்மராந்திரக்கல்' 26.75 அடி சதுரமுள்ளது. இதன் நான்கு மூலைகளிலும் 1.34மீ உயரமும், 1.40மீ நீளமும் உடைய நான்கு நந்திகள் வீற்றிருக்கின்றன. வடமேற்குத் திசையில் பூத உருவம் ஒன்று உள்ளது. கிரீவம் எனப்படும் கழுத்துப்பகுதியும், அதற்கு மேல் அரைக்கோளமாக அமைந்துள்ள சிகரம் எனப்படும் தலைப்பகுதியும் எட்டுப்பட்டை வடிவில் அமைந்துள்ளன. தட்சிண மேரு என்பது "தெற்கே இருக்கும் மலை' என்று பொருள். போன்ஸ்லே வம்ச சரித்திரம்: தஞ்சை பெரிய கோயிலிலுள்ள விநாயகர் சன்னதியின் தென்புற வெளிச்சுவரில் "போன்ஸ்லே வம்ச சரித்திரம்' என்ற தஞ்சை மராட்டிய அரச வம்சாவளியை மன்னர் 2ம் சரபோஜி மராட்டிய மொழியில் கல் வெட்டாக வெட்டச்செய்துள்ளார்.
திருவிழாக்கள்: பெரிய கோயில் பிரதோஷ வழிபாடு மாதம் இருமுறை திரயோதசி திதியன்று நடக்கிறது. பிரதோஷ நேரத்தில் மாலை (4.30 முதல் 6 மணி வரை) மகாநந்தீஸ்வரர் அபிஷேகம், பக்தர்கள் முன்னிலையில் விரைவில் விவாகம் நடக்கவும், ஆயுள் விருத்தி வேண்டியும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையன்று மாங்கல்ய பாக்கியத்திற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. சித்திரை பிரமோற்சவத் திருவிழா 18 நாட்களும், நவராத்திரி விழா 10 நாட்களும், மாமன்னன் ராஜராஜனின் பிறந்த தினமான ஐப்பசி சதய நட்சத்திரத்தன்று சதய விழாவும், மார்கழித் திருவாதிரை விழா பத்து நாட்களும் மாசியில் மகா சிவராத்திரி விழாவும் சிறப்பாக நடக்கிறது.
மராட்டிய மொழியில் பாடல்: கருவூர்த்தேவர் என்னும் அடியார் கி.பி., 11ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் பாடிய பாடல்கள் திருவிசைப்பாவாகும். இப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் 9ம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டு உள்ளது. இதில் தஞ்சைப் பிரகதீஸ்வரரைப் புகழ்ந்து பத்து பாடல்கள் பாடியுள்ளார். இதில் பிரகதீஸ்வரரை ""இஞ்சிசூழ் தஞ்சை இராச ராசேச்சரத்துஈசன்'' என்றே குறிப்பிடுகிறார். முருகன் தலங்களுக்குச் சென்று திருப்புகழ் பாடும் அருணகிரிநாதர் இங்குள்ள கோபுரத்திலிருக்கும் முருக பெருமானைப் போற்றிப் பாடியுள்ளார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், இங்குள்ள கணபதி, பிரகதீஸ்வரர், முருகன் ஆகியோர் மீது பதிகங்கள் பாடியுள்ளார். தஞ்சை மராட்டிய மன்னர் சஹஜி மராட்டி மொழியில் பல கீர்த்தனைகளை பிரகதீஸ்வரர் மீது பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், சின்னையா, பொன்னையா, சிவானந்தம் வடிவேலு ஆகிய நால்வரும் இத்தல இறைவன் மீது கிருதிகளைப் பாடியுள்ளனர்.
நான்கே ஆண்டில் முடிந்த முடிந்த நல்ல பணி: ஆயிரம் ஆண்டுக்கு முன் தமிழர்கள் மிக உயர்ந்த பண்பாட்டுடன் கூடிய சமுதாய மரபுகளைப் பேணிகாத்தனர் என்பதை எதிர்காலச் சந்ததியினருக்குத் தெரிவிக்கவே மாமன்னன் ராஜராஜன் தஞ்சையில் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் எனும் பெரிய கோயிலைக் கட்டி, அதற்குள் தமது நெஞ்சில் குடியிருந்த பிரகதீஸ்வரர் என்னும் பெருவுடையாரை நிறுவினான். கி.பி., 1006ல் கோயில் கட்டும் பணியைத் தொடங்கி, 1010ல் கட்டி முடித்தான். இக்கோயிலின் மூலம் சோழர்கால தமிழகத்தின் வரலாறு, கல்வெட்டியல், அரசியல், கட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், இசை ஆகிய பல்கலைகளுடன் சமுதாயப் பண்பியல் மற்றும் இறைக்கொள்கை ஆகியவற்றை நமக்கு இதன்மூலம் மாமன்னர் எடுத்து கூறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளாக இந்தக்கோயில் தமிழகத்தின் பெருமையை உலகுக்கு அறிவித்துக் கொண்டுள்ளது.
காணாமல் போன பஞ்சதேக மூர்த்தி: சிவபெருமானை முழுமுதல் கடவுளாக போற்றிய ராஜராஜ சோழன் "சிவாயநம' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, இவன் தன் உயிர்மூச்சாகக் கொண்டிருந்தான். சிவபெருமானுக்கு ""பஞ்சதேகமூர்த்தி'' என்னும் பெயரில் செப்புச்சிலை வடித்து பெரியகோயிலில் வழிபட்டு வந்தான். ஐந்து சிலைகள் ஒன்றையொன்று ஒட்டிக் கொண்டு நிற்பது போல அமைக்கப்பட்டிருப்பதே பஞ்சதேக மூர்த்தி. இதன் அமைப்பினையும் சிறப்பினையும் பற்றிய கல்வெட்டு கோயிலில் கிடைத்துள்ளது. தமிழகத்தின் எந்தக்கோயிலிலும் இத்தகைய சிலை இல்லாமல் இருந்தது. கால மாற்றத்தில் இந்தச்சிலை தஞ்சாவூர் கோயிலிலும் இருந்து காணாமல் போய்விட்டது.
காந்திஜியின் கருத்துக்கு மரியாதை செய்த கோயில்: 1939ம் ஆண்டில் மகாத்மா காந்தி ஆதிதிராவிட மக்களை இறைவழிபாட்டுக்குஅனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலராக இருந்த ராஜஸ்ரீ ராஜாராம் ராஜா சாஹேப் சத்ரபதி, தனது பராமரிப்பில் இருந்த தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 88 கோயில்களிலும் ஆதிதிராவிடர்கள் ஆலயப்பிரவேசம் செய்ய எவ்வித தடையும் இல்லை என அறிவித்தார். இச்செய்தியை அறிந்த காந்தியடிகள் 1939ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி நாளிட்டு தமது கைப்பட கீழ்க்கண்ட பாராட்டுக்கடிதத்தை அன்றைய தஞ்சை மராட்டிய அரச குடும்பத்தின் மூத்த இளவரசரும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலருமான ஸ்ரீமந் ராஜஸ்ரீ ராஜாராம் ராஜா சாஹேப் சத்ரபதி அவர்களுக்கு அனுப்பிவைத்தார் என்பது இந்தியச் சமுதாய சீர்திருத்த வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும். ""ராஜஸ்ரீ. ராஜாராம் ராஜா சாஹேப் என்பவர் தற்போது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் மூத்த இளவரசராகவும் பரம்பரை அறங் காவலராகவும் இருக்கிறார். இவரது பொறுப்பில் புகழ்மிக்க பிரகதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 90 கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் அனைத்தையும் தாமாகவே முழுமனதுடன் முன்வந்து ஆதிதிராவிட மக்களுக்குத் திறந்து விட்டு உள்ளதன் மூலமாக தற்போது நடைபெற்று வரும் இந்து புனருத்தாரணப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார். இந்த ராஜா சாஹேப் செய்து உள்ளது மிகவும் தலைசிறந்த நற்செயலாகும். தீண்டாமை என்பது இந்துத்துவத்திலுள்ள கரும்புள்ளி எனக் கருது பவர்கள் அனைவராலும் இவர் பெரிதும் போற்றி பாராட்டப்பட வேண்டியவராவார்,'' என எழுதி கையெழுத்திட்டுள்ளார்.
பெரிய கோயில் நிர்வாகம்: தஞ்சை மராட்டிய அரசரான இரண்டாம் சரபோஜி. 1799ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தஞ்சை பெரியகோயில் உள்ளிட்ட 102 கோயில்களை அவற்றின் சொத்துக்களுடன் நிர்வகிக்கும் உரிமையைப் பெற்றார். 1866ல், இவற்றில் பத்து கோயில்களையும் அவற்றிற்குரிய கொடை நிலங்களையும் ஆங்கிலேய நிர்வாகம் மிகத் தந்திரமாக மராட்டிய அரச குடும்பத்தினரிடமிருந்து பறித்துக் கொண்டது. மீதமுள்ள 88 கோயில்களையும் அவற்றிற்குஉரிய சொத்துக்களையும் நிர்வகிக்கும் உரிமை அளிக்கப்பட்டு நிர்வாகம் தொடர்ந்து மராட்டிய அரசு குடும்பத்தினரால் நடத்தப்பெற்று வருகிறது. 1932ம் ஆண்டு முதல் தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப் பட்ட நிர்வாகத் திட்டத்தின் படி, கோயில் நிர்வாகத்தைப் பரம்பரை அறங்காவலரோடு இணைந்து, தமிழக அரசின் அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. இரண்டாம் சரபோஜிமன்னர் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு ஏராளமான தங்க, வெள்ளிப் பாத்திரங்கள், வாகனங்கள், தேர்கள், சப்பரங்கள் ஆகியவற்றை கொடையாக அளித்துள்ளார். 1803ல் பல திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார். அதன் பின் 177 ஆண்டுகளுக்கு பிறகு 1980, ஏப்ரல் மூன்றாம் தேதியும், தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு 1997ம் ஆண்டு ஜூன் 9ம் தேதியும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பெரியகோயில் சிவாச்சாரியார், பரிசாரகர் உட்பட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது 64 எக்டேர் நஞ்சை நிலங்கள் வில்லியநல்லூர், ஆலங்குடி, இ.நாகத்தி மற்றும் சூரக்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ளன.


உலகப்போர் வந்தாலும் தாக்குதலுக்கு தடை: 1950ம் ஆண்டு பரம்பரை அறங்காவலருடன் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பெரிய கோயிலைப் பராமரித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு மரபியல் சிறப்புகளைக் கண்டறிந்த யுனெஸ்கோ நிறுவனம், இக்கோயிலை உலகப்பாரம்பரியச் சின்னமாக ஏற்று அதற்குரியபட்டத்தையும் வழங்கியுள்ளது. இதன்படி எதிர்காலத்தில் உலகப்போர் மூண்டாலும் இக்கோயிலின் மீது எவ்விதத்தாக்குதலையும் எந்த நாடும் நடத்திச் சேதப்படுத்திவிடக்கூடாது என உலக நாடுகள் அனைத்திற்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது உலக அரங்கில் தமிழனின் பாரம்பரியச் சிறப்புக்கு கிடைத்த கவுரவமாகும்.

No comments:

Post a Comment